பெட்ரோல், டீசல் விலை உச்சத்தில் – ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர மத்திய அரசு மனம் வைக்குமா?
பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
டெல்லி: பெட்ரோல், டீசல் விலை தலைநகர் டெல்லியில் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லா அளவில் உச்சபட்ச விலையை தொட்டு வாகன ஓட்டிகளின் வயிற்றில் புகையை வரவைத்துள்ளது. பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஏப்ரல் 3ஆம் தேதியான இன்று பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 13 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.76.72 காசுகளாகவும், டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து, லிட்டருக்கு ரூ.68.38 காசுகளாகவும் உள்ளன.
பெட்ரோல், டீசல் மீதான விலையை 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி விலையை நிர்ணயம் செய்யும் உரிமையை முன்பு மத்தியில் ஆட்சிக் கட்டிலில் இருந்த காங்கிரஸ் கட்சி, அந்தந்த எண்ணை நிறுவனங்களுக்கு அளித்தாலும் அளித்தது. அன்றிலிருந்து வாகன ஓட்டிகளுக்கு அன்றைக்கு பிடித்தது ஏழரை நாட்டுச் சனி.
ஏழரை நாட்டுச் சனியாவது விரைவில் முடிந்துவிடும். ஆனால், இது என்றுமே விடாது கருப்பாக கெட்டியாக வாகன ஓட்டிகளை பிடித்து ஆட்டி வைத்துக்கொண்டு இருக்கிறது.
பெட்ரோல், டீசல் விலையை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி அமைப்பதால் தங்களுக்கு கடுமையான நட்டம் ஏற்படுவதால், பெட்ரோல், டீசல் விலையை தினசரி மாற்றியமைத்துக் கொள்வதற்கு அனுமதி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. தற்போது மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக, காங்கிரஸ் கட்சி போட்டுக்கொடுத்த பாதையை சற்று விரிவாக்கம் செய்து, தினசரி மாற்றியமைத்துக் கொள்வதற்கு பச்சைக்கொடி காட்டியது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வு
இதனை அடுத்து, பெட்ரோல், டீசல் மீதான விலையை தினசரி மாற்றியமைத்துக்கொள்ளும் நடைமுறை கடந்த ஆண்டு ஜூன் 16ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 65.48 ரூபாய்க்கும் டீசல் 54.93 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டன. தினசரி விலை நிர்ணயம் செய்யும் நடைமுறை அமலுக்கு வந்தபின்பு, தற்போது தலைநகர் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் 73.73 ரூபாய்க்கும், டீசல் 64.58 ரூபாய்க்கும் விற்பனையாகின. ஒருவேறை பெட்ரோலியப் பொருட்கள் ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தால் பெட்ரோல், டீசல் விலை இந்த அளவிற்கு உயர்ந்திருக்காது.
பெட்ரோலியப் பொருட்கள்
ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அமல்படுத்தப்பட்டபோது பெட்ரோலியப் பொருட்களும் ஜிஎஸ்டி வரி விதிப்பு வரம்பிற்குள் கொண்டுவரப்படும் என்று கற்பூரம் அடித்து சத்தியம் செய்யாத குறையாக மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உறுதியளித்திருந்தார். நிதி அமைச்சர் ஜெட்லி உறுதி அளித்ததை நம்பி, அனைவரும் எப்போது பெட்ரோலியப் பொருட்கள் ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் வரும் என்று கடந்த 10 மாதங்களாக காத்திருந்தனர்.
ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் வருமா?
இறுதியாக, கடந்த முறை நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்ட நிதியமைச்சர் ஜெட்லி, பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டுவர மத்திய அரசு எப்போதும் தயார் என்றும், ஆனால் அனைத்து மாநிலங்களும், பெட்ரோலியப் பொருட்களை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டுவர பலத்த எதிர்ப்பு காட்டி வருவதாக சொல்லி, மாநிலங்களின் மீது பழியைப் போட்டுவிட்டு தந்திரமாக தப்பித்து விட்டார்.
நிதியமைச்சர் ஆலோசனை
முன்னதாக, பெட்ரோலியப் பொருட்களின் விலையை குறைக்கவேண்டும் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம், நிதி அமைச்சருக்க கோரிக்கை விடுத்தது. ஆனால் அந்த கோரிக்கையை நிதியமைச்சர் நிராகரித்துவிட்டார். அதற்கு மாறாக அனைத்து மாநிலங்களும் பெட்ரோலியப் பொருட்களின் மீதான வாட் வரியை குறைக்குமாறு ஆலோசனை வழங்கினார்.
