2019-ல் பெகாசஸ் ஒட்டு கேட்பு மூலம் ஜேடிஎஸ்- காங். கூட்டணி அரசு கவிழ்ப்பா? அதிரும் கர்நாடகா
பெங்களூர்: 2019-ம் ஆண்டு கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான ஜேடிஎஸ்- காங்கிரஸ் கூட்டணி அரசானது பெகாசஸ் ஒட்டு கேட்பு மூலம் கவிழ்க்கப்பட்டது அம்பலமாகி உள்ளது.
Recommended Video
பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் செல்போன்கள் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெகாசஸ் விவகாரத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றன.
இந்த நிலையில் பெகாசஸ் விவகாரம் கர்நாடகா அரசியலிலும் பெரும் பரபரப்பை கிளப்பிவிட்டிருக்கிறது. 2109-ம் ஆண்டு கர்நாடகா முதல்வராக இருந்த குமாரசாமி தலைமையில் ஜேடிஎஸ்- காங்கிரஸ் கூட்டணி அரசும் இந்த பெகாசஸ் ஒட்டு கேட்பு சதி மூலமே கவிழ்க்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பரபரப்பு.. அமைச்சர் துரைமுருகன் மீது ஜாதிய வன்கொடுமை புகார்.. தாழ்த்தப்பட்டோர் ஆணையம் அதிரடி உத்தரவு
எடியூரப்பா ராஜினாமா
கர்நாடகாவில் 2018-ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் பாஜக 105 இடங்களில் வென்றது. இதனையடுத்து எடியூரப்பாவை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் வஜூபாய் கேட்டுக் கொண்டார். ஆனால் சட்டசபையில் எடியூரப்பாவால் ஆட்சி அமைக்க முடியாமல் போனதால் அவர் ராஜினாமா செய்தார்.
குமாரசாமி தலைமையில் கூட்டணி ஆட்சி
இதையடுத்து மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்)- காங்கிரஸ் இணைந்து குமாரசாமி தலைமையில் கூட்டணி அரசு அமைத்தன. இந்த கூட்டணி ஆட்சி ஓராண்டு கூட நீடிக்கவில்லை. பாஜகவின் ஆபரேஷன் லோட்டஸ் எனும் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகள் மும்முரமாக அரங்கேறின. காங்கிரஸ் கட்சியின் 13 எம்.எல்.ஏக்கள், ஜேடிஎஸ்-ன் 3 எம்.எல்.ஏக்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.
எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா
தாம் அமெரிக்கா சென்ற நேரத்தில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சிகள் தொடங்கிவிட்டதை உணர்ந்த குமாரசாமி உடனடியாக இந்தியா திரும்பினார். அப்போது, அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மும்பை ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களை சந்தித்து சமாதானப்படுத்த தற்போதைய கர்நாடகா காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் மும்பைக்கு சென்று போராடிப் பார்த்தார். இதற்கிடையே மேலும் சில சுயேட்சை எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்தனர்.
குமாரசாமி ஆட்சி கவிழ்ந்தது
இன்னொரு பக்கம் எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்காமல் இருந்தார். இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்துக்கும் போனது. பின்னர் நடந்த் நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்தது. இதனால் குமாரசாமி, முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதன் பின்னர் மீண்டும் கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைந்தது.
ஒட்டு கேட்பு மூலம் ஆட்சி கவிழ்ப்பு?
குமாரசாமி ஆட்சியை கவிழ்த்ததில் பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் செல்போன் ஒட்டுக் கேட்பு முக்கிய பங்கு வகித்திருப்பது தற்போது அம்பலமாகி இருக்கிறது. பெகாசஸ் ஸ்பைவேர் பட்டியலில் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பாதுகாப்பு அதிகாரி மஞ்சுநாத் மடே கவுடா, முன்னாள் முதல்வர் குமாரசாமியின் செயலாளர் சதீஷ், முன்னாள் முதல்வர் சித்தாரமையாவின் செயலாளர் வெங்கடேஷ், துணை முதல்வராக இருந்த பரமேஸ்வரா ஆகியோரது செல்போன் எண்கள் இடம்பெற்றுள்ளன.
ராகுல் காந்தியுடன் பேசியதும்...
ஆட்சியை தக்க ராகுல் காந்தியுடன் காங்கிரஸ் தலைவர்கள் நடத்திய பேச்சுவார்த்தைகளும் ஒட்டு கேட்கப்பட்டிருக்கின்றன. இந்த ஒட்டுகேட்பு மூலமே குமாரசாமி அரசு கவிழ்க்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது கர்நாடகா அரசியலில் பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது.