15 வயது சிறுமி கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம்.. சிக்கிய 2 சிறுவர்கள்.. விசாரணையில் ஷாக் தகவல்!
போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் 15 வயது சிறுமி ஒருவர் இரண்டு சிறுவர்கள் உட்பட 7 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து 5 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களுக்கு சொந்தமான வீடுகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்தால் அது இடித்து அகற்றப்படும் என்றும் மாநில அரசு கூறியுள்ளது.
தர்மபுரிக்கு வண்டியை விட்ட எடப்பாடி பழனிசாமி! பஞ்சமியில் வராஹி வழிபாடு! தோல்வி கூட தோற்று விடுமாம்!
கடத்தல்
இந்தியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அம்மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம்(அக்.28) இந்த சிறுமி 7 பேரால் கடத்தப்பட்டுள்ளார்.
விசாரணை
பின்னர் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அவர் வீசப்பட்டுள்ளார். இதனையறிந்த அப்பகுதி மக்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபடத் தொடங்கினர். இதனையடுத்து காவல்துறையினர் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்கையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
கூட்டு பாலியல் பலாத்காரம்
அதாவது சிறுமி கடத்தி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்ட விவகாரத்தில் இரண்டு சிறார்களும் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து 5 பேரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். இவர்கள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்வதற்கு முன்னர் அவருக்கு போதை பொருளை கொடுத்துள்ளனர். இதனால் சிறுமி சுயநினைவை இழந்துள்ளார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து குற்றம்சாட்டப்பட்டுள்ள மூவரின் வீடுகளுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கைது
அதில், வீடுகள் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டிருந்தால் அவை இடிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மக்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., லக்ஷ்மண் சிங், "7 பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில் 5 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று கூறியுள்ளார். சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாரும் தப்ப முடியாது என்றும், அனைவரும் கைது செய்யப்படுவார்கள் எனவும் மாவட்ட நிர்வாகம் உறுதியளித்ததையடுத்து சாலை மறியல் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
பட்டப்பகலில் 15 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு இரண்டு சிறார்கள் உட்பட 7 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஆளும் பாஜக அரசுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.