இந்தியாவில் அதிகரிக்கும் அந்நிய நேரடி முதலீடு... 2016ல் 18% அதிகம்
இந்தியாவில் கடந்த ஆண்டு அந்நிய நேரடி முதலீடு 18 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தொழிற்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டெல்லி: இந்தியாவில் கடந்த 2016ஆம் ஆண்டில் அந்நிய நேரடி முதலீடு 18 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தொழிற்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் உள்கட்டமைப்பு, துறைமுக மேம்பாடு, நெடுஞ்சாலைத் திட்டங்கள் ஆகியவற்றை செயல்படுத்துவதற்கு இந்தியாவுக்கு 1 லட்சம் கோடி அளவிலான முதலீடுகள் இந்தியாவுக்கு தேவைப்படுகிறது. எனவே, அந்நிய நேரடி முதலீட்டை அதிகரிப்பதென்பது இந்தியாவுக்கு முக்கியமான ஒன்றாகிறது.
கடந்த 1990களில் முதன் முதலில் இந்தியாவில் அந்நிய முதலீட்டை அனுமதிக்கும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. அப்போது கட்டுமானத்துறை, தொலைத் தொடர்புத் துறை மற்றும் சேவைகள் மட்டும் அனுமதிக்கப்பட்டது. 1991ன் மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்த போது தகவல் தொழில்நுட்பத் துறையும் இந்த நேரடி அந்நிய முதலீட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.
அந்நிய நேரடி முதலீடு
1991 துவக்கத்தில் 400 கோடிக்கும் குறைவான வருவாயை ஈட்டித் தந்த இந்த அந்நிய நேரடி முதலீடு கடந்த 2010ல் 2000 கோடியாக வளர்ந்தது பின் 13% வளர்ச்சியுடன் 2011ல் சுமார் 2300 கோடியைத் தொட்டது. இதில் தொலைத் தொடர்புத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை முக்கிய பங்காற்றியுள்ளது எனலாம்.
2015ஆம் ஆண்டு முதலீடு
2015ஆம் ஆண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 3,992 கோடி டாலராகும். சேவைத் துறை, தொலைத்தொடர்பு, வர்த்தகம், கம்ப்யூட்டர் ஹார்டு வேர், சாப்ட்வேர் மற்றும் ஆட்டோமொபைல் துறைகளில் அதிக முதலீடுகள் வந்துள்ளதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன.
2016ல் 18% அதிகம்
இதுகுறித்து மத்திய தொழிற்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்தியா கடந்த 2015ஆம் ஆண்டில் 39.32 பில்லியன் டாலர் அளவிலான அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்த்திருந்தது. இந்நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டில் 18 சதவிகித உயர்வுடன் 46 பில்லியன் டாலர் அளவிலான அந்நிய நேரடி முதலீடுகள் திரட்டப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதலீடு
சேவைகள் துறை, தொலைதொடர்பு, வர்த்தகம், கம்ப்யூட்டர் ஹார்டுவேர் சாஃப்ட்வேர் மற்றும் ஆட்டோமொபைல் உள்ளிட்ட துறைகளில் அதிகமான முதலீடுகள் குவிந்தன. சிங்கப்பூர், மொரீஷியஸ், ஜப்பான் மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகள் இந்தியாவில் அதிகளவில் முதலீடு செய்திருக்கின்றன.
முதலீடுகளை ஈர்க்க முயற்சி
இந்திய அரசு அந்நிய நேரடி முதலீடுகளை அதிகளவில் ஈர்ப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதாவது, அந்நிய நேரடி முதலீட்டு கொள்கை தாராளமயமாக்கல் மற்றும் வணிகச் சூழல் முன்னேற்றம் ஆகிய நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது. முதலீட்டை அதிகரிக்கும்வகையில் அதிலுள்ள விதிமுறைகள் தளர்த்தப்படும் என்று பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரூபாய் மதிப்பு ஸ்திரம்
கடந்த 2016ஆம் ஆண்டில் பெருமளவிலான அந்நிய நேரடி முதலீடு சிங்கப்பூர், மொரீஷியஸ், நெதர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து வந்துள்ளது. அந்நிய நேரடி முதலீடுகள் அதிகரிப்பால் டாலருக்கு நிகரான ரூபாயின் மாற்று மதிப்பு ஸ்திரமாக நிலைத்திருக்க வழியேற்பட்டுள்ளது.