முஸ்லிம் மாணவனை தீவிரவாதி என அழைத்த பேராசிரியர் - "இதுலாம் பெரிய விஷயமே கிடையாது" - அமைச்சர் பதில்
பெங்களூர்: பெங்களூரில் முஸ்லிம் மாணவனை கல்லூரி பேராசிரியர் ஒருவர் தீவிரவாதி கசாப்பின் பெயரை கூறி அழைத்த விவகாரம் பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில், "இது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது" என கூலாக பதிலளித்திருக்கிறார் கர்நாடகா பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பி.சி. நாகேஷ்.
"ராவணன் உள்ளிட்ட சில பெயர்களை கூறி அழைக்கும் போது எந்தப் பிரச்சினையும் எழுவதில்லை. ஆனால், குறிப்பிட்ட மதம் சார்ந்த பெயரை கூறி அழைத்தால் மட்டும் ஏன் அது தேசிய பிரச்சினையாக மாறுகிறது" எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்நிலையில், அமைச்சர் பி.சி. நாகேஷின் இந்தக் கருத்தானது சம்பந்தப்பட்ட பேராசிரியரின் நடவடிக்கையை நியாப்படுத்தும் வகையில் உள்ளது என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

'கசாப்' என அழைத்த பேராசிரியர்
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள மணிப்பால் கல்லூரியில் அண்மையில் நடந்த சம்பவம்தான் தற்போது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இக்கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை பாடம் நடத்திக் கொண்டிருந்தார். பாடம் முடிந்த பிறகு அவர் சமூக விஷயங்கள் குறித்து விவாதிக்க ஆரம்பித்திருக்கிறார். அப்போது திடீரென அந்த வகுப்பில் படிக்கும் ஒரு முஸ்லிம் மாணவனை 'கசாப்' என்ற மும்பை தாக்குதல் தீவிரவாதியின் பெயரை கூறி அந்த பேராசிரியர் அழைத்தார்.

சஸ்பெண்ட் நடவடிக்கை
இதனால் கோபம் அடைந்த அந்த மாணவன், "எப்படி நீங்கள் என்னை தீவிரவாதி எனக் கூறலாம்? நீங்கள் ஒரு பேராசிரியர். அனைவரின் முன்னிலையிலும் நீங்கள் என்னை தீவிரவாதி எனக் கூறுகிறீர்கள். ஒரு முஸ்லிமாக இருந்துகொண்டு, தினம் தினம் இதுபோன்ற வெறுப்பு பேச்சுகளை எதிர்கொள்வது வேடிக்கையான விஷயம் அல்ல" என அந்த மாணவர் கூறினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், சம்பந்தப்பட்ட பேராசிரியருக்கு கண்டனமும், எதிர்ப்பும் குவியவே, அவரை சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது.

"அவ்வளவு பெரிய விஷயம் அல்ல"
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பி.சி. நாகேஷிடம் செய்தியாளர்கள் நேற்று கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், "பேராசிரியர் மாணவனை பார்த்து அந்த பெயரை கூறி அழைத்திருக்கக் கூடாது. ஆனாலும், இது ஒன்றும் அவ்வளவு பெரிய விஷயம் அல்ல. நாம் கூட பலரை ராவணன் என்றும், சகுனி என்றும் அழைத்திருப்போம். சட்டசபை விவாதங்களில் கூட இந்த வார்த்தையை நாங்கள் பயன்படுத்தி இருக்கிறோம். ஆனால், அப்போது எல்லாம் இது பெரிய பிரச்சினை ஆகவில்லை.

தேசிய பிரச்சினையாக மாறுவது ஏன்?
ஆனால், குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த கசாப் என்ற பெயரை கூறி அழைத்தால் மட்டும் அது தேசிய அளவில் ஏன் பிரச்சினையாக மாறுகிறது என எனக்கு தெரியவில்லை. இருந்தபோதிலும், அந்த பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார். அத்துடன் இந்த விவகாரத்தை முடித்துவிட வேண்டும். மாறாக சில அரசியல் கட்சிகள், இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்கின்றன. வாக்கு வங்கிக்காக இதுபோன்ற செயல்களில் அவை ஈடுபடுகின்றன" இவ்வாறு பி.சி. நாகேஷ் கூறினார்.












Click it and Unblock the Notifications