கர்நாடகாவில் வேலையின்மையால் தற்கொலை செய்வோர் எண்ணிக்கை உயர்வு
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் வேலை கிடைக்காத விரக்தியால் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் இந்தியாவிலேயே வேலையின்மைக்காக அதிகம் பேர் தற்கொலை செய்து கொண்ட வழக்குகள் கர்நாடகாவில் பதிவாகியுள்ளன. 2019 ஆம் ஆண்டு 553 பேர் வேலையின்மையால் கர்நாடகாவில் தற்கொலை செய்து கொண்டார்கள் என்றால் 2018 ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை சற்று குறைந்து 464 ஆக இருந்தது.
அது போல் மகாராஷ்டிராவில் கடந்த 2019 ஆம் ஆண்டு வேலையின்மையால் 452 பேரும் 2018 ஆம் ஆண்டு 394 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். இந்த பட்டியலில் தமிழகம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்தில் 2019ஆம் ஆண்டு வேலையின்மை பிரச்சினைக்காக 251 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
கடந்த 2017ஆம் ஆண்டு கர்நாடகாவில் 375 பேர் வேலையின்மையால் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அந்த மாநிலம் இந்தியாவில் இரண்டாவது இடத்தை பிடித்தது. இதற்கு அடுத்து 224 தற்கொலைகளுடன் மகாராஷ்டிரா இருந்தது. இந்த புள்ளிவிவரங்கள் மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பின்மைக்கான இணையமைச்சர் ராமேஸ்வர் தேலி லோக்சபாவில் திங்கள்கிழமை வெளியிட்டார்.
மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் ஏற்படும் விபத்து மரணங்கள், தற்கொலைகள் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தில் பதிவு செய்யப்படும். இந்த புள்ளிவிவரங்களை வைத்து பார்க்கும் போது நாட்டில் வேலையின்மையால் தற்கொலைகள் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு 2,298 பேரும் 2017ஆம் ஆண்டு 2,404 பேரும், 2018 ஆம் ஆண்டு 2,471 பேரும் 2019 ஆம் ஆண்டு 2,851 பேரும் தற்கொலை செய்து கொண்டனர்.
இதற்கு அமைச்சர் தேலி பதிலளிக்கையில் வேலைவாய்ப்புகளை உருவாக்க மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. ஆத்ம நிர்பார் பாரத் ரோஜ்கர் யோஜனா உள்பட ஏராளமான வேலைவாய்ப்புகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்த திட்டங்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது என்றார்.