முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தைத் திறந்து வைப்பாரா ஜெயலலிதா?
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஈழத் தமிழர்களுக்கும், ஈழ இனப்படுகொலைக்கு எதிராகவும் உரத்துக் குரல் கொடுத்து வரும் முதல்வர் ஜெயலலிதாதான் இந்த முற்றத்தைத் திறந்து வைக்கப் பொருத்தமானவர் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வருவதால் முதல்வரை வைத்தே இதைத் திறக்கலாம் என்ற கருத்து வலுப்பட்டு வருகிறதாம்.
தஞ்சை அருகே உள்ள விளார் கிராமத்தில் இந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட அர்ஜுனன் தபசு சிலை போல, இந்த முற்றத்திலும், ஒரே கல்லில் ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை சிற்பமாக வடித்துள்ளனர்.
முள்ளிவாய்க்காலில் நடந்த கடைசி நேர கொடூரக் கொலைகள், படுகொலைகளை நினைவூட்டும் காட்சிகள் இதில் அடங்கியுள்ளன.
மேலும் இந்த நினைவிடத்தில் ஈழத்துக்காக தீக்குளித்து உயிர் நீ்த்த முத்துக்குமார் உள்ளிட்டோரின் சிலைகளும், தமிழறிஞர்கள், தமிழுக்காக பாடுபட்டு உயிர் நீத்தவர்களின் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நினைவிடம் தற்போது திறப்புக்கு தயாராகி விட்டது. இதை திறப்பது தொடர்பான நிகழ்ச்சி குறித்து தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் பலரும் கலந்து கொண்டனர். அப்போதுதான் முதல்வர் ஜெயலலிதாவை வைத்து இந்த நினைவிடத்தைத் திறக்கலாம் என்று ஆலோசனை தரப்பட்டதாம்.
ராஜபக்சேவை இனவெறியர், இனப்படுகொலை செய்தவர் என்று பகிரங்கமாக கண்டித்தவர் ஜெயலலிதாதான். ஈழத்தில் நடந்தத இனப்படுகொலை என்று கூறி சட்டசபையில் தீர்மானமும் கொண்டு வந்தார். ராஜபக்சேவை போர்க்குற்றவாளி என்றும் அவர்தான் அறிவித்தார். ராஜபக்சேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்தி தண்டிக்க வேண்டும் என்றும் சட்டசபையில் அவர் தீர்மானம் போட்டார். மேலும் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக பல நடவடிக்கைகளை அவர் எடுத்துள்ளார்.
20-வது ஆசிய தடகளப் போட்டியை சென்னையில் நடத்த முடிவானபோது, இலங்கை இதில் கலந்து கொண்டால் போட்டியை நடத்த அனுமதிக்க முடியாகது என்றும் அறிவித்து போட்டியையே ரத்து செய்ய வைத்தவர் ஜெயலலிதா. மேலும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் யாரும் கலந்து கொள்வதை அனுமதிக்க முடியாது என்றும் பகிரங்கமாக அறிவித்தார். அவரது அறிவிப்பின் விளைவாக சென்னையில்நடந்த ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்கள்யாரும் பங்கேற்க முடியாமல் போனதையும்கூட்டத்தில் சுட்டிக் காட்டியுள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதியை விட ஈழ விவகாரத்தில் ஜெயலலிதா துணிச்சலுடனும், பகிரங்கமாகவும், வெளிப்படையாகவும் செயல்பட்டு வருகிறார். எனவே அவர்தான் இதைத் திறப்பதற்குப் பொருத்தமானவர் என்று தெரிவிக்கப்பட்டதாம்.
இதையடுத்து முதல்வருக்கு இதுதொடர்பாக அழைப்பு விடுத்து கடிதம் போயுள்ளதாம். இருப்பினும் முதல்வரிடமிருந்து இதுவரை பதில் வரவில்லையாம். இருப்பினும் முதல்வர் இதை ஏற்பார் என்ற நம்பிக்கையில் தமிழர் அமைப்புகள் உள்ளன.
லோக்சபா தேர்தலுக்கு முன்பாக இந்த முற்றத்தை திறந்து வைத்தால் தமிழகம் முழுவதும் உள்ள ஈழத் தமிழ் அனுதாபிகளின் வாக்குகள் தனது கட்சிக்குக் கிடைக்கும் என்பதால் இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் வரக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதை விட முக்கியமானது, ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளையையும் இந்த விழாவுக்கு அழைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அவர் நிச்சயம் வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications