பாஜகவுக்கு "பெரிய சிக்கல்!" ஊழல் புகார் டூ உட்கட்சி பிரச்சினைகள்.. கர்நாடகாவில் சம்பவம் வெயிட்டிங்?
பெங்களூர்: கர்நாடகாவில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் என இரு கட்சிகளிலும் பல சிக்கல்கள் உள்ளன. இதைச் சமாளிப்பதே அக்கட்சிகளுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.
கடந்த 2018 கர்நாடக சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு என்ன நடந்தது என அனைவருக்கும் தெரியும். 104 இடங்களில் வென்று பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், அவர்களால் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் வெல்ல முடியவில்லை.
இருப்பினும், முதலில் எடியூரப்பா 2018இல் ஆட்சி அமைத்தார். அதன் பின்னர் அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போனது. இதையடுத்து வெறும் ஆறே நாட்களில் அவர் பதவி விலகினார். அதன் பின்னரே காங்கிரஸ் கூடன் கூட்டணி அமைத்து ஜேடிஎஸ் கட்சியின் குமாரசாமி முதல்வராகப் பதவியேற்றார்.

2018 தேர்தல்
குமாரசாமி முதல்வராகப் பதவியேற்ற விழாவில் பல்வேறு எதிர்க்கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இருப்பினும், பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களைத் தக்க வைப்பது என்பது சிக்கலாகவே இருந்தது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குமாசராமிக்கு சிக்கலைக் கொடுத்தனர். சுமார் ஓராண்டு மட்டுமே இந்த ஆட்சி இருந்த நிலையில், 2019இல் குமாரசாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து பதவியை இழந்தது. மீண்டும் எடியூரப்பா கர்நாடக முதல்வராகப் பதவிக்கு வந்தார். அதுவும் கூட சில ஆண்டுகள் மட்டுமே நீட்டித்தது.

பாஜக தயாராக இல்லை
கடந்த ஆண்டு ஜூலை மாதம், எடியூரப்பா முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாக பசவராஜ் பொம்மை முதல்வராக நியமிக்கப்பட்டார். இதுதான் கர்நாடகாவில் கடந்த 5 ஆண்டுகளில் நடந்த முக்கிய அரசியல் நிகழ்வுகள். அதேநேரம் கடந்த 2014 முதல் மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் வெற்றி பெற்றுள்ளது. வடக்கே பாஜகவுக்குப் பல மாநிலங்கள் தனது கட்டுப்பாட்டில் இருந்தாலும் கூட, தெற்கே கர்நாடகாவில் மட்டும் பாஜக ஆட்சியில் உள்ளது. இதனால் இதை இழக்க பாஜக தயாராக இல்லை.

காங்கிரஸ்
மறுபுறம் காங்கிரஸ் கட்சி இப்போது ராஜஸ்தான், சத்தீஸ்கர், இமாசல பிரதேசம் என வெறும் 3 மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது. கர்நாடகாவில் எப்படியாவது ஆட்சியைக் கைப்பற்றியே தீர வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் உள்ளது. இதனால் அடுத்தாண்டு நடைபெறும் கர்நாடக சட்டசபைத் தேர்தல் இரண்டு கட்சிகளுக்குமே முக்கியமானதாக மாறியுள்ளது. ஆனால், உண்மையில் கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமின்றி, பாஜகவிலும் கூட ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கவே செய்கிறது.

குழப்பம்
கர்நாடக பாஜகவில் ஏற்கனவே குழப்பம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அத்துடன் மாநில அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகளும் கடுமையாக உள்ளது. ஊழல் புகார்களில் மாநில அரசு கடும் நடவடிக்கை எடுப்பதாக பசவராஜ் பொம்மை கூறினாலும் கூட மக்கள் அதிருப்தியில் தான் உள்ளனர். அதேபோல அங்குள்ள மூத்த தலைவர்களான எடியூரப்பா மற்றும் முதல்வர் பசவராஜ் பொம்மை இடையே பல முக்கிய விவகாரங்களில் கருத்துவேறுபாடு நிலவுவதாகக் கூறப்படுகிறது. கர்நாடக பாஜக நடத்தும் சில முக்கிய கூட்டங்களில் அவர் கலந்துகொள்வதில்லை. இதில் இருந்தே அவர்களுக்கு இருக்கும் மோதல் தெளிவாகத் தெரிகிறது.

எடியூரப்பா
கர்நாடக பாஜகவில் பவர்புல்லான நபராக எடியூரப்பா பார்க்கப்படுகிறார். அவர் முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதே அவரது ஆதரவாளர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பசரவாஜ் பொம்மை நடவடிக்கையால் அவர் கடும் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் அவரது பேச்சே அவரது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது. அதில், "யாரும் யாரையும் முடித்துவிட முடியாது. எனக்கென இன்னுமே ஆதரவாளர்கள் இருக்கவே செய்கிறார்கள். கர்நாடகாவில் பாஜகவை மீண்டும் ஆட்சி கொண்டு வந்தவன் நான். இது அனைவருக்கும் தெரியும்" என்று கூறி அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார்.

பசவராஜ் பொம்மை
அதேபோல முதல்வர் பசவராஜ் பொம்மை அமைச்சரவையை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டிருந்தார். தற்போதுள்ள சூழலில் புதிதாக 6 அமைச்சர்களை நியமிக்க முடியும். தேர்தலுக்கு முன்பு அமைச்சரவை விரிவாக்கம் கட்சிக்கு வலு சேர்க்கும் என்று ஒரு தரப்பு கூறுகிறது. ஆனால், இதுவே பின்னடைவை ஏற்படுத்தவும் வாய்ப்புள்ளதால் இது தேவையற்ற முயற்சி என பாஜகவிலேயே எதிர்ப்பும் எழுந்தது. இது தொடர்பாக அமைச்சர் அமித் ஷாவையும் சந்தித்து பசவராஜ் பொம்மை விளக்கம் அளித்தார். இருப்பினும், பசவராஜ் பொம்மை திட்டத்திற்கு அமித் ஷா ஒப்புக்கொள்ளவில்லை.

காங்கிரஸ்
பாஜகவை போலவே காங்கிரஸ் கட்சியிலும் கூட சில பிரச்சினைகள் இருக்கவே செய்கிறது. அங்குக் காங்கிரஸ் தலைவராக உள்ள டிகே சிவக்குமார் மற்றும் சித்தராமையா இடையே மோதல் நிலவுவதாகக் கூறப்படுகிறது. முன்னாள் முதல்வர் சித்தராமையா தற்போது எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தாலும் கூட அவரது ஆதரவாளர்கள் போட்டியிட இந்த முறை அதிக இடங்கள் கிடைக்காது என்றே கூறப்படுகிறது. மேலும், முதல்வர் பதவிக்கும் டிகே சிவக்குமார் மற்றும் சித்தராமையா இடையே போட்டி உள்ளது. இதனால் வரும் கர்நாடக சட்டசபைத் தேர்தல் இரு கட்சிகளுக்கும் சவால் நிறைந்த ஒன்றாகவே இருக்கும்.












Click it and Unblock the Notifications