வெள்ளையர்களுக்கு உதவியது ஆர்எஸ்எஸ்.. சம்பளம் பெற்றார் சாவர்க்கர்.. ராகுல் காந்தி அதிரடி அட்டாக்
பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் ஒற்றுமை நடைபயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, 'ஆர் எஸ் எஸ் அமைப்பு பிரிட்டிஷ்காரர்களுக்கு உதவி செய்தது என்றும் சவார்க்கர் பிரிட்டிஷாரிடம் இருந்து ஊதியம் பெற்றார் என்றும் விமர்சித்து பேசினார்.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பாரத் ஜோடா யாத்திரை என்ற பெயரில் தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து ஜம்மு காஷ்மீர் வரை நடைபயணம் மேற்கொள்கிறார்.
தமிழகம் மற்றும் கேரளாவில் நடைபயணத்தை முடித்துக்கொண்ட ராகுல் காந்தி தற்போது கர்நாடக மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். விரைவில் கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ளதால் ராகுல் காந்தியின் கர்நாடக நடைபயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மதம் மாறிய தலித்துகளுக்கு சலுகைகளா?.. ஆராய்ந்து முடிவெடுக்க கமிஷன்.. மத்திய அரசு நடவடிக்கை
கர்நாடகாவில் பேட்டி
இந்த நிலையில் கர்நாடகாவில் பாரத் ஜோடா யாத்திரையின் போது ராகுல் காந்தி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அனைத்து மாநிலங்களை உள்ளடக்கிய யூனியன் தான் நமது பாரதம் என்று அரசியல் அமைப்பு சொல்கிறது. நாட்டில் உள்ள அனைத்து மொழிகள், கலாசாரம் அனைத்திற்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதே இதன் அர்த்தம் ஆகும். நமது நாட்டின் இயல்பும் அதுதான்.
வன்முறைக்கு எதிராக போராடுவோம்
காங்கிரஸ் பாசிச கட்சி கிடையாது. கருத்து பரிமாற்றங்களையும் மாறுபட்ட கருத்துக்களையும் வரவேற்கும் கட்சிதான் காங்கிரஸ். தேர்தலில் வெற்றியை பெற வேண்டும் என்றால் அனைவரும் கூட்டாக ஒரு அணியாக செயல்பட வேண்டும் என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். வெறுப்புணர்வு, வன்முறையை பரப்புவது தேச விரோத செயல், இவற்றில் ஈடுபடுவோருக்கு எதிராக போராடுவோம். வெறுப்புனர்வை பரப்புவர் யார் எந்த சமூகத்தை சார்ந்தவர் என்பது முக்கியம் இல்லை.
பிரிட்டிஷாருக்கு எதிராக போரடியது காங்கிரஸ்
காங்கிரஸ் தலைவர் தேர்தலை பொருத்தவரை தேர்தலில் போட்டியிடும் இரண்டு பேருமே அவர்களுக்கென தனித்தன்மை கொண்டவர்கள். ரிமோட் கன்ட்ரோல் எனக் கூறுவது இருவரையுமே இழிவு படுத்தும் செயலாகும். பிரிட்டிஷாருக்கு எதிராக போரடியதும்.. சுதந்திரத்திற்காக மாபெரும் இயக்கத்தை முன்னெடுத்த கட்சியும் காங்கிரஸ்தான் என்று வரலாற்று உண்மையை புரட்டி பார்த்தால் உங்களுக்கு தெரியும்.
ஆர்.எஸ்.எஸ் பிரிட்டிஷ்காரர்களுக்கு உதவியது
ஆர்.எஸ்.எஸ் பிரிட்டிஷ்காரர்களுக்கு உதவி செய்தது. சவார்க்கர் பிரிட்டிஷாரிடம் இருந்து ஊதியம் பெற்றார். நாட்டில் வெறுப்புணர்வையும் பிரிவினையையும் பாஜக பரப்புகிறது. பாஜக செய்துவரும் அரசியலாலும்.. வேலைவாய்ப்பு இன்மை அதிகரித்து இருப்பதாலும் நாட்டு மக்கள் சோர்வடைந்து விட்டனர்.
கர்நாடகாவில் வெற்றி பெறுவோம்
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி அடையும். ஊழல், விலைவாசி உயர்வு மற்றும் இதுவரை இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்பு இன்மை அதிகரிப்பு ஆகியவற்றால் மக்கள் சோர்வடைந்து விட்டனர். தேசியக் கல்விக்கொள்கை நமது நாட்டின் நெறிமுறைகள் மீதான தாக்குதலாகும். வரலாற்றையும் கலாசாரத்தையும் சிதைக்கும் வகையில் புதிய கல்விக்கொள்கை உள்ளது. ஒரு சிலரின் கைகளில் அதிகாரத்தை குவிக்கும் நோக்கத்தில்தான் இது உள்ளது.
பாஜகவின் பங்கு எங்கும் இல்லை
நமது கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான பரவலாக்கப்பட்ட கல்வி முறையையதான் நாங்கள் விரும்புகிறோம். சுதந்திர போராட்டத்தில் பாஜகவின் பங்கு எங்கும் இல்லை. இத்தகைய உண்மைகளை பாஜகவால் மறைக்க முடியாது. காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர்களுமே சுதந்திரத்திற்காக போராடினார்கள். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.