பொருட்காட்சிகள் பொழுதுபோக்கிற்காக அல்ல.. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
தமிழக அரசின் சார்பில் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பொருட்காட்சி தொடக்க விழா நடந்தது. விழாவிற்கு தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமை வகித்தார். செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் குமரகுருபரன் முன்னிலை வகித்தார். கலெக்டர் ரவிக்குமார் வரவேற்று பேசினார்.
விழாவில், தமிழக செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பொருட்காட்சியை தொடங்கி வைத்தும், மாவட்டத்தின் பல்வேறு துறைகளின் சார்பில் தேர்வு செய்யப்பட்டிருந்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது,
பொருட்காட்சியில் அமைக்கப்பட்டுள்ள 26அரசுத்துறைகளின் ஸ்டால்களை பொதுமக்கள் பார்வையிட்டு அரசின் சாதனைகளை அறிந்து கொள்ளலாம். பொருட்காட்சியை காணவரும் பொதுமக்கள் அரசு மக்களுக்கு அளித்துள்ள திட்டங்களையும், அந்த திட்டத்தில் எப்படி பெறலாம், எவ்வாறு பயன்அடையலாம் என்பதற்கான வழிமுறைகளை அனைத்தையும் எளிதில் அறிந்து கொள்ளலாம்.
அரசின் சார்பில் அமைக்கப்படும் பொருட்காட்சியானது மக்களின் பொழுதுபோக்கிற்காக மட்டும் அமைக்கப்படவில்லை. அரசின் மக்களுக்காக கொண்டுவந்துள்ள திட்டங்களையும், சாதனைகளையும் அறிந்து கொள்ளவதற்காக அமைக்கப்படுகிறது.
ஏழை-எளிய மக்கள் பசியாறிட ஏதுவாக விலையில்லா அரிசி அரசால் வழங்கப்படும் நேரத்தில், நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் 20ரூபாய்க்கு ஒருகிலோ அரிசி வழங்கும் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாணவர்களுக்கு காலணிகள் முதல் மடிக்கணினி வரை அனைத்தும் அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது.முதல்வர் கல்விக்காக பலஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளார் என்றார் அவர்.