இ வே பில் பெற பின் நம்பர் அவசியம் - ஜிஎஸ்டி நெட்வொர்க்கின் புதிய விதிமுறை
சரக்கு போக்குவரத்து துறையில் இ வே பில் ரசீதுகளைப் பெறுவதற்கு பின் எண்ணை ஜிஎஸ்டி நெட்வொர்க் கட்டாயமாக்கியுள்ளது.
டெல்லி: இ வே பில் விதிமுறைகளைக் கடினமாக்கும் வகையில், சரக்குகளை ஏற்றுமிடத்திலும், இறக்குமிடத்திலும் தொழில் நிறுவனங்களும், போக்குவரத்து நிறுவனங்களும் பின் எண்ணைக் குறிப்பிட வேண்டுமென்று ஜிஎஸ்டி நெட்வொர்க் கட்டாயமாக்கியுள்ளது.
இன்றைய காலகட்டத்தில் வணிகர்கள் வணிகத்தை பாதுகாப்பாக செய்ய வேண்டியது. கட்டாயமாகிறது. குறிப்பாக மாநிலம் விட்டு மாநிலத்திற்கு சரக்கு அனுப்பப்படும் போது பொருட்களுக்கு பாதுகாப்பாகவும் இந்த இ-வே பில் இருக்கும். இதனால் நேர்மையாக வணிகம் செய்யும் வணிகர்களுக்கு தேவையில்லாத பிரச்னையில் சிக்க வேண்டிய அவசியம் இல்லை.
அதே போல இந்த இ-வே பில் இருக்கும் பட்சத்தில் அரசு அதிகாரிகளுக்கும் பணிச்சுமை குறையும். ஆன்லைன் மூலமாவே இதை பெற்று விட முடிவதால் இதை பெற பெரிய பணிச்சுமையும் இல்லை. இதனால் இந்த திட்டம் வணிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மாநிலங்களுக்கு உள்ளே சரக்குகளை வாகனங்களில் கொண்டு செல்வதற்கு இ-வே பில் எடுக்கும் முறை அறிமுகப்பபடுத்தப்பட்டது. கடந்த ஜூலை மாதம் 3ம் தேதி முதல் உள் மாநிலம் மற்றும் வெளிமாநிலங்களுக்கு சரக்குகளை எடுத்து செல்ல இ-வே பில் நாடு முழுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இவே பில் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் பிறகு செப்டம்பர் 30ஆம் தேதி வரையில் 25.32 கோடி இவே பில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவே பில் முறையில் சுமார் 24.53 லட்சம் வரி செலுத்துவோரும், 31,232 போக்குவரத்து நிறுவனங்களும் பதிவு செய்துகொண்டுள்ளனர்.
ரூ 50 ஆயிரத்திற்கு அதிக மதிப்பு உடைய வரிவிதிப்பிற்கு உட்பட்ட பொருட்களை நீங்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வாகனம் மூலமாக எடுத்து செல்ல இ-வே பில் கட்டாயம் வேண்டும். இ-வே பில்களை வர்த்தகர்கள் பதிவு செய்த ஜிஎஸ்டி எண்ணை கொண்டு இ-வே பில் தளத்தில் பெற்று கொள்ளலாம்.
உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை 50 கி.மீ. தூரத்திற்கு குறைவான தூரத்தில் உள்ள இடங்களுக்கு எடுத்து செல்ல இ-வே பில்லிற்கான படிவத்தில் பகுதி ஏ வை மட்டும் நிரப்பினால் போது பகுதி பி நிரப்ப தேவையில்லை. இ-வே பில் பதிவு செய்யப்பட்டவுடன் அந்த பொருளை பெறுபவர் அதை பதிவு செய்யப்பட்ட நேரத்தில் இருந்து 72 மணி நேரத்திற்கு உள்ளாக அல்லது சரக்கு டெலிவரி செய்யப்படும் முன்பு அவர்கள் அந்த பில்லை அங்கீகரிக்க வேண்டும்.
ரயில்கள், விமானங்கள், கப்பல்கள் மூலமாக சரக்குகளை கொண்டு செல்ல சரக்கை அனுப்புபவரோ அல்லது பெறுபவரோ தான் இ-வே பில்லை பெற வேண்டும். இந்த இடங்களில் பொருட்களை கொண்டு செல்லும் நிறுவனங்கள் பெறக்கூடாது. ஆனால் இந்த வகையான போக்குவரத்தில் சரக்கை அனுப்பி விட்டு கூட இ-வே பில்லை பெற்று கொள்ளலாம்.
இ வே பில் விதிமுறைகளைக் கடினமாக்கும் வகையில், சரக்குகளை ஏற்றுமிடத்திலும், இறக்குமிடத்திலும் தொழில் நிறுவனங்களும், போக்குவரத்து நிறுவனங்களும் பின் எண்ணைக் குறிப்பிட வேண்டுமென்று ஜிஎஸ்டி நெட்வொர்க் கட்டாயமாக்கியுள்ளது. சரக்குப் போக்குவரத்துக்கான சரியான தூரம், இ வே பில் செல்லுபடி நிலை போன்றவற்றைச் சரியாகக் கணக்கிடுவதற்கு பின் எண் உதவிகரமாக இருக்கும் என்று அதிகாரிகள் கருதுகின்றனர்.
தற்போதைய நிலையில், இ வே பில் ரசீதுகளைப் பெறுவதற்கு தூரம், இறக்குமிடம், ஏற்றுமிடம் ஆகிய தகவல்களை மட்டுமே போக்குவரத்து நிறுவனங்களும் தொழில்களும் வழங்குகின்றன. 100 கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவுக்குச் சரக்குகளை இடமாற்றம் செய்தால் அதற்கான மின்னணு ரசீது ஒருநாள் வரை செல்லுபடியாகும். கூடுதலாக ஒவ்வொரு 100 கிலோமீட்டருக்கும் ஒவ்வொரு நாள் கூடுதலாக ரசீது செல்லுபடியாகும்.