வேலை பார்க்காட்டி வீட்டுக்குப் போய்டனும் - நாராயணமூர்த்தி எச்சரிக்கை!
பெங்களூர்: கொஞ்சம் கூட நிறுவனத்துக்கு பயன்படாதவர்கள், வேலை பார்க்காமல் ஓ.பி. அடிப்பவர்களை வேலையை விட்டு அனுப்ப இன்போசிஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாம்.
இப்படிப்பட்டவர்களை ராஜினாமா செய்யுமாறு கேட்டுக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி கூறியுள்ளார்.
இன்போசிஸ் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 1.5 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். இதில் பலர் நல்ல சம்பளம் பெற்றும் கூட வேலையை சரியாக பார்க்காமல் இருப்பது,அசமஞ்சமாக இருப்பது உள்ளிட்ட குறைபாடுகளுடன் இருக்கின்றனர். இவர்களை வீட்டுக்கு அனுப்ப தற்போது இன்போசிஸ் முடிவெடுத்துள்ளதாம்.
இதுகுறித்து இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி கூறியதாவது...
நல்ல சம்பளம் கொடுத்தாலும் இப்படி இருக்கிறார்களே
நாங்கள் எங்களது நிறுவனத்திற்கு ஊழியர்களைச் சேர்க்கும்போது நல்ல சம்பளம் கொடுத்துத்தான் சேர்க்கிறோம். ஆனாலும் பலர் சரியாக வேலை செய்வதில்லை. இப்படிப்பட்டவர்களை வைத்துக் கொண்டு என்ன செய்வது.
ஆள் பிடிக்கும் வேலை எனக்கு
தற்போது எனக்கு இந்த முக்கியமான வேலையைக் கொடுத்துள்ளனர். அதாவது நல்ல சம்பளம் வாங்கியும், சரியாக வேலை செய்யாமல் இருப்போரை அடையாளம் கண்டு அவர்களை வீட்டுக்கு அனுப்பும் வேலை எனக்கு வந்துள்ளது.
இன்னொரு சான்ஸ்.. இல்லாட்டி டிஸ்மிஸ்
இப்படிப்பட்டவர்களுக்கு மறுபடியும் ஒரு வாய்ப்பு தருவோம். அதிலும் அவர்கள் தேறாவிட்டால் வீட்டுக்கு அனுப்புவதைத் தவிர வேறு வழியில்லை. அவர்கள் வேறு வேலையைப் பார்த்துக் கொண்டு போகட்டும்.
செலவு எகிறி விட்டது
கடந்த 2 - 3 ஆண்டுகளில் எங்களது செலவு கடுமையாக உயர்ந்து விட்டது. இப்படிப்பட்ட நெருக்கடியான நிலையில் இருந்தும் கூட நல்ல சம்பளம் தருவது என்ற கொள்கையை நாங்கள் விடவில்லை. இதை ஊழியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்ப வேண்டும்
இன்போசிஸ் நிறுவனம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்ப வேண்டும். இதற்காக அனைவரும் இணைந்து உழைக்க வேண்டும். அதுதான் எனது முதல் குறிக்கோளாக உள்ளது என்றார் மூர்த்தி.
ஓய்வில் இருந்தவரைக் கூப்பிட்டு
ஏற்கனவே ஓய்வு பெற்று போய் விட்டவர் நாராயணமூர்த்தி. ஆனால் இன்போசிஸ் நிறுவனம் பெரும் சரிவை நோக்கி போக ஆரம்பித்ததைத் தொடர்ந்து தற்போது அவரை மீண்டும் வேலைக்குக் கூட்டி வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.