45 வருடங்களுக்கு முன் இறந்த 28 வயது தந்தைக்கு இறுதிச் சடங்குகள் செய்த 52 வயது மகன்
சண்டிகர்: சண்டிகரில் கடந்த 45 வருடங்களுக்கு முன் விபத்தில் பலியான 28 வயது இந்திய விமான அதிகாரியின் உடலுக்கு, நேற்று அவரது 52 வயது மகன் இறுதிச்சடங்குகளைச் செய்து முடித்துள்ளார்.
சண்டிகரைச் சேர்ந்தவர் ஹவில்டர் ஜைக்மைல் சிங் என்ற இந்திய விமான அதிகாரி. இவர் கடந்த 1968ம் ஆண்டு,மேற்கு இமாச்சல் அருகே, தெற்கு டாக்கா பனிமலை மேல் ஏஎன்- 32 ரக விமானத்தில் பயணம் செய்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது விமானம் விபத்தில் சிக்கியது.
அவர் மரணாமடைந்தது உறுதியான போதும் ஹவில்டரின் சடலம் கிடைக்கவில்லை. மரணமடைந்த போது ஹவில்டருக்கு மணமாகி, 7 வயதில் ஒரு மகன் இருந்தான்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று ஹவில்டரின் விமானம் விபத்துக்குள்ளான இடத்தில் இந்திய விமான படை வீரர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கிட்டத்தட்ட 45 ஆண்டுகளுக்கு முன்னர் பலியான ஹவில்டரின் சடலத்தை அவர்கள் கண்டுபிடித்தனர்.
அதனைத் தொடர்ந்து சொந்த ஊரான சண்டிகருக்கு கொண்டுவரப்பட்டது ஹவில்டரின் சடலம். 7 வயதில் தனது தந்தையை இழந்த ஹவில்டரின் மகன் ராமசந்திராவிற்கு தற்போது வயது 52. தந்தை ஹவில்டரின் சடலத்தைப் பெற்றுக் கொண்ட ராமச்சந்திரா, சகல மரியாதையோடு நேற்று மதியம் மிர்பூர் ரீஜினல் செண்டர் என்னும் இடத்தில் வைத்து தனது தந்தைக்கு இறுதிச்சடங்குகளைச் செய்தார்.
இத்தனை ஆண்டுகள் கழித்து தனது தந்தைக்கு இறுதி சடங்கு செய்ய கிடைத்த வாய்ப்பு குறித்து கண்ணீர் மல்க பேசிய ராமச்சந்திரா, ‘ இது போன்ற ஒரு வாய்ப்பு வேறு யாருக்குமே கிடைக்காது' எனத் தெரிவித்துள்ளார்.