இந்த ஆன்லைன் மெகா சேல் எல்லாம் ஒரு வருஷம் தான்: பியூச்சர் குழும தலைவர்
டெல்லி: ஆன்லைன் வர்த்தகம் கொஞ்சம் கொஞ்சமாக தோல்வி அடைந்து வருவதாக பியூச்சர் குழும தலைவர் கிஷோர் பியானி தெரிவித்துள்ளார்.
பியூச்சர் குழும தலைவர் கிஷோர் பியானி இந்தியாவில் உள்ள ஆன்லைன் வர்த்தகம் பற்றி பேட்டி அளித்துள்ளார். இந்தியாவின் சாம் வால்டன்(வால்மார்ட் நிறுவனர்) என்று அழைக்கப்படும் கிஷோர் கடந்த 2 ஆண்டுகளில் வளர்ந்துள்ள ஆன்லைன் வர்த்தகத்தின் தாக்கத்தை பார்த்து வருகிறார்.
ஆன்லைன் வர்த்தகம் பற்றி முழுவதும் தெரிந்தவர்கள் யாரும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
வளர்ச்சி
ஆன்லைன் வர்த்தகம் வளர்ச்சி இருந்தால் மட்டுமே வெற்றிகரமாக செயல்படும். மாதம் செல்லச் செல்ல வளர்ச்சி நின்றுவிட்டது. சலுகைகளை குறைக்கும்போது விற்பனை 40 முதல் 50 சதவீதம் குறைந்துவிடும்.
ஆன்லைன் மெகா விற்பனை
ஆன்லைன் மெகா சேல்கள் எல்லாம் நீண்ட நாள் தாக்குப்பிடிக்காது என்று நான் கூறியபோது பலர் என்னை கிண்டல் செய்தனர். அதிகபட்சமாக 12 முதல் 18 மாதங்கள் தான் இந்த ஆன்லைன் சேல் எல்லாம். மெகா சேல் நிறுத்தப்பட்டால் மக்கள் எதையும் வாங்க ஆர்வம் காட்டமாட்டார்கள்.
மின்த்ரா
ஃப்ளிப்கார்ட் குழுமத்தின் அங்கமான மின்த்ரா 70 முதல் 80 சதவீத சலுகையில் விற்பனை செய்வதாக விளம்பரம் செய்துள்ளது. யார் அவ்வளவு சலுகை அளிப்பார்கள்? யாருக்கு வியாபாரம் நடக்கவில்லையோ அவர்கள் தான் பெரிய அளவில் சலுகை அளிப்பார்கள். 40 சதவீதம் சலுகை அளித்தும் ஒன்றும் நடக்காததால் தான் அவர்கள் ஆப் மட்டும் வைத்துள்ளனர். வியாபாரம் இல்லாததால் தான் மெகா சலுகை அளித்துள்ளார்கள். இது நிரந்தரம் கிடையாது.
ஆன்லைன்
ஆன்லைன் வர்த்தகம் ஒரு நிலைக்கு வந்த பிறகு நாங்கள் ஆன்லைன் வர்த்தகத்திற்கு வருவோம். அவர்கள் மக்களை ஆன்லைனில் பொருட்கள் வாங்க வைக்கட்டும். மக்களுக்கு அது பழக்கமான பிறகு நாங்கள் ஆன்லைன் வருவோம்.
எலக்ட்ரானிக்ஸ்
முதலில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வியாபாரத்தை ஆன்லைனில் கொண்டு வந்துள்ளோம். தற்போது நாங்கள் 244 நகரங்களில் செயல்படுகிறோம். விரைவில் இதை விரிவு படுத்துவோம். இது ஒரு பயணம் ஆகும்.
மளிகைப் பொருட்கள்
புத்தகங்களில் ஆரம்பித்து செல்போன், எலக்ட்ரானிக்ஸ், ஃபேஷன் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனை ஆன்லைனுக்கு வந்தது. ஆனால் மக்களுக்கு இது விரைவில் அலுத்துவிடும். இந்நிலையில் தான் ஆன்லைன் வர்த்தகர்கள் மளிகைப் பொருட்கள் வியாபாரத்தில் இறங்கியுள்ளனர். இனி அனைவரும் மளிகைப் பொருள் வியாபாரத்தில் இறங்குவார்கள். இந்த வர்த்தகத்தில் பெரிய நிறுவனங்கள் ஈடுபடும். ஆனால் வளர்ச்சி இருந்தால் மட்டுமே அவர்களால் தாக்குப்பிடிக்க முடியும் என்றார் கிஷோர்.