"கேஜிஎப் சம்பவம்.." மீண்டும் அரியணை ஏறியது தமிழ்.. பட்டாசு வெடித்து கொண்டாடும் மக்கள்!
பெங்களூர்: கேஜிஎப்.. திரைப்படத்தில் மட்டுமல்ல, நிஜத்திலும் பிரமாண்ட வார்த்தை. மிகப்பெரிய தங்கச் சுரங்கங்கள், அதில் பணியாற்ற தமிழகத்திலிருந்து பல தலைமுறை முன்பு சென்ற தமிழர்கள் என்று, ராக்கி பாய்-யின் கேஜிஎப் போலவே உழைப்பும், வலிகளும், எழுச்சியும், வீழ்ச்சியும் கண்ட இடம் கோலார் தங்க வயல். சுறுக்கமாக கேஜிஎப்.
Recommended Video
தமிழகம், கர்நாடகா, ஆந்திரா ஆகிய 3 மாநில எல்லையிலுள்ள கோலார் மாவட்டத்தில் அமைந்துள்ள பகுதிதான் தங்கவயல்.
ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் 16ல் திறப்பு: தினசரி 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி
தங்கச் சுரங்கம் தோண்ட கடின உழைப்பாளிகளான தமிழர்களை நாடி வந்ததனர் அதிகாரிகள். இதனால் வட தமிழகத்திலிருந்து, குறிப்பாக வேலூர் மற்றும் அதன் அண்டை மாவட்டங்களிலிருந்து 2 தலைமுறைக்கு முன்பாக கூட்டம் கூட்டமாக தமிழ் தொழிலாளி குடும்பங்கள் கேஜிஎப் சென்றனர்.
தமிழ் எம்எல்ஏக்கள்
வியர்வையும், ரத்தமும் சிந்தி தங்கச் சுரங்கத்தை மிளிரச் செய்து, உலகையே உற்றுப் பார்க்க வைக்கும் இடமாக மாற்றினர். இதனால் அந்த பகுதியே, ஒரு தமிழ்நாடு போல மாறத் தொடங்கியது. உள்ளாட்சி நிர்வாகங்கள் மட்டுமல்ல, எம்எல்ஏக்களும் தமிழர்களாக இருந்தனர். பக்தவச்சலம், ராஜேந்திரன் போன்ற தமிழ் தலைவர்கள், எம்எல்ஏக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அரசியல் அதிகாரம் குறைந்தது
ஒரு கட்டத்தில், தங்கவயலில் தங்கம் குறைந்தது, மக்களின் வாழ்க்கைத் தரமும் குறைந்தது. அரசியல் செல்வாக்கும் அப்படியே சரிந்தது. தொகுதி மறுசீரமைப்பு செய்து அதிகப்படியான கன்னட ஏரியாக்களை தங்கவயல் தொகுதிக்குள் கொண்டு வந்ததன் விளைவாலும், தமிழர்களுக்குள் ஒற்றுமை இல்லாத காரணத்தாலும், தமிழர்கள் மீண்டும் எம்எல்ஏவாக முடியவில்லை. கன்னடம் அல்லது தெலுங்கு பூர்வீகத்தினர் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளனர்.
தமிழ் எழுத்துக்கள்
அதேநேரம், தமிழர்கள் தங்களது இருப்பை பல வழிகளில் உணர்த்திக் கொண்டுதான் உள்ளனர். அதில் ஒன்றுதான், தங்கவயல் பகுதிகளில் தமிழ் மொழி பெயர் பலகைகள் மிளிர்வதும். அதேநேரம், தாங்கள் வாழும் பகுதி கர்நாடகா என்பதை அவர்கள் குறைத்து மதிப்பிடுவது இல்லை. கன்னடம், தமிழ் என இரு மொழிகளில் எழுத்துக்கள் உண்டு. அதிலும் கூட, கன்னடம்தான், மேலே எழுதப்பட்டிருக்கும்.
தங்கவயலில் போராட்டம் நடத்திய கன்னட அமைப்புகள்
இருப்பினும், வாட்டாள் நாகராஜின் கன்னட சலுவளி கட்சி உள்ளிட்ட சில தீவிர கன்னட அமைப்புகளுக்கு இந்த விஷயம் கண்களை உறுத்திக் கொண்டே உள்ளது. ஏதாவது ஒரு பிரச்சினையை வைத்து, தமிழர்களுக்கு எதிராக துவேஷம் விதைப்பது இவர்கள் வாடிக்கை. இப்படித்தான், மேகதாது அணைகட்ட தமிழ்நாடு அரசு மற்றும் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிப்பதை காரணமாக வைத்து, கடந்த 10ம் தேதி கன்னட சலுவளி கட்சியினர், வாட்டாளர் நாகராஜ் தலைமையில், தங்கவயல் பேருந்து நிலையம் பகுதிக்கு வந்து போராட்டம் நடத்தினர். காவிரி பாசன பகுதியாக இல்லாவிட்டாலும், தங்கவயலை போராட்ட களமாக தேர்ந்தெடுக்க காரணம், அங்கே தமிழர்கள் கணிசமாக வாழ்வதுதான்.
வாட்டாள் அட்டகாசம்
அத்தோடுவிடவில்லை வாட்டாள். தங்கவயல் பஸ் நிலையத்தின் நுழைவாயிலில், தேசிய கவிஞர் குவெம்பு பஸ் நிலையம் என்று தமிழில் எழுதப்பட்டிருந்ததை, தார் பூசி அழித்து அட்டூழியம் செய்தனர். இத்தனைக்கும், கன்னடம், ஆங்கிலம், அதன்பிறகுதான் தமிழில் பேருந்து நிலையத்தின் பெயர் இடம் பெற்றிருந்தது. ஆனால் தமிழ் எழுத்துக்களை கன்னட மண்ணில் இடம்பெற விட மாட்டோம் என்று இப்படி ஒரு செயலை செய்துள்ளனர் வாட்டாள் அமைப்பினர். ஏற்கனவே பெங்களூரில் இப்படியான அட்டூழியங்களை அவர்கள் அரங்கேற்றியதால் தமிழர்கள் யாரும் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் எழுதுவது கிடையாது. இப்போது தங்கவயல் வரை தேடிப் போய் அட்டகாசம் செய்துள்ளனர் வாட்டாள் கட்சியினர்.
மீண்டும் அரியணை ஏறிய தமிழ்
இதனால் கொதித்து போயினர், தங்கவயல் வாழ் தமிழர்கள். இதனிடையே, கோலார் நகரசபை கூட்டம் நடைபெற்றது. அதில் தங்கவயல் பேருந்து நிலையத்தில் மீண்டும் தமிழ் எழுத்துக்கள் இடம் பெற வேண்டும் என்றும், ஒற்றுமையாக இருக்கும் மக்களிடையே மோதலை தூண்டிவிட்டு குளிர்காய நினைக்கும் வாட்டாள் நாகராஜ் மற்றும் அவரது அமைப்பினர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கன்னட கவுன்சிலர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்ததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மீண்டும் தங்கவயல் பேருந்து நிலையத்தில் தமிழில் பெயர் எழுதப்பட்டது. இதை பார்த்ததும் அங்கு குவிந்த, தங்கவயல் தமிழர்கள் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.