பஞ்சாப்: முதல் தலித் முதல்வர் 'டென்ட் பாய்' சரண்ஜித் சிங் பதவியேற்பு- ராகுல் காந்தி பங்கேற்பு!
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தின் முதல் தலித் முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி இன்று பதவியேற்றார். சண்டிகர் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சரண்ஜித்சிங் சன்னிக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார்.
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் உள்ளது. முதல்வராக இருந்த அமரீந்தர்சிங் (அமரிந்தர்சிங்) மீது எம்.எல்.ஏக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். 50 எம்.எல்.ஏக்கள் அதிருப்தி தெரிவித்து காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியாவுக்கு கடிதம் அனுப்பினர்.
இதனையடுத்து தமது முதல்வர் பதவியை அமரீந்தர்சிங் ராஜினாமா செய்தார். இதனையடுத்து பஞ்சாப் புதிய முதல்வர் யார் என்கிற விவாதம் எழுந்தது.
'தலித் முகம்..'யார் இந்த பஞ்சாப் புதிய முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி? காங்கிரஸ் திட்டம் வேலை செய்யுமா
புதிய முதல்வராக சரண்ஜித் சிங்
பஞ்சாப் முதல்வராக அம்பிகா சோனி, சுக்ஜிந்தர் ரந்தாவா, நவ்ஜோத்சிங் சித்து என பல பெயர்கள் அடிபட்டன. அம்பிகா சோனி முதல்வர் பதவியை ஏற்க மறுத்துவிட்டார். அத்துடன் சீக்கியர் ஒருவர்தான் பஞ்சாப் முதல்வராக்கப்பட வேண்டும் என்றார். இதனையடுத்து நடந்த ஆலோசனைகளின் முடிவில் சரண்ஜித்சிங் சன்னி புதிய முதல்வராக அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சரண்ஜித் சிங் சந்தித்து பேசினார்.
சரண்ஜித்சிங் பதவியேற்பு
சண்டிகர் ஆளுநர் மாளிகையில் இன்று சரண்ஜித்சிங் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பதவி பிரமாணம் செய்து வைத்தார். மேலும் சுக்ஜிந்தர் ரந்தாவா, ஓ.பி. சோனி ஆகியோர் துணை முதல்வர்களாகவும் பதவியேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார்.
சித்துக்கு வாய்ப்பு மறுப்பு
பஞ்சாப் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை முதல்வராக இருந்த அமரீந்தர்சிங் நிறைவேற்றவில்லை என்பது காங்கிரஸ் தலைவர்களின் குற்றச்சாட்டு. அமரீந்தர்சிங்குக்கு எதிராக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் நவ்ஜோத்சிங் சித்துதான் வரிந்து கட்டிக் கொண்டு விமர்சனம் செய்து வந்தார். சித்துவும் முதல்வர் பதவிக்கான ரேஸில் இருந்தார். ஆனால் காங்கிரஸ் மேலிடம் சித்துவின் ஆதரவாளரான சரண்ஜித்சிங் சன்னியை முதல்வராக்கி உள்ளது.
முதல் தலித் முதல்வர்
பஞ்சாப் மாநிலத்தின் தலித் சமூகங்களில் ஒன்றான ராம்தஸியா சீக்கியர் சமூகத்தைச் சேர்ந்தவர் சரண்ஜித்சிங் சன்னி. இம்மாநிலத்தில் முதல் முறையாக தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதல்வராக பதவியேற்றுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் 33% தலித்துகள் உள்ளனர். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் தலித்துகள் வாக்குகளை மொத்தமாக அறுவடை செய்ய காங்கிரஸ் கையிலெடுத்த அஸ்திரம்தான் சரண்ஜித் சிங் சன்னியை முதல்வராக்கியது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். பஞ்சாப்பில் 2 பேரைத் தவிர ஜாட் சீக்கியர்கள்தான் பெரும்பாலும் முதல்வர்களாக இருந்துள்ளனர். பஞ்சாப் முதல்வராக இருந்த ஜெயில்சிங் ராம்காரியா சமூகத்தைச் சேர்ந்தவர். முதல்வராக இருந்த குர்முக்சிங் முசாபிர் காத்ரி சமூகத்தைச் சேர்ந்வர்.
டென்ட் பாய் சரண்ஜித்சிங்
சரண்ஜித்சிங்கின் தந்தை ஹர்சா சிங், மலேசியாவில் பணிபுரிந்து விட்டு இந்தியா திரும்பி டென்ட் ஹவுஸ் பிசினஸில் ஈடுபட்டார். அப்போது அப்பாவுக்கு உதவியாக இருந்த சரண்ஜித்சிங்கின் பெயருடன் டென்ட் பாய் என்பது ஒட்டிக் கொண்டது. கவுன்சிலராக அரசியல் வாழ்க்கைத் தொடங்கிய சரண்ஜித்சிங் 2007-ல் முதல் முறையாக எம்.எல்.ஏ.வானார். தற்போது 3-வது முறையாக எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் சரண்ஜித்சிங்.