மைசூரில் உச்சக்கட்ட பதற்றம்.. திப்பு சுல்தான் மசூதி எங்க இடம்! வாசலில் திரண்ட இந்துத்துவா அமைப்பினர்
பெங்களூரு: கர்நாடகாவின் மைசூர் நகரில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற திப்பு சுல்தான் மசூதியை உரிமைகோரி வரும் இந்துத்துவா அமைப்பினர் திடீரென அந்த மசூதி முன்பாக காவி கொடிகளுடன் திரண்டு வருவதால் பெரும் பதற்றத்துடன் அப்பகுதி காணப்படுகிறது.
பாபர் மசூதியை ராம ஜென்ம பூமி அரக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தொடர்ந்து எனது அடுத்த இலக்கு என சில மசூதிகளை பாஜகவினர் மற்றும் இந்துத்துவ அமைப்புகள் சுட்டிக்காட்டினர்.
குறிப்பாக உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி ஞான்வாபி மசூதி, மதுரா ஈத்கா மசூதியையும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் கோயில் அருகே முகலாய பேரரசர் அவுரங்கசீப் அவர்கள் கட்டிய ஞானவாபி மசூதி இருக்கிறது.
சென்னையின் பசுமை போச்சே.. விழுந்த 694 மரங்கள்! 5 பேர் பலி -புயல் சேதம் எவ்வளவு? அமைச்சர்கள் விளக்கம்
ஞானவாபி விவகாரம்
இந்த மசூதி இந்து கோயிலை இடித்து கட்டப்பட்டதாக இந்துத்துவ அமைப்பு சார்பில் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வாரணாசி நீதிமன்ற உத்தரவின்படி நடத்தப்பட்ட ஆய்வில் உள்ள சிவலிங்கம் போன்ற வடிவம் இருந்ததாக கூறி அதற்கு சீல் வைக்க உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மதுரா ஈத்கா மசூதி
இதனை தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தின் மதுராவில் பழமையான ஈத்கா மசூதி இடத்தில் கிருஷ்ணர் பிறந்தார் என்று கூறி வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கும் தற்போது விசாரணையில் உள்ள நிலையில், காசிக்கு சென்ற பாஜக ஆதரவாளரான நடிகை கங்கனா ரனாவத், "அயோத்தியில் ராமர் எங்கும், எதிலும் நிறைந்து இருப்பதை போன்றே மதுராவில் கிருஷ்ணரும், காசியில் சிவனும் நிறைந்து உள்ளனர். ஹரஹர மஹாதேவ்." என கூறியது சர்ச்சையானது.
திப்பு சுல்தான் மசூதி
இதேபோல் கர்நாடகா மாநிலம் மைசூருவில் உள்ள புகழ்பெற்ற திப்பு சுல்தான் மசூதி என்று அழைக்கப்படும் ஈத்கா மசூதியை சங்பரிவார அமைப்பினர் குறிவைத்து உள்ளார்கள். இந்துக்களிடம் இந்த மசூதியை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் 108 மனுக்களை அவர்கள் வழங்க கடந்த நவம்பர் மாதமே முடிவு செய்தார்கள்.
பெரும் பதற்றம்
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் அந்த மசூதிக்கு வெளியே கட்டப்பட்டு இருந்த பச்சை கொடியை அகற்றிவிட்டு காவி கொடியை ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அவரை சிலர் தாக்கியதாகவும் அவர்கள் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி அவர்கள் அந்த மசூதி முன் இரவு திடீரென திரண்டு உள்ளனர்.
காவி கொடியோடு முழக்கம்
இந்து ஜக்ரான் வேதிகா என்ற அமைப்பினர் மற்றும் இந்துத்துவ அமைப்பை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மசூதிக்கும் முன் திரண்டு தங்களிடம் மசூதியை ஒப்படைக்குமாறு முழக்கமிட்டு வருகின்றனர். காவி கொடிகளுடன் மசூதிக்கு வெளியே முழக்கங்களை எழுப்பிய அவர்களால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல அங்கு குவியும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
தொடரும் மத பதற்றம்
கர்நாடகாவில் முன்னதாக பெங்களூருவில் உள்ள ஈத்கா திடலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட இந்துத்துவா அமைப்பினர் அனுமதி கோரிய நிலையில், அதற்கு தடையில்லை என கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. கர்நாடகாவில் கடந்த ஆண்டு வெடித்த ஹிஜாப் பிரச்சனை, ஹலால் சர்ச்சையால் மத பதற்றம் ஏற்பட்ட நிலையில் திப்பு சுல்தான் மசூதிக்கு இந்துத்துவா அமைப்பினர் குறிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.