நடிகர் அர்ஜுன் மீது தவறில்லை.. பாலியல் வழக்கில் திருப்பம்.. அறிக்கை அளித்த பெங்களூரு போலீஸ்
பெங்களூரு: பிரபல நடிகர் அர்ஜுன் மீது நடிகை ஸ்ருதி ஹரிஹரன் கொடுத்த பாலியல் தொல்லை புகாரில், எந்த உண்மையும் இல்லை எனவும், அர்ஜுன் குற்றமற்றவர் என காவல்துறையினர் அறிக்கை அளித்துள்ளனர்.
பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் பலர் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை மீ டூ என்ற பிரச்சாரம் மூலம் வெளிப்படையாக தெரிவித்து வந்தனர். பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த புகாரை அடுத்து இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை இயக்குனர் சுசி கணேசன் மீது பாலியல் புகாரை முன்வைத்தார்.
இதே போல பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் குறித்து மீ டூ இயக்கம் மூலம் வெளிப்படுத்தி வந்தனர். அந்த வரிசையில் தமிழில் நெருங்கி வா முத்தமிடாதே, சோலோ , அமெரிக்க மாப்பிள்ளை, வேதம், நிபுணன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்த ஸ்ருதி ஹரிஹரன், நடிகர் அர்ஜுன் மீது பாலியல் புகார் கொடுத்தார்.
அதாவது தமிழில் நிபுணன் என்ற பெயரில் வெளியான விஸ்மயா படப்பிடிப்பில் ஒத்திகை காட்சி ஒன்றில் அர்ஜுன் தவறான முறையில் தன்னிடம் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டினார். இது தொடர்பாக கடந்த 2018 ஆம் ஆண்டு பெங்களூரு கப்பன் பார்க் காவல் நிலையத்தில் ஸ்ருதி ஹரிகரன் புகார் அளித்திருந்தார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நிலையில் தன் மீது பொய் குற்றச்சாட்டு கூறுவதாக நடிகர் அர்ஜுன் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் நடிகர் அர்ஜூன், நடிகை ஸ்ருதி ஹரிகரன் மற்றும் பிற நடிகர் நடிகைகளிடம் போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை சேகரித்தனர்..
கடந்த மூன்று ஆண்டுகளாக விசாரணை நடந்த நிலையில் இந்த வழக்கின் போதிய ஆதாரம் இல்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து வழக்கின் விசாரணை அறிக்கையை பெங்கபெங்களூரு மெட்ரோ பாலிட்டன் முதலாது கூடுதல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த கப்பன் பார்க் போலீசார் , நடிகை ஸ்ருதி ஹரிஹரன் கூறியது போல் அர்ஜுன் மீது எவ்வித தவறும் இல்லை எனவும், அர்ஜுன் குற்றமற்றவர் என்ற அறிக்கையை தாக்கல் செய்துள்ளனர்.
இதனிடையே நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாக கர்நாடக திரைப்பட வர்த்தக சபையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.