பெங்களூர் ஐடி புரட்சியின் கர்த்தா..கர்நாடகா மாஜி முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா அரசியலில் இருந்து ஓய்வு!
பெங்களூர்: கர்நாடகா மாநிலம் தகவல் தொழில்நுட்பத் துறையில் கொடிகட்டப் பறக்க வித்திட்டவர் அம்மாநில முன்னாள் முதல்வரும் முதுபெரும் அரசியல் தலைவருமான எஸ்.எம். கிருஷ்ணா. தற்போது தீவிர அரசியலில் இருந்து தாம் விலகுவதாக அறிவித்துள்ளார் எஸ்.எம்.கிருஷ்ணா.
நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர்களில் ஒருவர் எஸ்.எம். கிருஷ்ணா. 1932-ம் ஆண்டு பிறந்த எஸ்.எம்.கிருஷ்ணா சட்டம் பயின்றார். அமெரிக்காவில் மேற்படிப்பு படித்தார். தொடக்கத்தில் சட்டக் கல்லூரி பேராசிரியராக பணியாற்றிய எஸ்.எம். கிருஷ்ணா, 1962-ம் ஆண்டு எம்.எல்.ஏ.வாக தீவிர அரசியலில் இறங்கினார். 1968-ம் ஆண்டே லோக்சபா எம்.பி.யானார். 1970களின் தொடக்கத்தில் மீண்டும் கர்நாடகா அரசியலுக்கு திரும்பி அமைச்சரானார்.

பின்னர் மீண்டும் டெல்லி அரசியலுக்கு சென்று இந்திரா காந்தி அமைச்சரவையிலும் இடம்பிடித்தார். கர்நாடகா சட்டசபை சபாநாயகராகவும் பதவி வகித்தார். 1992-ம் ஆண்டு அரசியல் அத்தியாயத்தின் அடுத்த பகுதியாக கர்நாடகா மாநில துணை முதல்வரானார் எஸ்.எம்.கிருஷ்ணா. பின்னர் மீண்டும் ராஜ்யசபா எம்பியாக்கப்பட்டார். 1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை கர்நாடகா மாநில முதல்வராக பதவி வகித்தார். இதனையடுத்து மகாராஷ்டிரா ஆளுநராக்கப்பட்டார். பின்னர் 6 ஆண்டுகளுக்கு முன்னர் பாஜகவில் இணைந்தார்.
பிரஜா சோசலிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பாஜக என அரசியல் கட்சிகளில் பயணித்த எஸ்.எம். கிருஷ்ணா எம்.எல்.ஏ, எம்பி, முதல்வர், மத்திய அமைச்சர், ஆளுநர் என அரசியலில் பெரும் உச்சம் தொட்டவர். காவிரி நதிநீர் பிரச்சனைகளின் போதும் சந்தனக் கடத்தல் வீரப்பனால் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட காலங்களிலும் எஸ்.எம்.கிருஷ்ணா தமிழகத்தின் விவாத களங்களில் முக்கியமானவராக இருந்தார். எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராக இருந்த காலத்தில்தான் இன்றைய பெங்களூர் ஐடி உலகத்தின் கொடி அப்படி பறக்கத் தொடங்கியது. பெங்களூர் ஐடி புரட்சியின் கர்த்தாவாக இருந்தார்.

கடந்த சில ஆண்டுகளாக தீவிர அரசியலலில் இருந்து விலகியே இருந்தாலும் அவ்வப்போது செய்தியாளர்களை சந்தித்தார். இந்த நிலையில் இன்று தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் எஸ்.எம். கிருஷ்ணா. கர்நாடகாவில் ஜாதிய அரசியல் தவிர்க்க முடியாதது. கர்நாடகாவின் பெரும்பான்மை ஜாதிகளில் ஒன்றாக ஒக்கலிகா கவுடா ஜாதியின் அரசியல் முகங்களில் முதன்மையானவராக இருந்த எஸ்.எம்.கிருஷ்ணா தமது தீவிர அரசியல் பயணத்துக்கு ஓய்வு கொடுப்பதாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பாஜகவில் இருந்து விலகும் கடிதத்தை கட்சி மேலிடத்துக்கும் அவர் அனுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications