கர்நாடகாவில் பரபரப்பு.. 2 டோஸ் வேக்சின் போட்ட.. 66 மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு
பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் 2 டோஸ் கொரோனா வேக்சின் போட்டுக்கொண்ட 66 மாணவர்களுக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் தார்வாடு மாவட்டத்தில் SDM மருத்துவக் கல்லூரி உள்ளது. அங்குள்ள மாணவர்கள் சிலருக்கு கொரோனா அறிகுறிகள் இருந்துள்ளது.
இதையடுத்து அங்கு படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மகாராஷ்டிர அரசியலில் தலைகீழ் மாற்றம்! தேவேந்திர பட்னாவிஸை ஒதுக்கும் பாஜக? வீழ்ச்சியில் 'நட்சத்திரம்'
மாணவர்களுக்குச் சோதனை
SDM மருத்துவக் கல்லூரி சமீபத்தில் கல்லூரி நிகழ்ச்சி நடந்துள்ளது. அதன் பின்னரே சில மாணவர்களிடையே கொரோனா அறிகுறிகள் தெரியத் தொடங்கியுள்ளது. இதையடுத்து கல்லூரியில் படிக்கும் 400 மாணவர்களில் 300 பேரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அங்குப் படிக்கும் 66 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
66 மாணவர்கள்
இந்த 66 மாணவர்களும் முழுமையாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் ஆகும். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கல்லூரியில் உள்ள 2 விடுதிகளுக்குச் சீல் வைக்க மாவட்ட சுகாதார அலுவலர் மற்றும் துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். 66 மாணவர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2 டோஸ் வேக்சின் போட்டவர்கள்
அனைத்து மாணவர்களும் 2 டோஸ் வேக்சின் செலுத்தியவர்கள் என்பதால் அவர்களுக்குத் தீவிர கொரோனா பாதிப்பு இல்லை. தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள மாணவர்கள் தேவைப்பட்டால், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே சிகிச்சை பெறுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஒரே கல்லூரியில் படிக்கும் வேக்சின் போட்ட 66 மாணவர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்கள்
இது தொடர்பாக தார்வாடு துணை கமிஷனர் நித்தேஷ் பாட்டீல் கூறுகையில், "மீதமுள்ள 100 மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, இரண்டு விடுதிகளுக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் மாணவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படும். மருத்துவ சோதனையைச் செய்யாத மீதமிருக்கும் 100 மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
எப்படி பரவியது
சமீபத்தில் இந்த கல்லூரியில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று. அதன் மூலமாகவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சோதனை செய்யப்பட்டுள்ளது. இடைப்பட்ட காலத்தில் கல்லூரியை விட்டு வெளியே சென்றவர்கள் குறித்தும் தகவல்களைச் சேகரித்து வருகிறோம். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படும். அனைத்து மாணவர்களும் 2 டோஸ் வேக்சின் போட்டவர்கள் என்பதால் தீவிர வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை" என்று அவர் தெரிவித்தார்.
கொரோனா வேக்சின்
கொரோனா வேக்சின் தீவிர கொரோனா பாதிப்பையும் உயிரிழப்புகளையும் பெரியளவில் கட்டுப்படுத்துகின்றன. இருப்பினும் வைரஸ் பாதிப்பு ஏற்படுவதையும் வைரஸ் பரவலையும் தடுப்பூசிகளைக் கட்டுப்படுத்துவதில்லை. இதனால் தான் வேக்சின் போட்ட பிறகும் கூட பொதுமக்கள் பொது இடங்களுக்குச் செல்லும் போது, மாஸ்க் அணிவது மற்றும் தனிமனித இடைவெளியைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.