நாட்டு நலனை காக்க இறக்குமதியை குறைத்தாக வேண்டும்! வணிக அமைச்சகத்துக்கு மோடி கடிதம்
டெல்லி: இறக்குமதியை குறைக்க என்ன வழி என்று யோசிக்குமாறு தொழில் மற்றும் வர்த்தக துறைக்கு பிரதமர் மோடி அலுவலகம் கடிதம் எழுதியுள்ளது.
இறக்குமதியை குறைத்து, இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வையில், "Make in India" என்ற கோஷத்தை பிரதமர் மோடி அறிமுகம் செய்துள்ளார்.
பிரதமர் அலுவலகம் கடிதம்
இந்த கோஷத்தை நிஜமாக்க, முதல்கட்டமாக இறக்குமதி பொருட்களில் கிடுக்குப்பிடி போடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வணிகத்துறை அமைச்சகத்துக்கு, பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், எந்தெந்த பொருட்களின் இறக்குமதியை குறைக்க முடியும் என்று யோசித்து திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமையல் எண்ணை
இதுகுறித்து வணிக துறை அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், ஆண்டுக்கு 100 மில்லியன் டாலர்களுக்கு மேல் செலவிட்டு இறக்குமதி செய்யப்படும் பொருட்களாக 9 பொருட்களை அடையாளம் கண்டுள்ளோம். அதில் சமையல் எண்ணைதான் 60 சதவீத பங்கை பிடித்துள்ளது.
பழங்கள், தானியங்கள்
இதை தவிர தானியங்கள், பழங்கள், முந்திரி பருப்பு, பதப்படுத்தப்பட்ட உணவுகள், கோகோ தயாரிப்புகள் போன்றவை இறக்குமதியில் முக்கிய இடம் பிடித்துள்ளன என்று தெரிவித்தன.
பாதிக்கும் மேல் இறக்குமதி
உலகிலேயே அதிக அளவில் சமையல் எண்ணையை இறக்குமதி செய்யும் நாடு இந்தியாதான். சமையல் எண்ணை தேவையில் பாதிக்கும் மேல் இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்து வருகிறது இந்தியா. அதே நேரம் சோயா மற்றும் நிலக்கடலை விலை உள்ளூரில் வீழ்ச்சியடைந்துள்ளது.
உள்ளூர் விவசாயிகள் நலன்
இறக்குமதி எண்ணைகள் மீது வரியை உயர்த்தினால் உள்ளூரில் தயாராகும் சோயா மற்றும் கடலை எண்ணை விலை அதிகரித்து உள்ளூர் விவசாயிகள் பலனடைவார்கள் என்ற கோரிக்கை விவசாயிகளால் முன்வைக்கப்படுகிறது. இதையெல்லாம் வணிக அமைச்சகம் கவனத்தில் கொண்டு பிரதமர் அலுவலகத்துக்கு பதில் அனுப்ப உள்ளது.