ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டப்படி அத்தியாவசியமில்லை: கர்நாடக உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
கர்நாடகாவில் கல்வி நிலையங்களுக்கு ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதித்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அம்மாநில உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.
பெங்களூரு: ஹிஜாப் அணிவது இஸ்லாமிய சட்டப்படி அத்தியாவசியமானதல்ல என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கர்நாடகாவில் கல்வி நிலையங்களுக்கு ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதித்ததற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அம்மாநில உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. தீர்ப்பு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்தது செல்லும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
Recommended Video
கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிவதற்கு கடந்த பிப்ரவரி மாதம் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, உடுப்பி மாவட்டம் குந்தாப்புராவில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புக்கு வந்தனர். எனினும் அவர்கள் பள்ளி வளாகத்திற்கு அனுமதிக்கப்படவில்லை.
பின்னர், கர்நாடகாவின் பிற பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்களிலும் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனிடையே, ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவியரில் சிலர் காவி துண்டு அணிந்து வரத் தொடங்கியதால் பதற்றம் அதிகரித்தது.

உயர்நீதிமன்றத்தில் மனு
இந்நிலையில், ஹிஜாப் தடையை எதிர்த்து மாணவிகள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். தலைமை நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதி கிருஷ்ணா எஸ் தீட்சித் மற்றும் நீதிபதி ஜேஎம் காஜி அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது.

கர்நாடகா ஹைகோர்ட் தீர்ப்பு
ஹிஜாப் தடை தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விஜயபுராவில், பள்ளிகள், பல்கலைக்கழகங்களுக்கு முந்தைய கல்லூரிகள், பட்டயக் கல்லூரிகள் அல்லது பிற கல்வி நிறுவனங்களின் 200 மீட்டர் சுற்றளவுக்குள் எந்த வகையிலும் கூடுவது, போராட்டம் நடத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

ஹிஜாப் தடை செல்லும்
தீர்ப்பை வாசித்த நீதிபதிகள், ஹிஜாப் என்பது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசிய விசயமல்ல என்று கூறினர். கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என்றும் தீர்ப்பளித்த நீதிபதிகள் கர்நாடக அரசின் அரசாணையை உயர்நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டனர். ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மாணவிகள் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்தனர்.

144 தடை உத்தரவு
உத்தர கன்னடா மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு வெளியேயும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீர்ப்பு காரணமாக கல்புர்க்கி பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உடுப்பி மற்றும் சிவமொக்காவில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications