‘பேசாம தீக்குளிச்சிடு’...முன்னாள் அமைச்சர் சொன்ன யோசனை...விசாரிக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்
கட்சியில் உள்ள கோஷ்டி மோதலில் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய் என தூண்டியதாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய அதிமுக நிர்வாகி ஒருவர் தாக்கல் செய்த மனுவுக்கு விளக்கமளிக்க சென்னை காவல் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோஷ்டி பூசல்
கட்சிக்குள் கோஷ்டி பூசல் உருவாவது சகஜம். இதில் ஒருவர் மீது கட்சித்தலைமைக்கு கோபம் வரவேண்டும் என்பதற்காக சக கட்சி நிர்வாகியை தற்கொலை செய்வது போல் தீக்குளிக்கச் சொல்லி யோசனை சொன்ன முன்னாள் அமைச்சர் தற்போது சிக்கலில் சிக்கியுள்ளார்.
உயர் நீதிமன்றத்தில் வழக்கு
தர்மபுரி மாவட்டம், மோளையனூரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகியும், பஞ்சாயத்து முன்னாள் தலைவருமான கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவ தாக்கல் செய்த மனுவில்,
அதிமுக நிர்வாகி அமைச்சர் மோதல்
"கடந்த 2011ம் ஆண்டு பஞ்சாயத்து தலைவராக இருந்த போது, டெண்டர் ஒதுக்குவது தொடர்பாக முன்னாள் அமைச்சர் பழனியப்பனின் உதவியாளர் வேலாயுதம் என்பவருடன் ஏற்பட்ட பிரச்சனையால், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் செல்வாக்கில் நான் பதவியில் இருந்து நீக்கபட்டேன்.
மூளைச்சலவை
முன்னாள் அமைச்சர் பழனியப்பனுடன் இருந்த அரசியல் மோதலுக்காக, முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் என்னை தற்கொலைக்கு முயற்சிக்கும்படி மூளை சலவை செய்தார், அவர் சொன்னபடி, தலைமை செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் தீக்குளிக்க முயன்று கைது செய்யபட்டு விடுவிக்கபட்டேன்.
கொலைமிரட்டல்
அரசியல் லாபத்துக்காக என்னை தற்கொலைக்கு தூண்டிய கே.பி.அன்பழகன் மீது, வழக்குப்பதிய கோரி கடந்த ஆட்சியில் புகார் அளித்தும் சென்னை காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புகார் அளித்ததால் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
போலீஸில் புகார்
அதனால் நான் அமைதியாகி விட்டேன். ஆட்சி மாற்றத்திற்கு பிறகு கே.பி.அன்பழகன் மீது உரிய சாட்சி ஆவணங்களுடன் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறேன். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியுள்ளார்.
உயர் நீதிமன்றம் உத்தரவு
இந்த மனு நீதிபதி நிர்மல் குமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் அளித்த புகார் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து சென்னை காவல் ஆணையர், கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை நவம்பர் 22 ஆம் தேதி நீதிபதி தள்ளிவைத்தார்.