ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு! கொலை மிரட்டலையடுத்து.. 3 நீதிபதிகளுக்கு ‛ஒய்’ பிரிவு பாதுகாப்பு!
பெங்களூர்: ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு கூறிய கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ணா தீக்சித், ஜேஎம் காஜி ஆகியோருக்கு ‛ஒய்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் நடந்த ஆர்பாட்டத்தில் மிரட்டல் விடுக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பி பியூ கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதற்கு மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் தடை விலக்கி கொள்ளப்படவில்லை. கர்நாடக அரசும் சீருடை முறையை கட்டாயமாக்க உத்தரவிட்டது.
இதற்கிடையே ஹிஜாப் தடையை நீக்க வேண்டும் எனக்கூறி உடுப்பி மாவட்ட கல்லூரி மாணவிகள் பெங்களூரில் உள்ள கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜேஎம்காஜி அமர்வு வழக்கை பிப்ரவரி 10 முதல் விசாரிக்க துவங்கியது.

உயர்நீதிமன்றம் தீர்ப்பபு
இந்த அமர்வு 11 நாள் விசாரணை நடத்தியது. பிப்ரவரி 25ல் விசாரணை முடிவடைந்தது. இதையடுத்து தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அதன்பின் மார்ச் 15ல் தலைமை நீதிபதி ரிதுராஜ் அவஸ்தி, நீதிபதிகள் கிருஷ்ண தீட்சித், ஜே.எம்.காஜி தீர்ப்பு வழங்கினர். ஹிஜாப் என்பது இஸ்லாமிய சட்டத்தில் அத்தியாவசிய விஷயமல்ல எனக்கூறிய உயர்நீதிமன்றம், கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் எனக்கூறி கர்நாடக அரசின் உத்தரவை உறுதி செய்தனர்.

முழு அடைப்பு
இந்த தீர்ப்பால் முஸ்லிம் அமைப்பினர் அதிருப்தி அடைந்தனர். 2 நாட்களுக்கு முன்பு கர்நாடகத்தில் பந்த் அறிவித்து கடைகளை அடைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கல்வி நிறுவனங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதேபோல் தமிழகம் உள்பட பிற மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

நீதிபதிகளுக்கு மிரட்டல்
இந்நிலையில் தமிழகத்தில் மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதிகளை மிரட்டும் வகையில் பேசும் வீடியோ வெளியானது. இதுதொடர்பாக தல்லாக்குளம் உள்பட பல போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பதிவாளரிடம் புகார்
இந்நிலையில் வழக்கறிஞர் உமாபதி கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளருக்கு கடிதம் ஒன்று எழுதினார். அதில், "எனக்கு வாட்ஸ்அப்பில் வீடியோ ஒன்று வந்தது. அதில் தமிழ் மொழியில் பேசினார்கள். ஹிஜாப்புக்கு தடை விதித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி உள்ளிட்டவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில்பேசியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தேன். இது மதுரை மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் பேசுவது போல் உள்ளது. மேலும் ஜார்கண்ட் உயர்நீதிமன்ற நீதிபதி கொல்லப்பட்டதை அந்த நபர் குறிப்பிட்டுள்ளது. மேலும் ஒருமையில் பேசியதுடன், நீதிபதி வாக்கிங் செல்லும் இடம் தெரியும் என கூறுகிறார்'' என தெரிவித்து இருந்தார்.

‛ஒய்’ பிரிவு பாதுகாப்பு
இதுதொடர்பாக மற்றொரு வழக்கறிஞர் சுதா கத்வா பெங்களூரு கப்பன் பார்க் போலீசில் புகார் செய்தார். அங்கும் போலீசார் பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இதனால் ஹிஜாப் வழக்கில் தீர்ப்பு கூறிய நீதிபதிகளுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட 3 நீதிபதிகளுக்கும் ‛ஒய்' பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறினார்.

வளர விடக்கூடாது
இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், ‛‛இந்த மிரட்டலை ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கான அடையாளமாக பார்க்கிறேன். தேசவிரோத செயல்களில் ஈடுபடம் நபர்களை வளர விடக்கூடாது. மதசார்ப்பற்றவர்கள் என அடையாளம் காட்டிக்கொள்ளும் நபர்கள் இந்த விஷயத்தில் மவுனமாக உள்ளனர். இது அவர்களின் போலி மதசார்ப்பற்ற தன்மையை காட்டும் வகையில் உள்ளது. இத்தகைய வகுப்புவாதம் சார்ந்த மிரட்டலுக்கு எதிராக நாம் ஒன்றுபட வேண்டும். ஏனென்றால் இந்தியாவில் சட்டம்-ஒழுங்கு சரியாக இருக்கிறது என்றால் அதற்கு நீதித்துறை தான் காரணம்'' என்றார்.












Click it and Unblock the Notifications