கன்னடமா.. மராத்தியா? களைகட்டிய கர்நாடகா- மகாராஷ்டிரா எல்லை பஞ்சாயத்து! கலவரமான பெலகாவி பிரச்சினை!
பெங்களூர் : கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையேயான எல்லை பிரச்சினை தொடர்பாக நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில் கன்னட போராட்டக்காரர்கள் மகாராஷ்டிரா மாநில வாகனங்கள் மீது கற்களை வீசி தாக்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநில எல்லையோரத்தில் பெலகாவி பீதர் கார்வார் ஆகிய மாவட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டங்களில் மராத்தி மொழி பேசும் மக்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர். பெரும்பாலானோர் மராட்டிய மாநில பாரம்பரியத்தையே கடைபிடித்து வருகின்றனர்.
இந்த மாவட்டங்களில் 800க்கும் மேற்பட்ட மக்கள் மராத்தி மொழி பேசும் மக்களாக இருக்கின்றனர். இந்த நிலையில் 1960ஆம் ஆண்டு மொழி அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நிலையில் மராத்தி மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் சில பகுதிகள் கர்நாடகாவுக்கு வழங்கப்பட்டதாக மகாராஷ்டிரா அரசு கூறி வருகிறது.
கர்நாடகா குக்கர் குண்டு வெடிப்பு..தமிழக எல்லைகள் உஷார்..தீவிரமடையும் வாகன சோதனை
எல்லை பிரச்சினை
இதன் காரணமாக கர்நாடக மகாராஷ்டிரா மாநிலங்களில் உள்ள சில கிராமங்களை மகாராஷ்டிரா உடன் இணைக்க வேண்டும் என மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த சில அமைப்புகள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கர்நாடக எல்லையோரம் இருக்கும் சில கிராமங்களை மகாராஷ்டிரா உடன் இணைக்க வேண்டும் என அம்மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
பசவராஜ் பொம்மை
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த கர்நாடக மாநில முதல்வரான பசவராஜ் பொம்மை உடனடியாக டெல்லிக்கு சென்று இது தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வரும் நிலையில் கடந்த வாரம் கர்நாடக பேருந்துகள் மீது மகாராஷ்டிராவை சேர்ந்த சில அமைப்புகள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து கன்னட அமைப்பினரும் போராட்டத்தில் குதித்ததால் இரு மாநில எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
மீண்டும் போராட்டம்
இந்த நிலையில்கடந்த வாரம் கல்லூரி ஒன்றில் கலை நிகழ்ச்சியின் போது கல்லூரி மாணவர்கள் கன்னட கொடியை கட்ட அதற்கு மராட்டிய அமைப்பு தெரிவித்து தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில் அப்பகுதியில் மேலும் பதற்றம் நீடிக்கும் நிலையில் மகாராஷ்டிராவில் சேர்ந்த அமைச்சர்கள் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெலகாவிக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் கடும் கோபமடைந்த கன்னட அமைப்பினர் மகாராஷ்டிரா மாநில அமைச்சர்களுக்கு எதிராக மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திடீர் கலவரம்
கன்னட ரக்ஷனா வேதிகே அமைப்பின் மாநில தலைவரான நாராயண கவுடா இன்று ஹீரோபோகேவாடி சுங்கச்சாவடி வழியாக பெலகாவிக்குள் செல்ல முயன்றார். மகாராஷ்டிரா அமைச்சர்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் சென்று கொண்டிருந்த போது அவரது ஆதரவாளர்கள் அந்த சுங்கச்சாவடியில் இருந்த பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் உடன் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். இதை அடுத்து அவர்களை தடுக்க முயன்ற போது திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரும் பரபரப்பு
இதனால் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் திடீர் வன்முறை வெடித்த நிலையில் அங்கிருந்த கர்நாடக மாநில பதிவெண் கொண்ட வாகனங்கள் அடித்து உடைக்கப்பட்டன. போராட்டம் தீவிரமடைந்ததை உணர்ந்த போலீசார் கன்னட அமைப்பைச் சேர்ந்தவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது.
கர்நாடக மாநிலம்
இந்நிலையில் இது குறித்துப் பேசிய நாராயண கவுடா தாங்கள் மகாராஷ்டிரா மாநிலத்திற்குள் நுழையவில்லை. கர்நாடகா மாநிலத்தில் உள்ள பகுதிக்கு தான் செல்கிறோம். ஆனால் எங்களை ஏன் போலீசார் அனுமதிக்கவில்லை என தெரியவில்லை. போலீசார் கர்நாடக மாநிலத்தை ஆட்சி செய்கிறார்களா என்பது தெரியவில்லை. இது குறித்து நான் உள்துறை அமைச்சர் அரக ஞானந்திராவிடம் நிச்சயம் விவாதிப்பேன் என கூறினார்
என்ன பின்னணி?
மகாராஷ்டிரா மாநில அரசுக்கு எதிராக கன்னடர்களும் கர்நாடகா மாநிலத்திற்கு எதிராக மராட்டிய அமைப்பினரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு புனேவில் சிவசேனா அமைப்பைச் சேர்ந்த சிலர் கர்நாடக மாநில பேருந்துகளில் கருப்பு மற்றும் ஆரஞ்சு வண்ணங்களை தெளித்ததோடு அதில் ஜெய் மகாராஷ்டிரா என்று எழுதியது குறிப்பிடத்தக்கது. நிலைமை தொடர்ந்து அங்கு தீவிரமாகி வரும் நிலையில் இரு மாநில போலீசாரும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.