சூரியனை ஆய்வு செய்ய இதற்கு முன்னர் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் என்னென்ன? முழு விவரம் இதோ
பெங்களூர்: சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ முதல் முறையாக ஆதித்யா எல் 1 எனும் விண்கலத்தை நாளை அனுப்ப இருக்கிறது. ஆனால் உலக நாடுகள் 1960ம் ஆண்டிலேயே சூரியனை ஆய்வு செய்ய விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பியுள்ளன.
சூரியனிலிருந்து வெளிவரும் காந்த புயல்கள் மிகவும் ஆபத்தானவை. கடந்த 1859ம் ஆண்டு இதுபோன்ற புயல் ஒன்று பூமியை தாக்கியது. இதன் காரணமாக தந்தி சேவைகள், இதர மின்னணு சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனை கேரிங்டன் நிகழ்வு என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். 1859ம் ஆண்டை விட தற்போது மின்னணு உபகரணங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளன.

வானத்தில் தொங்கும் செயற்கைக்கோள்கள் தொடங்கி, பூமியில் இயங்கும் அணு உலைகள் வரை மின்னணு உபகரணங்களின் துணையோடுதான் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இப்படி இருக்கையில் மீண்டும் ஒரு சூரிய காந்த புயல் உருவானால் இந்த உலகமே அழிவை நோக்கி போகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த புயலால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மீள குறைந்தது 20 ஆண்டுகள் ஆகலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
எனவே இது குறித்தும், சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ள உலக நாடுகள் பல்வேறு விண்கலன்களை அனுப்பியுள்ளன. அதன்படி 1960 முதல் 1969ம் ஆண்டு வரை அமெரிக்கா 6 பயோனியர் விண்கலன்களை சூரியனை நோக்கி அனுப்பியுள்ளது. இதில் 5 மிஷன்கள் வெற்றியடைந்த நிலையில் ஒன்று தோல்வியடைந்தது.
அதேபோல 1974ம் ஆண்டு தொடங்கி 1997ம் ஆண்டு வரை சுமார் 7 மிஷன்கள் சூரியனை நோக்கி செயல்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, ஜெர்மனியும், அமெரிக்காவும் சேர்ந்து ஹீலியல் ஏ எனும் விண்கலத்தை 1974-1982ம் ஆண்டில் செயல்படுத்தியது. அதேபோல 1976-1985 ஹீலியஸ் பி திட்டத்தை இரு நாடுகளும் செயல்படுத்தின. இதனைத் தொடர்ந்து, 1978-1982ம் ஆண்டில் நாசா ISEE-3 எனும் திட்டத்தை அமல்படுத்தியது.
1994-95ம் ஆண்டில் நாசாவும் ஐரோப்பிய விண்வெளி மையமும் சேர்ந்து Ulysses விண்கலத்தயும், 1994-2020ம் ஆண்டு WIND திட்டத்தை நாசாவும் செயல்படுத்தியது. பின்னர் 1996ம் ஆண்டு SOHO எனும் விண்கலம் ஐரோப்பா-அமெரிக்கா சேர்ந்து ஏவியது. இது இரண்டு ஆண்டுகள் மட்டுமே செயல்படும் என்று கணிக்கப்பட்ட நிலை 25 ஆண்டுகள் கடந்தும் சிறப்பாக பணியாற்றி வருகிறது. மேலும் 2 ஆண்டுகள் என 2025வரை இது செயல்படும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். நாசாவின் ACE விண்கலம் 1997ம் ஆண்டு ஏவப்பட்டது. இது 2024ம் ஆண்டு வரை இயங்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து 2000ஆம் ஆண்டுக்கு பின்னர் 9 விண்கலன்கள் சூரியனை ஆய்வு செய்ய உலக நாடுகள் அனுப்பியுள்ளன. அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள்தான் தற்போது வரை சூரியனுக்கு விண்கலன்களை அனுப்பியுள்ளன. இதனையடுத்து இந்தியா நாளை முதன் முறையாக சூரியனை நோக்கி விண்கலன்களை அனுப்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications