கொல்கத்தா அரசு மருத்துவமனையில் 4 நாட்களில் 32 சிசுக்கள் மரணம்!
மேற்கு வங்க மாநிலம் தலைநகர் கொல்கத்தாவில் அமைந்துள்ள பி.சி. ராய் மருத்துவமனை மாநிலத்திலேயே மிகப் பெரிய குழந்தைகள் மருத்துவமனை ஆகும். இங்கு கடந்த 4 நாட்களில் 32 சிசுக்கள் வரை மரணமடைந்துள்ளதான அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குழந்தைகள் உயிரிழப்புக்கு மருத்துவமனையின் கவனக்குறைவு காரணமா அல்லது நவீன மருத்துவ வசதிகளின் குறைவு காரணமா என்பது பற்றி விசாரிக்க இரண்டு நபர் குழுவை மேற்கு வங்க அரசு அமைத்துள்ளது.
ஆனால் குழந்தைகள் இறப்புக்கு மருத்துவமனை மட்டுமே காரணம் அல்ல என்று சுகாதாரத்துறை கூறியுள்ளது. மற்ற மருத்துவமனைகளிலிருந்து அனுப்பப்படுகிற மிக மோசமான இறக்கும் நிலையில் உள்ள நோயாளிகளால் இந்த இறப்பு நிகழ்ந்துள்ளது என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
ஊட்டச்சத்து குறைவு
இதனிடையே ஊட்டச்சத்துக் குறைந்த உணவை சாப்பிட்டதால் இந்த குழந்தைகள் இறந்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
கொல்கத்தா அரசு மருத்துவமனைகளில் குழந்தைகள் இறப்பது இது முதன் முறையல்ல. கடந்த மே மாதம் ஊட்டச்சத்து குறைவால் 16 குழந்தைகள் இறந்துள்ளன என்று சுகாதாரத் துறை தெரிவிக்கிறது.
அதேபோல் கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18 குழந்தைகள் இதேமாதிரி ஊட்டச்சத்து குறைவால் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.