ஏர்போர்ட் போறீங்களா? 8 நிமிடத்துக்கு மேல் காரை நிறுத்தினால் ரூ.300 வரை அபராதம்.. பெங்களூரில் அமல்
பெங்களூர்: பெங்களூர் விமான நிலையத்தில் பயணிகளை ‛பிக்அப்' மற்றும் ‛டிராப்' செய்ய வரும் தனியார் கார்களுக்கு 8 நிமிடத்துக்கு மேல் நின்றால் அபராதம் விதிக்கும் முறை இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி அபராதமாக ரூ.150 முதல் ரூ.300 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 18 நிமிடங்களுக்கு மேல் நின்றால் வாகனங்கள் போலீஸ் நிலையத்துக்கு எடுத்து செல்லப்படும். அதன்பிறகு அபராதத்துடன், போலீஸ் நிலையத்துக்கு வாகனத்தை எடுத்து சென்றதற்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில் உள்ள முக்கியமான விமான நிலையங்களில் பெங்களூரு கெம்பேகவுடா விமான நிலையமும் ஒன்று. இந்த விமான நிலையம் தேவனஹள்ளியில் அமைந்துள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இங்கிருந்து விமான சேவைகள் உள்ளன. இதனால், இந்த விமான நிலையம் எப்போதும் பரபரப்பாக இருக்கும்.

இந்நிலையில், சமீபத்தில் பெங்களூர் விமான நிலையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுபற்றி விசாரித்தபோது பணிகளை ‛பிக்அப்', ‛டிராப்'பிற்கு வரும் தனியார் கார்கள், டாக்சிகள் அங்கு வருவதும், அந்த வாகனங்கள் நீண்ட நேரம் அங்கு பார்க்கிங் செய்திருப்பதும் தெரியவந்தது.
இதனால் நெரிசலை தவிர்க்கும் வகையில் பயணிகள் வருகை பகுதியில் அதிக நேரம் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது இந்த அபராதம் விதிக்கும் நடைமுறை தொடங்கி உள்ளது. அதன்படி வெள்ளை நிற போர்டு கொண்ட கார்கள் பிக்அப் ஜோன் டெர்மினல் 1 மற்றும் டெர்மினல் 2வில் 8 நிமிடங்கள் வரை காத்திருக்கலாம். 8 நிமிடங்கள் வரை இலவச பார்க்கிங்கிற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
அதன்பிறகு காத்திருக்கும் நிமிடங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். 8 நிமிடங்களுக்கு மேல் 13 நிமிடங்கள் வரை நின்றால் அபராதம் விதிக்கப்படும். இதற்கு ரூ.150 அபராதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல்
13 நிமிடங்களுக்கு மேல் 18 நிமிடங்கள் வரை காத்திருந்தால் அபராதமாக ரூ.300 வசூலிக்கப்படும். 18 நிமிடங்களுக்கு மேல் நின்றால் அந்த கார்கள் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்படும். அபராதத்துடன் அவற்றை எடுத்து செல்வதற்கான கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படும்.
தற்போதைய அபராதம் டெர்மினல் 2ல் மட்டுமே நடைமுறைக்கு வந்துள்ளது. டெர்மினல் 1யில் டிசம்பர் 13ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வர உள்ளது. அதேபோல் மஞ்சள் நிற போர்டு கொண்ட டாக்ஸிகள் உள்பட வணிக பயன்பாட்டு வாகனங்கள், எலக்ட்ரிக் வாடகை கார்கள் அதற்கு என்று ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே பார்க்கிங் செய்ய வேண்டும். அதன்படி டெர்மினல் 1யை எடுத்து கொண்டால் பி3, பி4, டெர்மனில் 2யை எடுத்து கொண்டால் பி 2 ஜோனை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இங்கு 10 நிமிடங்கள் வரை பார்க்கிங் இலவசமாகும். மக்களுக்கு பிரச்சனை வரக்கூடாது. வாகனங்கள் நெரிசலின்றி பயணிக்க வேண்டும் என்பதற்காக பெங்களூர் விமான நிலைய நிர்வாகம் இந்த புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications