ஆர்எஸ்எஸ் தலைவராக ஏன் தலித் இல்லை? பாஜகவுக்கு கர்நாடக மாஜி முதல்வர் சித்தராமையா கேள்வி
பெங்களூர்: ‛‛ஆர்எஸ்எஸ் அமைப்பில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே தலைவராக உள்ளனர். ஏன் தலித் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் தலைவராக நியமிக்கப்படுவது இல்லை?'' என கர்நாடக முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா கேள்வி எழுப்பியுள்ளார்.
கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சியாக உள்ளது. எதிர்க்கட்சி தலைவராக சித்தராமையா செயல்பட்டு வருகிறார்.
அடுத்த ஆண்டு மே மாதம் கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பாஜக, காங்கிரஸ் கட்சியினர் இடையே பல்வேறு விஷயங்களில் விவாதங்கள் தீவிரமடைந்துள்ளது.

காங்கிரஸ்-பாஜக விமர்சனம்
காங்கிரஸ் சார்பில், ‛‛பாஜக அரசு 40 சதவீத கமிஷன் பெற்று செயல்படுகிறது. சிறுபான்மை மக்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகிறது. பொதுமக்களுக்கான நலத்திட்டங்களில் ஊழல் செய்வதோடு, ஆர்எஸ்எஸ் சித்தாந்தம், கொள்கைகளை மக்கள் மத்தியில் திணிக்கிறது'' என பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு பாஜகவும் பதிலடி கொடுத்து வருகிறது. புள்ளி விபரங்களோடு நலத்திட்ட பணிகளையும், மத்திய, மாநில அரசுகளின் ஊழலற்ற ஆட்சி நடத்துவதாகவும் கூறி வருவதோடு, முந்தையகால காங்கிரஸ் கட்சியினரின் ஊழலை மேற்கொள்காட்டி பாஜகவினர் மேற்கொள் காட்டுகின்றனர்.

ஆரியர்களா? திராவிடர்களா?
இந்நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு எதிர்க்கட்சி தலைவரான சித்தராமையா, ‛‛ஆர்எஸ்எஸ்காரர்களுக்கு பூர்வீகம் இந்தியாவா?. ஆரியர்கள் இந்த நாட்டை சேர்ந்தவர்களா?. இந்த நாட்டை சேர்ந்தவர்கள் ஆரியர்களா? திராவிடர்களா? என பார்த்தால் திராவிடர்கள் தான் இந்த நாட்டின் பூர்வக்குடிகள். நாம் வேர்களை தேடி செல்ல வேண்டும்'' என விமர்சித்து இருந்தார். இதற்கு முதல்வர் பசவராஜ் பொம்மை, ‛‛முதலில் சித்தாரமையா தான் திராவிடரா? அல்லது ஆரியரா? என்பதை அறிவிக்க வேண்டும்'' என தெரிவித்து இருந்தார். மேலும் பல பாஜக தலைவர்கள், சித்தாரமையாவுக்கு பதிலளித்து வருவததோடு, சிலர் விமர்சித்தும் வருகின்றனர்.

தலித்களுக்கு வாய்ப்பு மறுப்பது ஏன்?
இந்நிலையில் தான் சித்தராமையா மீண்டும் டுவிட்டரில் தொடர்ந்து சில பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியுள்ளதாவது: ஆர்எஸ்எஸ். அமைப்பில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே முக்கிய பதவியில் இருப்பது ஏன்?. இந்துக்களாக இருந்தாலும் தலித் உள்பட பிற்படுத்தப்பட்டோருக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்? என நான் கேள்வி கேட்டேன். எனது இந்த கேள்விக்கு ஆர்எஸ்எஸ் அல்லது பாஜகவினர் பதில் கூறவில்லை. எனது கேள்விக்கு பதிலளிக்க முடியாத பாஜகவினர் என்னை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுகின்றனர். இந்த சிறிய கேள்விக்கு கூட பதிலளிக்க முடியாத 97 ஆண்டு வரலாறு கொண்ட ஆர்எஸ்எஸ் ஒரு பலவீனமான அமைப்பா?.

மீண்டும் கேள்வி
இதுபற்றி அறிய ஆர்எஸ்எஸ் அலுவலகம் வரும்படி என்னை அழைக்கிறார்கள். அங்கு சென்று 40 சதவீத கமிஷன் பெறுவது எப்படி? விலை கொடுத்து எம்எல்ஏக்களை வாங்குவது என்பது அறிந்து கொள்ள வேண்டுமா?. ஆர்எஸ்எஸ் அலுவலகத்திற்கு சென்றால் என்ன நிலை ஏற்படும் என்பதற்கு பாஜக தலைவர் நளின்குமார் கட்டீலே சாட்சி. அவருக்கு கலாசாரம் உள்ளிட்ட எதுவும் தெரியவில்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பில் குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் முக்கிய பதவியில் இருப்பது ஏன்? மற்றவர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்? என்ற கேள்விக்கு பதிலளிக்குமாறு நான் மீண்டும் கேட்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications