சீன ஆற்றில் கலந்த அம்மோனியக் கழிவு: 100 டன் மீன்கள் செத்து மிதந்தன
பெய்ஜிங்: சீனாவில் உள்ள ஆறு ஒன்றில் அம்மோனியக் கழிவுகள் கலந்ததால், அந்த ஆற்றில் வாழ்ந்து வந்த அத்தனை மீன்களும் பரிதாபமாக பலியாயின. பலியான மீன்கள் கிட்டத்தட்ட 100 டன்களுக்கும் மேல் என கணக்கிடப்பட்டுள்ளது.
சீனாவில் அதிகரித்து வரும் மக்கள் தொகைப்பெருக்கம் மற்றும் வாகனப்பெருக்கத்தின் காரணமாக அங்கு சுகாதார சீர்கேடு அதிகரித்து வருவதாக உலக நாடுகள் எச்சரிக்கை கொடுத்து வருகின்றன. இதனால் அங்கு இளவயதில் மரணம் என்பது அதிகமாக காணப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சமீபத்தில் தனியார் தொழிற்சாலை ஒன்றில் இருந்து வெளியேறிய கழிவு நீர் அருகில் இருந்த ஆற்றில் கலந்ததால், அங்கிருந்த மீன்கள் செத்து மிதந்த காட்சி அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது.
அம்மோனியக் கழிவுகள்...
சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள பியுஹே ஆற்றில், அருகில் உள்ள தனியார் இரசாயன தொழிற்சாலையின் அம்மோனிய கழிவுகள் கலந்தன. இதனைத் தொடர்ந்து அந்த ஆற்றில் இருந்த மீன்கள் எல்லாம் செத்தன.
பனித்தட்டுகளாக மிதந்த மீன்கள்...
ஆற்றின் மேல்பகுதியில் மீன்கள் செத்து மிதக்கும் தகவல் அறிந்து விரைந்து வந்த சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள், இறந்த மீன்களை ஆற்றில் இருந்து வெளியேற்றினர்.
100 டன் மீன்கள்...
ஆற்றில் செத்து மிதந்த மீன்களின் அளவு 100 டன்களைத் தாண்டும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
மீனவர்களின் வாழ்வாதாரம்....
ஆற்றில் வாழ்ந்த மீன்கள் அனைத்தும் இறந்ததால், அப்பகுதியில் வாழும் 2000 மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.
பன்றிப்பண்ணை.....
ஏற்கனவே, இந்த வருடத் தொடக்கத்தில் ஷாங்காய் மாகாண ஆற்றில் இதேபோன்று 16 ஆயிரம் பன்றிகள் செத்து மிதந்து வந்த சம்பவம் அதிர்ச்சியூட்டியது. அப்போது அந்த ஆற்றின் கரையில் இருந்த பன்றி பண்ணை மீது குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ரசாயன தொழிற்சாலை மீது ....
அதேபோன்று, இப்போது 100 டன் மீன்கள் இறந்துபோனதற்கு ஹூபெய் மாகாண ஒரு ரசாயன தொழிற்சாலை மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தொடர் பிரச்சினைகள்...
பொருளாதாரத்தில் முன்னேறி வரும் சீனா இதுபோன்ற சுற்றுச்சூழல் மாசு அடையும் தொடர் பிரச்சினைகளைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.