திடீர் திடீர்ன்னு எரியுதாம், வெடிக்குதாம்.. மின்சார ஸ்கூட்டர்களை திரும்ப பெறும் ஓலா! பரபர அறிவிப்பு
பெங்களூர்: சமீபகாலமாக மின்சார ஸ்கூட்டர்கள் திடீரென தீப்பிடித்து எரிந்து வருகின்றன. இதில் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் தான் ஓலா நிறுவனம் சார்பில் 1441 மின்சார பைக்குகள் திரும்ப பெறப்பபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக மின்சார பைக்குகள் திடீரென தீப்பிடித்து எரிகின்றன. இதில் பலி ஏற்பட்டுள்ளதோடு சிலர் தீக்காயமடைந்துள்ளனர்.
இதனால் தற்போது மின்சார வாகனங்களை பயன்படுத்துவதில் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் மின்சார வாகனங்கள் தீப்பற்றி எரிவதற்கான காரணத்தை கண்டறிய மத்திய அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஆய்வு பணி மேற்கொண்டு வருகிறது.

மத்திய அமைச்சர் எச்சரிக்கை
இதற்கிடையே மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதி கட்காரியும் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியுள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛இந்தியாவில் வாகனங்களில் பயணிக்கும் ஒவ்வொருவரின் உயிரும் பாதுகாக்கப்பட வேண்டும். மின்சார ஸ்கூட்டர்களை உரிய தரத்துடன் நிறுவனங்கள் தயாரிக்க வேண்டும். தரக்கட்டுப்பாடுகளையும், பொதுமக்களின் பாதுகாப்பையும் அந்த நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும். கவனக்குறைவாக இருக்கும் நிறுவனங்களுக்கு அபராதம் வசூலிக்கப்படும்'' என எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

ஓலா நிறுவனம் அறிவிப்பு
இந்நிலையில் தான் ஓலா மின்சார ஸ்கூட்டர் நிறுவனம் இன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த மாதம் மார்ச் 26ல் புனேவில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் எஸ் ஒன் ப்ரோ எனும் வகையை சேர்ந்த மின்சார ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்தது. இதுபற்றி விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

1441 ஸ்கூட்டர்கள் திரும்பெற முடிவு
அதன்படி புனேவில் தீப்பற்றி எரிந்த ஸ்கூட்டரின் எஸ் ஒன் புரோ பேட்சில் தயாரிக்கப்பட்ட 1441 மின்சார ஸ்கூட்டர்களையும் ஓலா நிறுவனம் திரும்ப பெற்று ஆய்வு செய்ய உள்ளது. திரும்ப பெறும் இந்த ஸ்கூட்டர்களை நிறுவனத்தின் சர்வீஸ் என்ஜினியர்கள் முழுவதுமாக பரிசோதிக்க உள்ளனர். பேட்டரி, தெர்மல், பாதுகாப்பு அம்சங்கள் குறித்து நன்கு ஆய்வு மேற்கொள்ள உள்ளனர் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

3வது நிறுவனம் அறிவிப்பு
இதற்கு முன்பு ஒகினவா நிறுவனம் 3000 ஆயிரம் மின்சார ஸ்கூட்டர்களையும், பியூர் ஈவி நிறுவனம் 2000 ஆயிரம் மின்சார ஸ்கூட்டர்களையும் திரும்ப பெறப்போவதாக அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக 3வது நிறுவனமாக ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Recommended Video

புனேவில் நடந்தது என்ன
கடந்த மாதமான மார்ச் 26ல் மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் ஓலா ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது. வணிகவளாகத்துக்கு வெளியே நின்ற ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் இதுதொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலானது. இது பெரும் விவாதப்பொருளானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications