ஜூன் 21 வரை கர்நாடகாவில் ஊரடங்கு நீட்டிப்பு.. பெங்களூருக்கு கூடுதல் தளர்வு..2 மணிவரை கடை திறக்கலாம்
பெங்களூர்: ஜூன் 14 ஆம் தேதிக்கு பிறகு ஊரடங்கு உத்தரவில் கர்நாடக அரசு சில தளர்வுகள் கொண்டுவந்துள்ளது. இதன்படி பெங்களூர் நகரம் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் காலை 10 மணிக்கு பதிலாக பிற்பகல் 2 மணி வரை கடைகளை திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
பெங்களூர் உட்பட கர்நாடகா முழுக்க ஏப்ரல் 27-ஆம் தேதி முதல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்படி காலை 6 மணி முதல் 10 மணி வரை, காய்கறி , மளிகை, இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யக்கூடிய கடைகள் மட்டும் திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டது.
சென்னை நகைக்கடையில் 5 லட்சம் பணம் பறிப்பு.. 2 போலீஸ்காரர்கள் பணியிடை நீக்கம்
மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்காக, மட்டும் கார் அல்லது ஆட்டோ போன்ற வாடகை வாகனங்களை பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
பெங்களூர் ஊரடங்கு
ஆரம்பத்தில், இருசக்கர வாகனங்கள் , கார் போன்றவற்றை பயன்படுத்தி காய்கறி வாங்குவதற்கு செல்லக்கூடாது என்று உத்தரவிடப்பட்டது. ஆனால் மக்களிடையே எழுந்த எதிர்ப்பு காரணமாக, பிறகு அதில் மட்டும் விதிமுறை மாற்றம் செய்யப்பட்டு காலை 6 மணி முதல் 10 மணிக்குள் கடைகளுக்கு செல்வோர் வாகனங்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அதன்பிறகு வாகனங்களை பயன்படுத்த கூடாது என்பது காவல்துறை உத்தரவு.
ஊரடங்கு நீட்டிப்பு
இந்த நிலையில்தான், பெங்களூரில், தற்போது கொரோனா படிப்படியாக குறைந்து வந்துகொண்டிருக்கிறது. ஜூன் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு உத்தரவு நிறைவடைய உள்ள நிலையில் 21ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ள கர்நாடக அரசு, பெங்களூர் நகரம் உள்ளிட்ட நோய் பரவல் குறைந்து வரும், 20 மாவட்டங்களில் மட்டும் கூடுதல் சலுகைகளை அறிவித்துள்ளது.
மதியம் 2 மணிவரை கடைகள்
இதன்படி மதியம் 2 மணி வரை, பழங்கள், காய்கறிகள், உணவு பொருள் விற்பனை கடைகள், இறைச்சி, மீன் , பால், செல்ல பிராணிகளுக்கான கால்நடை தீவனங்கள் விற்பனை செய்யும் கடைகள் போன்றவை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. தெருவோர வியாபாரிகள் இந்த காலகட்டத்தில் தங்கள் பொருட்களை விற்பனை செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மதுபானக் கடைகள்
தனியாக அமைந்துள்ள மதுபான கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கிக் கொள்ளலாம். உள்ளே உட்கார்ந்து மது அருந்துவதற்கு அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேநேரம் வீடுகளுக்கு பொருட்களை கொண்டு டெலிவரி செய்யும் சேவைகள் 24 மணி நேரமும் செயல்படும் இதன்மூலம் வெளியே கூட்டம் கூடுவது குறையும் என்று அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுமான தொழில்
கட்டுமான தொழில் சார்ந்த பணிகள் மற்றும் நிறுவனங்கள், கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே இயங்கி கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை 5 மணி முதல் காலை 10 மணி வரை பூங்காக்கள் திறந்து வைக்கப்படும், நடைப்பயிற்சி, ஜாகிங் செய்வோர் உரிய ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பயன்படுத்திக் கொள்ளலாம்.
டாக்சி இயங்கலாம்
டாக்சி மற்றும் ஆட்டோக்கள் அதிகபட்சமாக இரண்டு பயணிகளுடன் இயங்குவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகள், பொதுப்பணித்துறை , வீட்டுவசதி, வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், கூட்டுறவு, நபார்டு, வருவாய் துறை சார்ந்த அரசு அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் இயங்கி கொள்வதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. மூக்கு கண்ணாடி கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை திறந்து வைக்க அனுமதிக்கப்படுகிறது.
மைசூர், சாம்ராஜ்நகருக்கு தளர்வு இல்லை
அதே நேரம் இரவு 7 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும். அதேபோன்று , வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் திங்கள்கிழமை காலை 5 மணி வரை வார இறுதி ஊரடங்கு அமலில் இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பெங்களூர் கிராமப்புற மாவட்டம் அதாவது பெங்களூரின் புறநகர் மாவட்டம் , ஹாசன், தென் கன்னடா, மண்டியா, மைசூர், பெல்காம், குடகு, சிக்கமங்களூர், ஷிமோகா, தாவணகெரே, சாம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்களில் தளர்வு கிடையாது. அங்கு இப்போது உள்ள தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் இருக்கும். ஏனென்றால் அங்கு நோய் பரவல் தாக்கம் இன்னமும் அதிகமாக இருக்கிறது. இவ்வாறு தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.