3000 அடி உயரம்! பெங்களூரில் ஒரு விமானம் மீது மோத சென்ற இன்னொரு விமானம்.. 426 பேரின் உயிரை காத்த ஹீரோ
பெங்களூர்: பெங்களூர் விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் அருகருகே மோதும் நிலையில் சென்ற சம்பவம் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு வேலை பார்க்கும் விமான நிலைய பணியாளர் ஒருவர்தான் இந்த விமான விபத்தை தடுத்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.. இது தொடர்பான சுவாரசிய பின்னணியை வாருங்கள் பார்க்கலாம்..
பெங்களூரில் இருக்கும் கேம்பகவுடா சர்வதேச விமான நிலையம் இந்தியாவில் இருக்கும் பிஸி விமான நிலையங்களில் ஒன்று. கடந்த 7ம் தேதி இந்த விமான நிலையத்தில் மிகப்பெரிய விபத்து ஏற்பட இருந்து அது கடைசி நொடியில் தவிர்க்கப்பட்டது.
இந்த விமான நிலையத்தில் அருகருகே இருக்கும் இரண்டு ரன் வேக்களில் இருந்து ஒரே நேரத்தில் இரண்டு விமானங்கள் புறப்பட்டதுதான் பிரச்சனைக்கு காரணம்.
இந்தியாவுக்குள் 5 கி.மீ ஊடுருவி தமிழக மீனவர்களை கைது செய்த சிங்கள கடற்படை-இலங்கை அதிகாரிகள் ஒப்புதல்
இண்டிகோ விமானம்
இரண்டு இண்டிகோ விமானங்கள் அன்று ஒரே நேரத்தில் பெங்களூரில் இருந்து புறப்பட்டது. அதில் ஒன்று கொல்கத்தா நோக்கி செல்ல வேண்டியது. இன்னொன்று புவனேஷ்வர் நோக்கி செல்ல வேண்டியது. இரண்டும் கிட்டத்தட்ட ஒரே ரூட் கொண்டது. இப்படிப்பட்ட விமானங்கள் ஒரே நேரத்தில் அருகருகே டேக் ஆப் செய்தால் ஒரு விமானத்தின் பின் பகுதியில் இன்னொரு விமானம் மோதி மிகப்பெரிய விபத்து ஏற்படும்.
ஏடிசி
இது போன்ற விபத்துகளை தவிர்க்கத்தான் விமான நிலையத்தில் ஏடிசி எனப்படும் ஏர் டிராபிக் கண்ட்ரோலர் இருப்பார்கள். இவர்கள்தான் எந்த விமானம் எப்போது தரையிறங்க வேண்டும், எப்போது எந்த விமானம் டேக் ஆப் செய்ய வேண்டும் என்று முடிவு செய்வார்கள். சில விமானங்களை டிராபிக் கருதி கடைசி நேரத்தில் வானத்திலே சில நிமிடங்கள் யூ டர்ன் அடித்து பறக்கும்படி கூறுவார்கள்.
என்ன நடந்தது?
இப்படிப்பட்ட நிலையில் பெங்களூரில் 6E-455 மற்றும் 6E 246 ஆகிய இரண்டு விமானங்கள் அன்று ஒரே நேரத்தில் டேக் ஆப் செய்துள்ளது. இரண்டும் அடுத்தடுத்து இருந்த வடக்கு மற்றும் தெற்கு ரன் வேயில் இருந்து புறப்பட்டு உள்ளது. இரண்டும் ஒரே திசையில் செல்ல வேண்டி இருந்ததால்.. ஒரு விமானத்தின் பின் பக்கத்தில் இன்னொரு விமானம் மோதி இருக்கும்... சில நிமிடம் தாமதித்து இருந்தாலும் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கும். இரண்டு விமானங்களும் மோத வேண்டிய நேரத்தில்.. கடைசி நொடியில்.. விமான நிலையத்தில் இருந்த ரேடார் கண்ட்ரோலர் கொடுத்த சிக்னல் காரணமாக இரண்டு விமானமும் வேறு வேறு திசையில் திரும்பியது.
திரும்பியது
ரேடார் கண்ட்ரோலர் இருக்கையில் இருந்த 42 வயது லோகேந்திர சிங் என்ற நிர்வாகி கொடுத்த கடைசி நேர அலர்ட் காரணமாக இரண்டு விமானமும் எதிர் எதிர் திசையில் திரும்பியது. இதனால் இரண்டு விமானமும் மோதுவது தவிர்க்கப்பட்டது. 426 உயிர்கள் இதனால் பெரும் விமான விபத்தில் இருந்து காக்கப்பட்டது. ஏடிசி செய்ய வேண்டிய வேலையை ரேடார் கண்ட்ரோலர் இருக்கையில் இருந்த லோகேந்திர சிங் துரிதமாக செய்து.. கொடுத்த சிக்னல் காரணமாக விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
பாராட்டுக்கள்
இவரின் செயலுக்கு விமான நிலைய அதிகாரிகள் இடையே பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் விமான கட்டுப்பாட்டு இயக்குனரகம் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறது. பெங்களூர் விமான நிலையத்தில் உள்ள வடக்கு மற்றும் தெற்கு ரன் வேக்கள் ஒரே நேரத்தில் டேக் ஆப் செய்ய பயன்படுத்தப்படாது. ஏதாவது ஒன்று டேக் ஆப் செய்யவும். இன்னொன்று லேண்ட் செய்யவும் பயன்படுத்தப்படும். அன்று வடக்கு ரன் வே லேண்ட் செய்யவும், தெற்கு ரன் வே டேக் ஆப் செய்யவும் பயன்படுத்தப்பட்டது.
ஷிப்ட் முடிந்தது
இந்த நிலையில் ஏடிசி ஊழியர் ஒருவர் டிராபிக் கட்டுப்பாட்டிற்காக தெற்கு ரன்வேவை மூடிவிட்டு வடக்கு ரன் வேவை டேக் ஆப் செய்ய அனுமதி அளித்து இருக்கிறார். ஆனால் இதை பற்றி அந்த தெற்கு ரன் வே கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு அவர் தெரிவிக்கவில்லை. இந்த ஊழியரின் ஷிப்டும் முடிந்துவிட்டது. இதனால் தெற்கு ரன்வேயில் இருந்தவர்களுக்கு அந்த ரன்வேவை மூட வேண்டும் என்று தெரியவில்லை. இதுதான் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
ரன் வே குழப்பம்
ஒரு பக்கம் ஏற்கனவே வடக்கு ரன் வேவை டேக் ஆப் செய்ய ஓபன் செய்யப்பட்ட நிலையில் இன்னொரு பக்கம் தெற்கு ரன் வேவும் டேக் ஆப் செய்ய ரெடியாக இருந்துள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில்தான் ஏடிசியில் புதிய ஷிப்டுக்கு வந்தவர் இதை கவனிக்காமல் இரண்டு விமானங்களுக்கு டேக் ஆப் அனுமதி கொடுத்து இருக்கிறார். இரண்டு விமானமும் டேக் ஆப் செய்து 3000 அடி உயரம் சென்ற நிலையில் அருகருகே மோதுவது போல சென்றுள்ளது. ஆனால் அதை ரேடாரில் கவனித்த ரேடார் கண்ட்ரோலர் உடனே 2 விமானங்களுக்கும் சிக்னல் கொடுத்து விபத்தை தடுத்து நிறுத்தி உள்ளார். விமான கட்டுப்பாட்டு இயக்குனரகம் இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறது.