மாஸ்டர் மைண்ட்.. மங்களூர் குண்டுவெடிப்பில் தலைமறைவான அப்துல் மதீன் தாஹா.. தாய் வெளியிட்ட பகீர் தகவல்
பெங்களூர்: கர்நாடகாவின் மங்களூரில் ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்ததில் முகமது ஷாரீக் கைது செய்யப்பட்ட நிலையில் அப்துல் மதீன் தாஹா என்பவரும் மாஸ்டர் மைண்டாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கும் நிலையில் அவரை பற்றி அவரது தாய் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் பம்ப்வெல் அருகே நாகுரி பகுதியில் கடந்த 19ம் தேதி ஆட்டோவில் குக்கர் வெடிகுண்டு வெடித்தது.
இதில் ஆட்டோ டிரைவர் புருஷோத்தம் (60) என்பவரும், ஆட்டோவில் பயணித்த முகமது ஷாரீக் (23) என்பவரும் காயமடைந்தனர். இவர்கள் 2 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அடுத்தடுத்து பயங்கரம்.! காஷ்மீரில் பதற்றம்.. 2 வெளிமாநிலத் தொழிலாளர்கள் வெடிகுண்டு வீசி கொலை
விசாரணை தீவிரம்
இதில் முகமது ஷாரீக் தான் குக்கர் வெடிகுண்டு வைத்திருந்ததும், அது வெடித்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக கர்நாடக போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் கோவையில் கார் வெடிப்பு நடந்த சம்பவத்தில் முகமது ஷாரீக்கிற்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகப்படும் நிலையில் தான் இந்த சம்பவம் கர்நாடகா, தமிழகம் என 2 மாநிலங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தற்போது முகமது ஷாரீக் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவர் குணமாகி வந்த நிலையில் தீவிர விசாரணை நடத்தப்பட உள்ளது. அப்போது தான் முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
2 இடங்களில் வெடிகுண்டு பயிற்சி
தற்போது முகமது ஷாரீக் பற்றிய விபரங்களையும், அவர் தொடர்புடைய இடங்களில் சோதனையும் நடத்தி தகவல்கள் திரட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் அவர் டார்க் வெப் மூலம் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் அல்ஹிந்து அமைப்பில் தொடர்பு கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளி அருகே உள்ள சுப்புகுட்டே கிராமத்தை சேர்ந்தவர் இவர் குருபுரா துங்கா ஆற்றில் வெடிகுண்டு வீசி சோதனை நடத்தியதும், அதன்பிறகு தட்சிண கன்னடா மாவட்டம் பந்த்வாலா அருகே நேத்ராவதி ஆற்றங்கரையில் வெடிகுண்டு வெடிக்க செய்து பயிற்சி எடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இன்னொரு நபருக்கு தொடர்பு
இதற்கிடையே மங்களூர் குக்கர் குண்டு வெடிப்பில் முகமது ஷாரீக் உடன் இன்னொரு நபருக்கும் தொடர்பு உள்ளது எனவும், அவரும் மாஸ்டர் மைண்டாக இருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அதன்படி குண்டுவெடிப்பில் தொடர்புடைய நபரின் பெயர் அப்துல் மதீன் தாஹா எனவும், அவரும் சிவமொக்கா மாவட்டத்தை சேர்ந்தவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போதைய சூழலில் அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. இதனால் சிவமொக்கா மாவட்டத்தில் உள்ள அவரது குடும்பத்தினரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாய் கூறியது என்ன?
இந்நிலையில் தான் அப்துல் மதீன் தாஹாவின் தாய் கூறுகையில், ‛‛என் மகன் அப்துல் மதீன் தாஹா பெங்களூரில் என்ஜினியரிங் படிப்பு படித்து வந்தான். 3 ஆண்டு வரை கல்லூரி படிப்பை படித்தான். அதன்பிறகு படிப்பை நிறுத்திவிட்டு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தான். கடந்த 3 ஆண்டுகளாக வீட்டுக்கு வரவில்லை. பெங்களூரில் தேடிப்பார்த்தபோது கிடைக்கவில்லை. 3 ஆண்டுகளாக அவனை காணவில்லை. தொடர்பு கொள்ளவும் முடியவில்லை.
தண்டிக்கப்பட வேண்டும்
என் மகனுக்கு தற்போது 29 வயது ஆகிறது. இவன் தான் எனக்கு மூத்த பிள்ளை. இவனுக்கு ஒரு தம்பி, ஒரு தங்கை உள்ளனர். குடும்பத்தில் மிகவும் பாசமாக இருந்தான். நாங்களும் அவன் மீது பிரியமாக இருந்தோம். இந்நிலையில் ஏன் திடீரென்று மாயமானான் என தெரியவில்லை. அவனை காணாமல் நாங்கள் சிரமத்தை சந்தித்தோம். இன்னும் கூட கண்ணீருடனே அவனுக்காக காத்திருக்கிறோம். ஏனென்றால் அவன் மாயமானதில் இருந்து இன்னும் கூட எங்களால் மீள முடியவில்லை. இருப்பினும் அவன் தவறு செய்தால் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்'' என்றார்.