இந்தியாவுக்கு வருகிறதா அமெரிக்காவின் டெஸ்லா எலெக்ட்ரிக் கார்?
பாலோ அல்டோ(யு.எஸ்): அமெரிக்காவின் கார் உற்பத்தி தொழிலில் புதிய வரவாக இருந்தாலும், ஃபோர்டு, ஜிஎம், க்ரைஸ்லர் ஆகிய மூன்று ஜாம்பவான்களையும், ஓரங்கட்டிவிட்டு மார்க்கெட்டில் வெற்றி பெற்றது டெஸ்லாவின்' மாடல் எஸ்' எலெக்ட்ரிக் கார்.
டெஸ்லா வை உருவாக்கிய எலன் மஸ்க், முதலில் பணக்காரர்களுக்கான ப்ரீமியம் கார்களில் மட்டும் கவனம் வைத்தார். குறைந்த எண்ணிக்கையில் உற்பத்தி செய்தாலும், அந்த யுத்தி அவருக்கு உடனடியாக சந்தையில் முக்கிய இடத்தைப் பெற்றுத்தந்தது. அடுத்து க்ராஸ் ஓவர் எஸ்யூவி 'மாடல் எக்ஸ்' சந்தைக்கு வந்தது தற்போது சாமானியர்களுக்கானது என்ற வரிசையில் 'மாடல் 3' அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
கார் பேட்டரி உற்பத்திக்கு என நெவடாவில் மிகப்பிரம்மாண்டமான தொழிற்சாலையையும் உருவாக்கியுள்ளார்கள். எலெக்ட்ரிக் காருக்கு அதிக தூர பேட்டரி திறனும் , நெடுஞ்சாலைகளில் கார் ரீசார்ஜ் செய்யும் வசதி தான் முக்கியமானது. அமெரிக்காவில் ஏற்கனவே பல நெடுஞ்சாலைகளிலும், நகரங்களில் ரீசார்ஜ் வசதி செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக நாடு முழுவதும் விரிவு படுத்தும் பணி நடைபெறுகிறது. ஒரு தடவை ரீசார்ஜ் செய்தால், கூடுதல் மைல்கள் செல்லும் வகையிலும் , தொழில் நுட்பத்தில் முன்னேற்றம் கண்டுள்ளார்கள்.
ஜப்பான், சீனா, ஐரோப்பி நாடுகள் என உலகம் முழுவதும் எல்லையை விரித்துள்ள டெஸ்லா, இந்தியாவுக்குள்ளும் அடியெடுத்து வைக்க விரும்புகிறது. இந்தியாவில், டெஸ்லா கார்களுக்கான பாகங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இல்லை என்பதால், முற்றிலும் இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள்.
இறக்குமதி வரி 100 சதவீதம் வரையிலும் விதிக்கப்படலாம். அதனால் விலை கூடுவது மட்டுமல்ல, மற்ற கார்களை விட இரண்டு மடங்கும் ஆகிவிடும். ஆகவே மத்திய அரசிடம் இறக்குமதி வரியில் தள்ளுபடி கேட்கிறது டெஸ்லா. தற்போதைய இறக்குமதி வரி கொள்கை படி அத்தகைய வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனாலும் பிரதமருக்கும் டெஸ்லா எலெக்ட்ரிக் காரை இந்தியாவுக்கு கொண்டு வரும் ஆசை இருக்கிறது. 2015ம் ஆண்டிலேயே டெஸ்லா நிறுவனத்தை சுற்றிப் பார்த்த பிரதமர்,உ எலன் மஸ்க்கிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
தற்போது முழுவதும் இறக்குமதி என்ற அடிப்படையில் டெஸ்லா இந்திய அரசை அணுகியுள்ளது. வரியில் சலுகை கிடைத்தால் ஒழிய, சந்தையில் போட்டியிடுவது சவாலான விஷயமாகிவிடும். இன்னொன்று, இந்தியாவில் ரீசார்ஜ் செய்வதற்கான கட்டமைப்பும் டெஸ்லாவுக்கு சவாலானது தான். எந்த மாடல் காரை முதலில் இந்தியாவுக்குள் அறிமுகப்படுத்தப் போகிறார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மாருதியும், ஃபோர்டும் எலெக்ட்ரிக் கார் உற்பத்தி செய்யும் முயற்சியில் உள்ளனர். சந்தையில் யார் முந்தப்போகிறார், அரசின் கடைக்கண் பார்வை டெஸ்லாவுக்கு கிடைக்குமா என்ற எதிர்ப்பார்ப்புகள் உருவாகியுள்ளன.