ஜிஎஸ்டி: அக்டோபர் மாதத்தில் ரூ. 95,131 கோடி வரி வசூல்
சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்டு 4வது மாதத்தில் ஜிஎஸ்டி வரி வசூலானது 95,131 கோடியை தொட்டு சாதனை படைத்தது
டெல்லி: அக்டோபர் மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியின் கீழ் ரூ.95,131 கோடி வசூலாகியுள்ளதாக ஜிஎஸ்டி நெட்வொர்க் அமைச்சர்கள் குழுத் தலைவர் சுஷில் மோடி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு நடைமுறையை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசால் புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) ஜூலை மாதம் 1ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது.
பொருட்களுக்கு 5, 12, 18, 28 சதவீதம் என வரிகள் விதிக்கப்பட்டன. பல்வேறு பொருட்களுக்கு வரி அதிகமாக விதிக்கப்பட்டுள்ளதாக தொழில் துறையினர், எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
ஜிஎஸ்டி வரி
ஜூலை மாதம் ஜிஎஸ்டி என்னும் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட பின்பு மாதாந்திர கொள்முதல், விற்பனை, உள்ளீட்டு பயன்பாட்டு வரி மற்றும் நிகர வரியை செலுத்துவதற்கான படிவங்களை கடந்த ஆகஸ்டு மாத இறுதியில் தான் ஜிஎஸ்டி ஆணையம் இறுதி வடிவம் கொடுத்து ஜிஎஸ்டிஎன் இணைய தளத்தில் அறிமுகப்படுத்தியது.
வர்த்தகர்களுக்கு வாய்ப்பு
ஜிஎஸ்டிஎன் ஆணையமும் வர்த்தகர்கள் மற்றும் தொழில்துறையினரின் இன்னல்களை புரிந்துகொண்டு ஜூலை மாதத்திற்கான படிவங்களையும் வரியையும் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை செப்டம்பர் 20ம் தேதி வரையிலும் நீட்டிப்பு செய்தது. வர்த்தகர்களும் தொழில்துறையினரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு தங்களின் மாதாந்திர படிவங்களை விரைவாக செலுத்தத் தொடங்கினர்.
வரி வசூல் எவ்வளவு
இதனால் சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட முதல் மாதமான ஜூலை மாதத்தின் ஜிஎஸ்டி வரி வசூலானது 95,000 கோடியை தொட்டு சாதனை படைத்தது. இருந்தாலும் இந்த வரி வசூலிலிருந்து முந்தைய மாதங்களுக்கான உள்ளீட்டு வரிப்பயன்பாடாக சுமார் 64000 கோடி ரூபாயை திரும்ப எடுத்துக்கொண்டது தனிக்கதை.
வரி வசூல் குறைவுதான்
இரண்டாவது மாதமான ஆகஸ்டு மாதத்திற்கான ஜிஎஸ்டி வரி வசூலானது 91,000 கோடியை தொட்டாலும் ஜூலை மாதத்துடன் ஒப்பிடும்போது 4000 கோடி ரூபாய் குறைவாகும். இருந்தாலும் உள்ளீட்டு வரிப்பயன்பாடு சற்று குறைவாகவே இருந்தது.
ரூ.92,150 கோடி வசூல்
செப்டம்பர் மாதத்திற்கான வரி வசூலானது கடந்த அக்டோபர் 23ம் தேதி வரையிலும் சுமார் 92,150 கோடி ரூபாயை எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. இது கடந்த ஆகஸ்டு மாதத்துடன் ஒப்பிடும்போது அதிகமாகும். இதில் மத்திய (CGST) வரியாக சுமார் 14,042 கோடி ரூபாயும். மாநில (SGST) வரியாக சுமார் 21,172 கோடி ரூபாயும். மற்றும் ஒருங்கிணைந்த (IGST) வரியாக சுமார் 48,948 கோடி ரூபாயும் வசூலாகி உள்ளது வாயிலாக வசூலானதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்தது.
ஜிஎஸ்டிஆர் 3 பி படிவம்
இந்த வரி வசூலானது சுமார் 43லட்சம் வர்த்தகர்கள் மற்றும் தொழில்துறையினரும் ஜிஎஸ்டிஆர்-3பி படிவத்தை தாக்கல் செய்ததன் வாயிலாக வசூலிக்கப்பட்டது. வணிகர்களுக்கு வரி செலுத்த கால அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்களில் சில பொருட்களின் விலை குறைக்கப்பட்டன. குறிப்பாக, கடந்த முறை நடந்த கவுன்சில் கூட்டத்தில் 213 பொருட்களின் விலை குறைக்கப்பட்டன.
ரூ.95,131 கோடி வசூல்
ஹோட்டலில் உணவுகளுக்கு 18 சதவீத வரி விதிக்கப்பட்டிருந்த நிலையில் அது 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. 48 பொருட்களுக்கு மட்டுமே 28 சதவீத வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதத்தில் 2.1 சதவிகித உயர்வுடன் ரூ.95,131 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக பீகார் மாநிலத் துணை முதல்வரும் ஜிஎஸ்டி நெட்வொர்க் அமைச்சர்கள் குழுவின் தலைவருமான சுஷில் மோடி தெரிவித்துள்ளார்.
மாநிலங்களுக்கான வருவாய் இழப்பு
வரி வசூல் அதிகரித்திருப்பதால் ஜிஎஸ்டியில் ஏற்பட்ட தாக்கம் சீராகி வருவதைக் காண முடிகிறது. தொழில் நிறுவனங்கள் தங்களது வரி ரிட்டன்களைத் தாக்கல் செய்வதற்கு அரசானது கூடுதல் கால அவகாசம் வழங்கியுள்ளது. மேலும், மாநிலங்களுக்கான வருவாய் இழப்பும் குறைந்து 17.6 சதவிகிதமாக (ரூ.7,560 கோடி) மட்டுமே உள்ளது என்று சுஷில் மோடி கூறியுள்ளார்.