பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. பிரஜ்வல் - ரேவண்ணாவுக்கு பெரிய சிக்கல்.. எஸ்ஐடி நோட்டீஸ்
பெங்களூர்: பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா எம்பி மற்றும் அவரது தந்தையான எம்எல்ஏ ரேவண்ணா ஆகியோரை விசாரணைக்கு அழைத்து எஸ்ஐடி நோட்டீஸ் வழங்கி உள்ளது. இதனால் இருவருக்கும் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஜேடிஎஸ் கட்சியின் தலைவர் தேவேகவுடா. முன்னாள் பிரதமர். தற்போது ராஜ்யசபா எம்பியாக உள்ளார். தேவேகவுடாவின் மூத்த மகன் ரேவண்ணா ஹாசன் மாவட்டம் ஹொலேநரசிப்புரா எம்எல்ஏவாக உள்ளார். ரேவண்ணாவின் மகன் பிரஜ்வல் ரேவண்ணா ஜேடிஎஸ் சார்பில் ஹாசன் எம்பியாக உள்ளார். தற்போதைய லோக்சபா தேர்தலிலும் ஹாசனில் பாஜக கூட்டணியில் ஜேடிஎஸ் வேட்பாளராக பிரஜ்வல் போட்டியிட்டுள்ளார்.

இந்த தொகுதிக்கு கடந்த 26ம் தேதி தேர்தல் முடிந்தது. இதற்கிடையே தான் பிரஜ்வல் ரேவண்ணா, பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் 300க்கும் அதிகமான பெண்களை மிரட்டி அவர் பாலியல் தொல்லை கொடுத்து அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த வீடியோக்களை அவர் மொத்தமாக சேமித்து வைத்த நிலையில் தற்போது அது வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது. கர்நாடகா மட்டுமின்றி இந்தியா முழுவதும் இந்த பிரச்சனை என்பது பூதாகரமாகி உள்ளது. இதையடுத்து பிரஜ்வெல், ஜெர்மனிக்கு எஸ்கேப் ஆகியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட பெண் மாநில மகளிர் ஆணையத்தில் புகாரளித்த நிலையில் எஸ்ஐடி எனும் சிறப்பு விசாரணை குழுவினர் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் தான் விசாரணைக்கு ஆஜராகும்படி பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை ரேவண்ணாவுக்கு எஸ்ஐடி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதாவது பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை ரேவண்ணா ஆகியோர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர்களின் வீட்டில் வேலை செய்த முன்னாள் பெண் ஊழியர் ஹோலேநரசிப்புரா போலீசில் புகாரளித்தார்.
இதையடுத்து ரேவண்ணா, மகன் பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோர் மீது 354ஏ (பாலியல் தொல்லை), 354 டி (பின்தொடருதல்), 506 (மிரட்டுதல்), 509 (பெண்ணின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்துதல்) உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தான் விசாரணைக்கு ஆஜராகும்படி எஸ்ஐடி சார்பில் பிரஜ்வல் ரேவண்ணா, ரேவண்ணா ஆகியோருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இது பிரஜ்வல் மற்றும் ரேவண்ணா ஆகியோருக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. தற்போது பிரஜ்வல், ஜெர்மனியில் உள்ளதால் அவர் விசாரணைக்கு ஆஜராக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. அவர் விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் கைது நடவடிக்கைக்கு தேவையான நடவடிக்கையை போலீசார் மேற்கொள்வார்கள். அதேபோல் ரேவண்ணா, எஸ்ஐடி விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இந்த விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு உறுதியானால் ரேவண்ணாவும் கைது செய்யப்படுவார். இதனால் பிரஜ்வல் மற்றும் ரேவண்ணா ஆகியோர் பெரும் பிரச்சனையை எதிர்கொள்ள உள்ளனர்.












Click it and Unblock the Notifications