கர்நாடகா ராஜ்யசபா தேர்தல்.. 4-வது எம்.பி. சீட் யாருக்கு? இன்னமும் மல்லுக்கட்டும் ஜேடிஎஸ்-காங்.
பெங்களூரு: கர்நாடகாவில் நடைபெற்று வரும் ராஜ்யசபா தேர்தலில் 4-வது இடம் யாருக்கு என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
கர்நாடகாவில் 4 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. பெங்களூர் விதான் செளதாவில் மாநாட்டு அரங்கத்திலலிந்த வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இன்று காலை 9 மணிக்கு தொடங்கிய வாக்குப் பதிவு மாலை 4 மணி வரை நடைபெறும். மாலை 5 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு இரவு 7 மணிக்குள் முடிவுகளளறிவிக்கப்படும்.
கர்நாடகாவில் ஆளும் பாஜக, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ், லெகர்சிங் ஆகியோரை வேட்பாளராக நிறுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சி முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், மன்சூர் அலிகான் ஆகியோரையும் மதச்சார்பற்ற ஜனதா தளம் குபேந்திர ரெட்டியையும் களமிறக்கி உள்ளன. மொத்தம் 4 இடங்களுக்கான தேர்தலில் 6 பேர் வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.
கர்நாடகா சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் பலத்தின் அடிப்படையில் பாஜகவின் நிர்மலா சீதாராமன், ஜக்கேஷ், காங்கிரஸின் ஜெய்ராம் ரமேஷ் வெல்வது உறுதியானது. பாஜகவைப் பொறுத்தவரை முதல் 45 எம்.எல்.ஏக்கள் நிர்மலா சீதாராமன், 2-வது 45 எம்.எல்.ஏக்கள் ஜக்கேஷுக்கு வாக்களிப்பர். எஞ்சிய 32 எம்.எல்.ஏக்கள் லெகர்சிங்குக்கு ஓட்டுப் போடுவர்.
காங்கிரஸ் கட்சியின் 70 எம்.எல்.ஏக்களில் முதல் 45 பேர் ஜெய்ராம் ரமேஸுக்கு ஓட்டுப் போடுவர். எஞ்சிய 25 எம்.எல்.ஏக்கள் மன்சூர் அலிகானுக்கு வாக்களிப்பர். மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் 32 எம்.எல்.ஏக்களும் குபேந்திர ரெட்டிக்கு வாக்களிப்பர். இதனால் 4-வது எம்.பி. பதவி யாருக்கு என்பதுதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தமது கட்சி எம்.எல்.ஏக்களை ரிசார்ட்டுக்கு அனுப்பி வைத்தார் மதச்சார்பற்ற கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான குமாரசாமி.
4-வது எம்.பி. பதவி இடம் தொடர்பாக காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் இடையே மல்லுக்கட்டு நடைபெற்று வருகிறது. இரு கட்சிகளின் தலைவர்களும் பரஸ்பரம் புகார் தெரிவித்து வருகின்றனர். மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு காங்கிரஸ் குறி வைத்திருக்கிறது. இந்த தேர்தலில் எந்த ஒரு விட்டுக் கொடுப்பும் கிடையாது என்கிறது கர்நாடகா காங்கிரஸ். ஆனாலும் இரு கட்சிகளிடையேயான சமரச முயற்சி டெல்லி வரை தொடருகிறது. இதனால் கர்நாடகா ராஜ்யசபா தேர்தலில் பரபரப்பு தொடருகிறது.