"பிரிவினைவாதம்.." யூனிபார்ம் தவிர எந்த உடையையும் பள்ளிகளில் ஏற்க முடியாது.. சொல்கிறார் பாஜக சிடி.ரவி
பெங்களூர்: ஹிஜாப் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை அளித்து உள்ள நிலையில், இந்த விவகாரத்தில் பாஜக முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளது.
இந்தாண்டு தொடக்கத்தில் கர்நாடகாவில் இருக்கும் பியூ கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வரத் தடை தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
பள்ளிகளுக்கு யூனிபார்ம் மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று கர்நாடக அரசு தெரிவித்தது. மேலும், இந்த விவகாரத்தில் கர்நாடக ஐகோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டது.

ஹிஜாப் சர்ச்சை
இந்த வழக்கை விசாரணை செய்த கர்நாடகா ஐகோர்ட், ஹிஜாப் தடையை ரத்து செய்ய மறுத்துவிட்டது. இஸ்லாம் மதத்தில் ஹிஜாப் அத்தியாவசியமானது இல்லை என்றும், கல்வி நிறுவனங்களில் சீருடை விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் கர்நாடக ஐகோர்ட் தனது தீர்ப்பில் கூறி இருந்தது. கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்டிலும் மேல்முறையீடு செய்யப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்து உள்ளது. இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி ஹேமந்த் குப்தா, கர்நாடக ஐகோர்ட்டின் தீர்ப்பு சரி என்று தெரிவித்தார். அதேநேரம் கர்நாடக ஐகோர்ட் தீர்ப்பைத் தள்ளுபடி செய்த நீதிபதி சுஷாந்து துலியா, ஹிஜாப் தடை செல்லாது என்று தீர்ப்பு அளித்து உள்ளார்.

சிடி ரவி
இதையடுத்து இந்த விவகாரம் 3 நீதிபதி அல்லது 5 நீதிபதி அமர்வுக்கு மாற்றப்படும் என்று கூறப்படுகிறது. இந்தச் சூழலில் ஹிஜாப் தடை தொடர்பாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் சிடி ரவி சில முக்கிய தகவல்களைத் தெரிவித்து உள்ளார். பிரிவினைவாதத்தை ஊக்குவிக்க மத சுதந்திரத்தைப் பயன்படுத்த முடியாது என்று சி.டி.ரவி தெரிவித்து உள்ளார். மேலும், பள்ளிகளில் ஹிஜாப் அணிவது இதையே ஊக்குவிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிரிவினைவாதம்
சிடி ரவி மேலும் கூறுகையில், "பள்ளிகளில் யூனிபார்ம் என்பது மாணவர்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தவே உள்ளது. புர்கா அல்லது ஹிஜாப் போன்ற பிரச்சனைகளின் மூலம் பிரிவினைவாதம் ஊக்குவிக்கப்படுகிறது என்று நான் நம்புகிறேன். இந்த எண்ணமே இந்தியாவின் பிரிவினைக்குக் காரணம். இது தான் படிப்படியாகப் பயங்கரவாதமாக மாறுகிறது. எனவே நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

அனுமதிக்க முடியாது
ஹிஜாப் அணிவதும் அணியாமல் இருப்பதும் பாஜகவுக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை. பள்ளிகளில் என்ன அணிய வேண்டும் என்பதுதான் இப்போது இங்கு பிரச்சினை.. பள்ளிகளில் ஹிஜாப் உள்ளிட்ட பிற ஆடைகள் எதையும் அனுமதிக்க முடியாது. அங்குச் சீருடைகள் மட்டுமே இருக்க வேண்டும். பள்ளிகளில் ஹிஜாப் உள்ளிட்ட எந்தவொரு ஆடையையும் எங்களால் அனுமதிக்க முடியாது" என்று அவர் தெரிவித்தார்.

கர்நாடகா
கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் குறித்துத் தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது. ஒரு புறம் ஹிஜாப் உள்ளிட்ட எந்த ஆடைகளை அணிய வேண்டும் என்பதைப் பெண்களே முடிவு செய்ய வேண்டும் என்று கூறி வருகின்றனர். அதேநேரம் மற்றொரு புறம் பள்ளிகளில் யூனிபார்ம் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று மற்றொரு தரப்பினரும் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications