ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை.. வீடு, வாகன கடன் வட்டி குறையாது!
மும்பை: ரிசர்வ் வங்கி இன்று தனது கடன் கொள்கை அறிவிக்கையை வெளியிட்டது. அதில் வங்கிகளின் கடன் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால், வீடு, வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையாது என்பதால் பொதுமக்கள் மத்தியில் இது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் இன்று ரிசர்வ் வங்கியின் கடன் கொள்கை மறு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்வதில்லை என முடிவெடுக்கப்பட்டது.
இதனால் தற்போது உள்ள வட்டி விகிதமே வரும் நிதியாண்டுக்கும் தொடரவுள்ளது. வரும் நிதியாண்ட்டின் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 7.6 சதவீதமாக இலக்கு நிர்ணயித்துள்ளது ரிசர்வ் வங்கி.
வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதம் (ரெப்போ) 6.50 சதவீதமாக தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சிஆர்ஆர் எனப்படும் வங்கிகளுக்கான ரொக்கக் கையிருப்பு 4 சதவீதமாக தொடரும்.
ரிசர்வ் வங்கி முடிவால் வீடு, வாகனங்களுக்கான கடன் விகிதம் குறையாது. இதன் காரணமாக வட்டி விகிதம் குறைக்கப்படும், வீடு, வாகன கடன்களில் சற்று நிம்மதி ஏற்படும் என நம்பியிருந்த நடுத்தர வர்க்கத்தினர் பெரும் ஏமாற்றத்தைச் சந்தித்துள்ளனர்.
இருப்பினும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டே வட்டி விகிதத்தைக் குறைக்கவில்லை என்று ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.