20 நாட்களுக்கு பின் உக்ரைனிலிருந்து வந்த கர்நாடக மாணவர் உடல்... நேரில் அஞ்சலி செலுத்திய முதலமைச்சர்
பெங்களூரு: உக்ரைனில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட கர்நாடக மாணவர் நவீனின் உடல் 20 நாட்களுக்கு பின்னர் விமானம் மூலம் இந்தியா கொண்டு வரப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் காரணமாக அந்நாட்டில் தங்கியிருந்த மாணவர்கள் உட்பட ஏராளமானவர்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகினர்.
குறிப்பாக மருத்துவம் படிப்பதற்காக உக்ரைனுக்கு சென்ற இந்திய மாணவர்கள் செய்வதறியாது தவித்து உதவி கோரி வீடியோக்களை வெளியிட்டு வந்தனர்.
அங்கு மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி கற்பதற்காக சென்ற மாணவர்களின் பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை மீட்டுத் தருமாறு மத்திய மாநில அரசுகளிடம் உருக்கமான கோரிக்கைகளை வைத்து வந்தனர்.
அடையாளம் காணப்பட்டது மாணவர் நவீன் உடல்.. கர்நாடக முதல்வர் தகவல்.. இந்தியா கொண்டுவர ஏற்பாடு
ஆப்பரேஷன் கங்கா
இந்திய அரசும் ஆப்பரேசன் கங்கா என்ற பெயரில் சிறப்பு விமானங்கள் மூலம் இந்திய மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டது. தாக்குதல்கள் நடைபெற்ற இடங்களில் இருந்து தப்பி அண்டை நாடுகளுக்கு வந்த இந்திய மாணவர்களை சிறப்பு விமானம் மூலம் மத்திய அரசு இந்தியா அழைத்து வந்தது.
2 இந்திய மாணவர்கள் உயிரிழப்பு
இதனிடையே தாக்குதல் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த கார்கீவ் நகரிலிருந்து உணவு வாங்குவதற்காக பதுங்கு குழியில் இருந்து வெளியே சென்ற கர்நாடகா மாநிலம் ஹவேரி மாவட்டத்தை சேர்ந்த மருத்துவ மாணவர் நவீன் சேகரப்பா ஞானகவுடர் மார்ச் 1 ஆம் தேதி ரஷ்யாவின் தாக்குதலில் கொல்லப்பட்டார். அதேபோல் பஞ்சாப் மாநிலம் பதிண்டாவை சேர்ந்த சந்தன் ஜிண்டால் என்ற மாணவர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்
கர்நாடக முதலமைச்சர் நேரில் அஞ்சலி
இதனையடுத்து பெங்களூரு விமான நிலையம் சென்ற கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மாணவர் நவீன் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அங்கிருந்து அவரது உடல் சொந்த ஊரான ஹவேரிக்கு உறவினர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட இருக்கிறது.
ஆராய்ச்சிக்காக வழங்கப்படும் மாணவர் உடல்
மாணவர் நவீனின் உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக வழங்க இருப்பதாக அவரது குடும்பத்தினர் ஏற்கனவே தெரிவித்து இருந்தனர். சொந்த ஊரில் இறுதிச் சடங்குகளை நிறைவேற்றிய பிறகு அவரது உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காக கர்நாடகாவின் தேவனாங்கிரியில் உள்ள எஸ்.எஸ். மருத்துவக் கல்லூரியிடம் வழங்கப்பட உள்ளது.