கல்வி நிலையங்களில் ஹிஜாப் தடை தொடருமா.. நீங்குமா.. 2 நாளில் லிஸ்ட் செய்கிறது உச்சநீதிமன்றம்
பெங்களூர்: ஹிஜாப்புக்கு தடை தொடர்பான கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்க்கும் மேல்முறையீட்டு மனுவை 2 நாளில் பட்டியலிடுவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா கூறினார்.
கர்நாடக பியூ கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. சில இடங்களில் வன்முறைகள் வெடித்து சர்ச்சையை ஏற்படுத்தின. ஹிஜாப் தடையை நீக்க வேண்டும் எனக்கூறி உடுப்பி மாவட்ட கல்லூரி மாணவிகள் பெங்களூரில் உள்ள கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
முதலில் ஒரு நீதிபதி அடங்கிய அமர்வு விசாரித்தது. அதன்பிறகு தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி அமர்வு வழக்கை பிப்ரவரி 10 முதல் விசாரிக்க துவங்கியது. 11 நாள் விசாரணைக்கு பிறகு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு
மார்ச் 15ல் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி தீர்ப்பு வழங்கினர். ஹிஜாப் என்பது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசிய விஷயமல்ல எனக்கூறிய உயர்நீதிமன்றம், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனக்கூறி கர்நாடக அரசு பிப்ரவரி 5ல் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது. மேலும் ஹிஜாப் தடையை எதிர்க்கும், ஹிஜாப் அணிய அனுமதி கோரும் மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேல்முறையீடு
இதையடுத்து 6 மாணவிகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே மார்ச் 16ல் கூறினார். இதற்கு உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. மேலும் தலைமை நீதிபதி என்வி ரமணா ‛‛எங்களுக்கு நேரம் கொடுங்கள். ஹோலி விடுப்புக்கு பிறகு பார்ப்போம் '' என்றார். அதன்பிறகு அடுத்த சில நாட்களில் தேர்வுகளை காரணம் காட்டி மூத்த வழக்கறிஞர் தேவுதத் காமத் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணாவிடம், அதே கோரிக்கையை வலியுறுத்தினார். அப்போது, ‛‛தேர்வுகளுக்கும், இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இதை உணர்ச்சிபூர்வமாக்க வேண்டாம் '' என தலைமை நீதிபதி என்வி ரமணா கூறினார்.

2 நாளில் பட்டியல்
இதன் தொடர்ச்சியாக இன்று மூத்த வழக்கறிஞர் மீனாட்சி அரோரா, ஹிஜாப் தடை தொடர்பான மேல்முறையீட்டு மனுக்கள் குறித்து தலைமை நீதிபதி என்வி ரமணாவிடம் கூறினார். அப்போது அவர், ‛‛இன்னும் 2 நாட்கள் காத்திருங்கள். மனு பட்டியலிடப்படும்'' எனக்கூறினார். இதன்மூலம் ஹிஜாப் மேல்முறையீட்டு மனு பட்டியலிடப்பட உள்ளது.

தேர்வுகளை புறக்கணித்த மாணவிகள்
இதற்கிடையே கர்நாடகத்தில் 10ம் வகுப்பு தேர்வு முடிவடைந்த நிலையில் பியூ மாணவர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. ஹிஜாப் தடையால் மாணவிகள் சிலர் தேர்வை புறக்கணித்து செல்லும் நிலை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் தற்போது மேல்முறையீட்டு மனுவை பட்டியலிட உள்ளதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications