ஹவாலா பணம்: ரூ.1 .25 கோடி சென்னையில் இருந்து கேரளாவுக்கு ரயிலில் கடத்திய நால்வர் கைது
மலப்புரம்: சென்னையில் இருந்து கேரளாவிற்கு ரூ.1.25 கோடி ரூபாய் பணத்தை கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையிலிருந்து கேரள மாநிலம் மலப்புரத்திற்கு வியாழக்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு ஒரு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது.
இந்த ரயிலில் வாலிபர்கள் சிலர் கட்டு கட்டாக பணத்துடன் பயணம் செய்வதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அவர்கள் கேரள மாநிலம் ஒற்றபாலம் ரயில் நிலையத்தில் ரயிலை நிறுத்தி திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது ரயிலின் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் 4 வாலிபர்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் அமர்ந்திருந்தனர்.
அவர்களை அதிகாரிகள் பிடித்து விசாரித்தனர். முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் அதிகாரிகள் அவர்களை சோதனை செய்தனர்.
அப்போது 4 வாலிபர்களின் இடுப்பு மற்றும் முதுகு புறங்களிலும், உள்ளாடையிலும் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுக்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டு பிடித்தனர்.
4 பேரிடமும் மொத்தம் 1.29 கோடி ரூபாய் இருந்தது. அந்த ரூபாய்க்கான ஆதாரங்களோ அல்லது ரசீதுகளோ எதுவும் அவர்களிடம் இல்லை. இதையடுத்து அதிகாரிகள் அவர்கள் 4 பேரையும் பிடித்து கோழிக்கோடு போலீசில் ஒப்படைத்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர்கள் முகம்மது (வயது 43), ஜம்சிங் (24), ஹைனுதீன் (25), முகம்மது அஷரப் (36) என்று தெரிந்தது.
இவர்கள் கோழிக்கோட்டை அடுத்த குன்னுமழை பகுதியைச் சேர்ந்த அகமது என்பவருக்கு இந்த பணத்தை கொண்டு செல்வதாக தெரிவித்தனர். இந்த பணம் ஹவாலா பணமா? அல்லது கடத்தல் தங்கம் விற்ற பணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த சில வாரங்களாகவே தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு கோடிக்கணக்கில் பணம் கடத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பலரையும் தமிழக போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.