கச்சத்தீவு தமிழகத்துக்குச் சொந்தமானது என்பதை வெளிப்படுத்தும் 200 ஆண்டுகால ஆவணங்கள்!!
ராமேஸ்வரம்: தமிழர்களின் பாரம்பரிய மீன்பிடி கடற்பரப்புதான் கச்சத்தீவு என்பதை வெளிப்படுத்தக் கூடிய 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஏராளமான ஆவணங்கள் தமிழகத்தில் இருந்தும் மத்திய அரசு, அது இலங்கைக்கு உரியது என்று பெரும் குண்டைத் தூக்கிப் போட்டிருக்கிறது.
ராமேஸ்வரத்திலிருந்து 12 மைல் தொலையில்அமைந்துள்ளது கச்சத்தீவு பரப்பளவு 285 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த கச்சத்தீவில் கட்டப்பட்டிருக்கும் அந்தோணியார் ஆலயத்தில் தமிழகத் தமிழர்களும் இலங்கைத் தமிழர்களும் ஆண்டுதோறும் கூட்டுப் பிரார்த்தனை நடத்துவது வழக்கம். ஆனால் கடந்த கால் நூற்றாண்டுகாலமாக கச்சத்தீவை தங்களுக்குரித்தானது என்று மார்தட்டிக் கொண்டு தமிழர்களை வேட்டையாடி வருகிறது சிங்கள ராணுவம்.
1822 முதல் சான்றுகள்..
தமிழகத்தின் இராமநாதபுரச் சேதுபதிகளின் ஆட்சியில் கச்சத்தீவு இருந்து வந்தது என்பதற்கு 1822ஆம் ஆண்டிலிருந்து முறையான சான்றுகள் உண்டு.
விக்டோரியா மகாராணி பிரகடனத்தில் கச்சத்தீவு
கிழக்கு இந்தியக் கம்பெனி 1822இல் ‘Isthimirer Sanad' என்ற ஒப்பந்தத்தால் இராமநாதபுரம் இராசாவிடமிருந்து கச்சத் தீவைப் பயன்படுத்திக் கொள்ளும் இசைவைப் பெற்றது. அறுபத்தொன்பது கடற்கரை ஊர்களும் எட்டுத் தீவுகளும் சேதுபதிக்கு உரியனவாக இருந்தன. அந்த எட்டுத் தீவுகளில் ஒன்றுதான் கச்சத் தீவு. சேதுபதியிடம் இருந்த 69 கடற்கரை ஊர்களில் வாணிபம் செய்யவும், தீவுகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் இசைவைப் பெற்றிருந்தது.கச்சத்தீவு இராமநாதபுரம் அரச நிர்வாகத்திற்கு உரியது என்பதை விக்டோரியா மகாராணி தனது பிரகடனத்தில் கூறியிருந்தார்.
1880 ஆம் ஆண்டு ஒப்பந்தம்
தமிழ்நாட்டின் இராமநாதபுரம் பகுதியை ஆண்ட சேதுபதி மன்னர்களுக்கு வருவாய் தரும் தீவாக இருந்தது கச்சத்தீவு. ஜனாப் முகமத் அப்துல் காதர் மரக்காயர் முத்துசாமி பிள்ளை என்பவர்களுக்காகச் கச்சத்தீவு ஐந்தாண்டுகளுக்குக் குத்தகையாக ஒப்பாவணம் செய்து கொள்ளப்பட்டது. நாள்: 23-6-1880, இராமநாதபுரம் துணைப் பதிவாளர்அலுவலகம்; 2-7-1880 ஆம் நாளைய ஆவண எண்: 510/80.
1885 ஆம் ஆண்டு ஒப்பந்தம்
இராமநாதபுரம் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் 4-12-1885ஆம் நாளன்று கச்சத்தீவு குத்தகைக்கு விடப்பட்டு ஒப்பாவணம் செய்யப்பட்டது./ ஆவண எண்: 134/85.
1922-ம் ஆண்டில்..
19-2-1922-இல் இராமநாதபுரத்தின் திவானாக இருந்த ஆர்.சுப்பையா நாயுடு என்பவர், ஆர்.இராஜேசுவர சேதுபதிக்குத் தம் கடல் எல்லைகளைப் பற்றித் தந்த விளக்கங்களில் கச்சத் தீவைப் பற்றிய விவரம் அடங்கியுள்ளது. ஏற்பிசைவு செய்து கொள்ளப்பட்ட நாள் : 27-2-1922.
15 ஆண்டுகால குத்தகைகளில் கச்சத்தீவும் ஒன்று
1913ஆம் ஆண்டிலிருந்து 1928 வரைக்குள்ளான 15 ஆண்டுகளுக்குச் சங்கு, சிப்பி, மீன் வளத்துறைக்கான பிரிட்டிஷ் அரசு விட்ட குத்தகை இடங்களில் கச்சத்தீவும் ஒன்று. 1936 இல் குத்தகை விதிகள் புதுப்பிக்கப்பட்டபோதும் கச்சத்தீவு அந்தக் குத்தகை இடங்களில் ஒன்றாக இருந்தது.
1947 முதல் 1949 வரை குத்தகை
1-7-1947 - இலிருந்து 30-6-1949 வரை கச்சத்தீவு குத்தகையாக விடப்பட்டது. குத்தகை ஒப்பாவணம் பதிவு செய்யப்பட்ட நாள்: 26-7-1947. இராமநாதபுரத் துணைப் பதிவாளர் அலுவலக எண்: 278/48.
1950ம் ஆண்டு கடிதம்
இராமநாதபுரம் இராஜாவின் ஆட்சிச் செயலாளர் 20-4-1950-ல், எஸ்டேட், மேலாளர்க்கு எழுதிய மடலில் (Letter ROC No. 445/A2/50) 1929 - 1945 ஆம் ஆண்டுகளில் மீன்பிடித் துறைகளைப் பற்றிய கோப்புகள் அனுப்பப்பட்டிருக்கின்றன என்றும், அந்தக் கோப்புகளில் கச்சத்தீவைப் பற்றியது ஒன்று என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
நிலப்படத்தில் கச்சத்தீவு
தூத்துக்குடியில் இருந்த முத்து மீன்வளத்துறையின் உதவி இயக்குநரின் கடிதத்தோடு கூடிய (1943) திரு.ஆர். கணேசன் என்பவர் தயாரித்த நிலப்படத்தில் கச்சத் தீவு குறிக்கப்பட்டுள்ளது.