வரி வருவாய் பாதிப்பு
பாஜக ஆளும் மாநிலங்கள் உள்பட பெருவாரியான மாநிலங்கள், வாட் வரியை குறைத்தால் தங்கள் மாநிலங்களின் வரி வருவாய் கடுமையாக பாதிப்படையும் என்று கூறி நிதி அமைச்சரின் ஆலோசனையை ஏற்க மறுத்துவிட்டன. மத்திய அரசும், மாநில அரசுகளும் இப்படி ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி கைகாட்டிவிட்டு தப்பித்துக் கொள்வதால், இடையில் மாட்டிக் கொண்டு தவிப்பது, இவர்களை ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்த அப்பாவி மக்கள்தான்.
பணவியல் கொள்கை
சில்லறை பணவீக்கம் குறைந்தாலும், பெட்ரோலியப் பொருட்களின் விலை ஏற்றத்தால் போக்குவரத்து செலவுகள் கூடிக்கொண்டு செல்வதால், மொத்த பணவீக்க விகிதம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை மனதில் கொண்டு மத்திய ரிசர்வ் வங்கி, வரும் ஏப்ரல் 4ம் தேதி நடக்கவிருக்கும் பணவியல் கொள்கை குறித்த கூட்டத்தில் வட்டி விகிதத்தை குறைக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல் விலை அதிகரிப்பு
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை குறைந்தால் இங்கு பெட்ரோல், டீசல் விலையை ஒரு பைசா, இரண்டு பைசா என்று குறைப்பதும், கச்சா எண்ணை விலை கூடினால் ஒரு ரூபாய் அல்லது இரண்டு ரூபாய் என கூட்டுவதும் வாடிக்கையாக நடந்துவருகிறது. தினசரி பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்யும் மூன்று எண்ணை நிறுவனங்களின் கடந்த 5 ஆண்டுகளின் நிகர லாபம் கீழே தரப்பட்டுள்ளது.
லாபத்தில் எண்ணெய் நிறுவனங்கள்
இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேசன் லிமிடெட் 2012-13ஆம் நிதியாண்டில் ரூ. 904.71 லாபம் சம்பாதித்துள்ளது.
2013-14 ஆம் நிதியாண்டில் 1,733.77கோடி ரூபாயும், 2014-15 நிதியாண்டில் 2,733.26, 2015-16ஆம் நிதியாண்டில் ரூ 3,862.74கோடியும் 2016-17ஆம் நிதியாண்டில் 6,208,80 கோடி ரூபாயும் லாபம் சம்பாதித்துள்ளது.
பாரத் பெட்ரோலியம் கார்பரேசன் லிமிடெட் நிறுவனம் கடந்த 2016-17 ஆம் நிதியாண்டில் ரூ. 8,039.30 கோடி லாபம் சம்பாதித்துள்ளது. இந்தியன் ஆயில் கார்பரேசன் லிமிடெட் நிறுவனம் 2016-17ஆம் நிதியாண்டில் ரூ. 19,106.40 கோடி லாபம் பெற்றுள்ளது.
உண்மை நிலவரம் என்ன?
தினசரி விலை நிர்ணயம் செய்யும் உரிமையை தங்களுக்கு வழங்கினால் மட்டுமே, நஷ்டத்தில் இயங்கி வரும் தங்கள் நிறுவனங்களை காப்பாற்ற முடியும் என்று அரற்றிக் கொண்டிருக்கும் எண்ணை நிறுவனங்களின் லாபத்தைப் பார்த்தால் உண்மை நிலவரம் என்ன என்பது பலரும் அறியாத உண்மை. நம் அண்டை நாடுகளில் எல்லாம் பெட்ரோல், டீசல் விலை மிகக் குறைந்த விலையில் தான் விற்கப்படுகிறது.
அருண் ஜெட்லி கையில் இருக்கு
பெட்ரோல், டீசலை நம்மிடம் இருந்து இறக்குமதி செய்யும் நேபாளத்தில் பெட்ரோல், டீசல் விலை மிகக் குறைவுதான். ஆனால், பெட்ரோல் மற்றும் டீசலை ஏற்றுமதி செய்யும் நம் நாட்டிலோ நிலைமை தலைகீழ். இதற்கு ஒரே தீர்வு பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி வரம்பிற்குள் கொண்டு வருவதுதான். மத்திய அரசு அதைச் செய்யுமா? விடை நிதி அமைச்சர் ஜெட்லியின் கையிலா அல்லது பிரதமர் மோடியின் கையிலா? தெரியவில்லை!