பெங்களூரில் பகீர்.. பாகிஸ்தான் உளவு அமைப்பு நடத்திய "டெலிபோன் எக்சேஞ்ச்.." திருப்பூர் வாலிபர் கைது
பெங்களூர்: ராணுவ ரகசியங்களை அறிந்து கொள்வதற்காக, பாகிஸ்தான் உளவாளிகள், பெங்களூரில் சட்டவிரோதமாக, 'டெலிபோன் எக்ஸ்சேஞ்ச்' நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த பயங்கர சதியில் தொடர்புடைய திருப்பூரைச் சேர்ந்தவர் உட்பட, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராணுவத்தின் கிழக்கு பிரிவில், மேற்கு வங்க மாநிலம், சிலிகுரியில் பணியாற்றும் உயர் அதிகாரி ஒருவருக்கு, சமீபத்தில் தொலைபேசி அழைப்பு வந்தது.
மர்ம தொலைபேசி அழைப்பு
அதில் பேசியவர், தன்னை ராணுவ அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு, ராணுவத்தின் செயல்பாடுகள், ராணுவம் நிறுத்தப்பட்டுள்ள எல்லை பகுதிகள் உள்ளிட்ட தகவல்கள் பற்றி கேட்டுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அந்த ராணுவ அதிகாரி, இது குறித்து ராணுவ உளவுத்துறைக்கு தகவல் கொடுத்தார். உளவுப்பிரிவு அதிகாரிகள் விசாரணையை ஆரம்பித்தனர்.
போலி சிம்கார்டுகள்
பெங்களூரில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது அப்போது தெரியவந்தது. இதையடுத்து தென்னக பிரிவு ராணுவ உளவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள், கர்நாடக மாநில தீவிரவாத தடுப்பு படை போலீசாருடன் இணைந்து விசாரணை நடத்தினர். அந்த தொலைபேசி அழைப்புக்காக போலி சிம்கார்டுகள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. மேலும், பிடிஎம் லேஅவுட் உட்பட பெங்களூரில் 6 இடங்களில் சட்ட விரோதமாக 'டெலிபோன் எக்ஸ்சேஞ்ச்' திறந்து இதுபோன்ற மோசடி நடந்துள்ளதை கண்டுபிடித்தனர்.
பாகிஸ்தான் தொடர்பு
ராணுவத்தின் முக்கிய தகவல்களை பெற, பாகிஸ்தான், இந்தியாவிலுள்ள சிலர் உதவியோடு இந்த சட்ட விரோத டெலிபோன் எக்ஸ்சேஞ்சுகளை நடத்தி வந்ததனர். இது தொடர்பாக, தமிழகத்தின் திருப்பூரை சேர்ந்த கவுதம் விஸ்வநாதன் (37), கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்த இப்ராகிம் முல்லட்டி (36) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சட்டவிரோத டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் செயல்பட்ட இடங்களில் இருந்து, சிம் கார்டு, லேப்டாப், கம்ப்யூட்டர்கள் பல பறிமுதல் செய்யப்பட்டன. இந்த இடங்களில் இருந்து யாருடைய போனையும் அழைத்து பேசி, தகவல் பெற நவீன தொழில்நுட்ப வசதிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்ததும் தெரியவந்தது.
பல மோசடிகள்
ராணுவ தகவல்களை பெறுவது மட்டுமின்றி, வெளிநாட்டிலிருந்து நிழலுலக தாதாக்கள் பணம் கேட்டு மிரட்ட பயன்படுத்தவும், இந்த எக்சேஞ்ச் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று பெங்களூர் போலீஸ் கமிஷனர் கமல் பந்த் தெரிவித்தார். இதையடுத்து பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.