அடர்ந்த காடு.. தெரியாமல் உள்ளே நுழைந்த இரண்டரை வயது பெண் குழந்தை.. 4 நாட்கள் கழித்து.. அதிசயம்!
பெங்களூர்: பெலகாவி மாவட்டம் கானாப்பூரில் சப்போலி அடர் வனப்பகுதிக்குள் வழித்தவறி இரண்டரை வயது பெண் குழந்தை சென்றது. போலீசார், வனத்துறையினர் தீவிரமாக தேடிய நிலையில் 4வது நாள் மயங்கிய நிலையில் குழந்தை மீட்கப்பட்டது. இங்கு விமானப்படை வீரர்களே உயிர்பிழைக்க சிரமப்பட்ட நிலையில் வனவிலங்குகளுக்கு மத்தியில் உணவு, தண்ணீரின்றி இரண்டரை வயது குழந்தை உயிர்பிழைத்துள்ளது.
பெலகாவி மாவட்டம் கானாப்பூரில் சப்போலி வனப்பகுதி உள்ளது. இங்கு புலிகள், யானைகள், சிறுத்தைகள் மற்றும் கரடிகள் மற்றும் கொடிய விஷப்பாம்புகள் வாழ்கின்றன.
இந்த வனவிலங்குகள் அவ்வப்போது கிராமத்துக்குள் நுழைகின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த புலி ஜம்போதி கிராமத்தில் பெண் ஒருவரை அடித்து கொன்றது.
சிறையில் கைதிகளுடன் ஒரு நாள் செலவிட ஆசையா.. அப்ப ரூ 500 கட்டுங்கள்.. பெலகாவி சிறை ஆஃபர்
மாயமான குழந்தை
இந்த சப்போலி வனப்பகுதியையொட்டி தான் சிரேகானி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வருபவர் சிவாஜி ஹம்பர். இங்கு கோவில் திருவிழா நடந்தது. இதற்காக சிவாஜி ஹம்பர் வீட்டுக்கு உறவினரான சிவாஜி தனது மனைவி சுனிதா, இரண்டரை வயது மகள் அதிதி ஆகியோருடன் வந்தார். ஏப்ரல் 26ல் வீட்டில் அனைவரும் திருவிழாவுக்காக தயாராகி கொண்டிருந்தனர். அப்போது வீட்டுக்கு பின்புறம் விளையாடிய குழந்தை அதிதி திடீரென்று மாயமானார்.
வனத்தில் தீவிர தேடுதல்
மாயமான குழந்தையை பெற்றோர்கள் பக்கத்து வீடுகளில் தேடிப்பார்த்தனர். அவர் கிடைக்கவில்லை. இதனால் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. கிராமத்தை சுற்றி அடர் வனப்பகுதி உள்ளதால் வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், வனத்துறையினர், பொதுமக்களுடன் குடும்பத்தினர் சிறுமியை தேடிப்பார்த்தனர். அடர் வனப்பகுதிக்குள் குழந்தை சென்று இருக்கலாம் என்பதால் அங்கு அவர்கள் தீவிரமாக தேடினர். ஆனாலும் குழந்தை கிடைக்கவில்லை.
3 நாள் கைக்கொடுக்காத தேடும் பணி
இந்த வனப்பகுதியில் புலி, யானை, சிறுத்தை உள்பட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இதனால் குழந்தையை பத்திரமாக மீட்க வேண்டும் என ஒவ்வொருவரும் முயற்சித்தனர். 3 நாள் தேடுதல் பணியிலும் குழந்தை கிடைக்கவில்லை. வீட்டில் இருந்து ஏறக்குறைய 2 கிலோமீட்டர் தூரத்துக்கு தேடுதல் பணி நடந்தும் பயணளிக்கவில்லை. இதனால் 4வது நாள் தேடுதல் பணியின்போது வனவிலங்குகளிடம் சிக்கி குழந்தை இறந்திருக்கலாம் என சிலர் நினைத்தனர்.
இளைஞர்கள் மாற்று முயற்சி
இந்த வேளையில் கிராமத்து இளைஞர்கள் மாற்று முயற்சியை கையாண்டனர். அதாவது குழந்தையை வனவிலங்குகளிடம் இருந்து மீட்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தேடும் பணியை ஒவ்வொருவரும் வேகமாகவும், பதற்றத்துடன் மேற்கொண்டனர். இதனால் குழந்தை ஏதேனும் புதருக்குள் இருந்தாலும் கண்ணில் படாமல் இருந்திருக்கலாம். மேலும் இரண்டரை வயது குழந்தை 2 கிலோமீட்டர் தொலைவு வனப்பகுதிக்குள் வர வாய்ப்பில்லை என அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் வீட்டில் இருந்து 2 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் மீண்டும் அங்குலம் அங்குலமாக தேட துவங்கினர். இவர்களுடன் வனத்துறையினர், பொதுமக்கள் கைகோர்த்தனர்.
மயங்கிய நிலையில் மீட்பு
இந்த வேளையில் இலைகள் நிறைந்த பகுதியில் அடர் செடிகளுக்கு மத்தியில் அதிதி மயங்கிய நிலையில் கிடந்தாள். உடலில் பல இடங்களில் கொசுக்கள் கடித்து இருந்தன. குழந்தைக்கு தண்ணீர் கொடுத்து மயக்கத்தில் இருந்து மீட்டனர். அதன்பிறகு உணவு வழங்கினர். உடனடியாக டாக்டர் வரவழைக்கப்பட்டார். டாக்டர் பரிசோதித்ததில் 4 நாட்கள் உணவின்றி இருந்ததால் தான் குழந்தை மயங்கியதாகவும், வேறு பிரச்சனை இல்லை எனவும் தெரிவித்தார். இதையடுத்து அடுத்த 2 நாட்களில் சிறுமி இயல்பு நிலைக்கு திரும்பினார்.
முன்பு நடந்தது என்ன?
கர்நாடகம்-கோவா எல்லையில் அமைந்துள்ள இந்த வனப்பகுதியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய விமானப்படை விமானத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் ஒரு பைலட் காயமடைந்த நிலையில் இன்னொருவர் உதவி கேட்க அங்கிருந்து சென்றார். இவ்வாறு சென்ற அவர் மாயமானார். வனவிலங்கு அவரை தாக்கி கொன்று இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்நிலையில் தான் இந்த வனப்பகுதியில் இரண்டரை வயது குழந்தை 4 நாட்கள் அடர் வனத்தில் உணவு, தண்ணீர் இன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.