சரக்கு மற்றும் சேவை வரி: ஒரு மாதம் ஓடிப்போச்சு.. மக்கள் என்ன பேசிக்கிறாங்க
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையில் சில பல குறைகள் இருந்தாலும், பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாக இருப்பதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
மும்பை: சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டு ஒருமாதமாகிவிட்டது. இந்த வரி விதிப்பு முறையில் சில பல குறைகள் இருந்தாலும், பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையாக உள்ளது என்பது வர்த்தகர்களின் கருத்து.
நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரும் இடைஞ்சலாக இருந்த பல முனை வரிவிதிப்பு முறையை ஒழித்துக் கட்டிவிட்டு அனைத்து மாநிலங்களையும் ஒரே வரிவிதிப்பு முறையின் கீழ் கொண்டுவரும் நோக்கத்துடன் ஜிஎஸ்டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறையை மிக நீண்ட இழுபறிக்கு பின்பு கடந்த மாதம் 1ம் தேதி முதல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதோ, 4 அடுக்குகளைக் கொண்ட ஜிஎஸ்டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை நடைமுறைப்படுத்தப்பட்டு ஒரு மாதம் கடந்து விட்டது. சிற்சில குறைகளும் நடைமுறைச் சிக்கல்களும் இன்னும் களையப்படாமல் இருந்தாலும், பெரும்பாலான வணிகர்களும் மற்றும் தொழில் துறையினரும் வேறு வழி இல்லாமல் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை ஏற்றுக் கொண்டுவிட்டனர்.

ஜிஎஸ்டி வரி
ஆயினும், சில வகையான பொருட்களுக்கும் சேவைகளுக்கும் ஜிஎஸ்டி வரியானது அதிகமாக உள்ளதாகவும் இதனால், தங்களின் தொழில்கள் நலிவடைந்து போக அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும்அவற்றை மாற்றி அமைக்கும்படியும் வர்த்தகர்களும் தொழில்துறையினரும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துவருகின்றனர். மத்திய அரசும் வர்த்தகர்களின் கோரிக்கையை விரைவில் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளது.

சிக்கலான வரி
பெரும்பாலான வர்த்தகர்கள் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை ஆரம்பத்தில் பயன்படுத்துவதற்கு குழப்பமாகவும் சிக்கலாக இருந்ததாகவும் ஆனாலும் தற்போது பயன்படுத்துவதற்கு மிகவும் ஏற்றதாக உள்ளதாக கூறியதாக மஹாராஷ்டிரா தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் மோகன் குர்நானி தெரிவித்தார்.

விழிப்புணர்வு கருத்தரங்கம்
ஜிஎஸ்டி அமைப்பானது, ஆரம்பத்தில் அனைத்து மாநிலங்களிலும் உள்ள விற்பனை வரித்துறையின் (Sales Tax Department) மூலம் ஆட்களை நியமித்து வர்த்தகர்கள் மற்றும் தொழில் துறையினரின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் கருத்தரங்குகள் நடத்தியது.

நான்கு அடுக்கு வரி
இந்த விழிப்புணர்வு கூட்டங்களில் பெரும்பாலான வர்த்தகர்கள் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறையில் நான்கு விதமாக வரி விதிக்கும் முறையானது ஒரே குழப்பமாக உள்ளதாக குறைபட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

சிறு வர்த்தகர்கள்
ஜிஎஸ்டி பற்றி கொல்கொத்தாவில் மொபைல் கடை நடத்திவரும் வர்த்தகர் ஒருவர், "சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை அமல் படுத்தப்பட்ட பின்பு 15 நாட்களுக்கு என்னால் எந்த ஒரு மொபைல் உபகரணங்களையும் விற்பனை செய்ய முடியவில்லை. ஏனென்றால் ஒவ்வொரு உபகரணத்திற்கும் ஒரு ஜிஎஸ்டி வரியும் உபகரணத்திற்கான குறியீடும் உள்ளது.

விற்க முடியலையே
ஜிஎஸ்டி வரியினையும் அதற்கான குறியீடுகளையும் கணினியில் ஏற்றுவதற்கே எனக்கு கிட்டத்தட்ட 15 நாட்கள் தேவைப்பட்டது. என்னால் ஒரு பொருளைக்கூட முழுமையாக விற்க முடியவில்லை. மேலும் மிகவும் கடினமாக இருந்தது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications