ஹரியானா ராஜ்யசபா தேர்தலில் ட்விஸ்ட்- களத்தில் 'நியூஸ்X' கார்த்திகேய ஷர்மா! காங். எம்எல்ஏக்கள் ஆதரவு?
சண்டிகர்: ஹரியானா ராஜ்யசபா தேர்தலில் கடைசி நேரத்தில் நியூஸ்X டிவி சேனல் எம்.டி. கார்த்திகேய ஷர்மா சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வாக்குகளை இலக்கு வைத்து கார்த்திகேய ஷர்மா களமிறங்குவதால் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் அஜய் மக்கான் வெற்றி பெறுவதும் கேள்விக்குறியாகி உள்ளது.
15 மாநிலங்களில் 57 எம்.பி. ராஜ்யசபா இடங்களுக்கு ஜூன் 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 24-ந் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவடைந்துள்ளது.
இன்று வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள். ஹரியானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ராஜ்யசபா எம்.பி.க்கான வேட்பாளராக மூத்த தலைவர் அஜய் மக்கான் அறிவிக்கப்பட்டிருந்தார். அவரும் நம்பிக்கையுடன் வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
ராஜ்யசபா தேர்தல் வேட்புமனு தாக்கல் ஓவர்.. தமிழகத்திலிருந்து போட்டியின்றி 6 பேர் தேர்வாகிறார்கள்
சுயேட்சையாக வேட்பு மனு
இந்நிலையில் திடீரென ITV நெட்வொர்க் சேனலின் மேனேஜிங் டைரக்டர் கார்த்திகேய ஷர்மா இன்று ஹரியானா சட்டசபை வளாகத்தில் ராஜ்யசபா தேர்தலுக்கு சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்தது பெரும் பரபரப்பை கிளப்பிவிட்டது. ITV நெட்வொர்க் குழுமம்தான் நியூஸ்X டிவி சேனலையும் நடத்தி வருகிறது. ஹரியானா காங்கிரஸில் மூத்த தலைவராக இருந்தவர் வினோத் ஷர்மா. 2014-ம் ஆண்டு கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து ஹரியான ஜன் சேதனா எனும் தனிக் கட்சியை தொடங்கினார் வினோத் சர்மா.
தந்தூரி அடுப்பு படுகொலை மனு ஷர்மா
வினோத் சர்மாவின் மகன் மனு ஷர்மா நாட்டையே பெரும் பரபரப்புக்குள்ளாக்கிய 1999-ம் ஆண்டு மாடலிங் பெண் ஜெசிகா லால் படுகொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர். மாடலிங் பெண் ஜெசிகா லாலை வெட்டி படுகொலை செய்து தந்தூரி அடுப்பில் போட்டவர்தான் மனு ஷர்மா. கடந்த 2020-ல் சிறை தண்டனை முடிந்து வெளியே வந்தார். இந்த மனு ஷர்மாவின் தம்பி தான் இப்போது ஹரியானா தேர்தல் களத்துக்கு வந்துள்ள கார்த்திகேய ஷர்மா. இவரது தந்தை வினோத் ஷர்மா பாஜகவுடன் நெருக்கமாக இருந்து வருகிறார்.
அஜய் மக்கானுக்கு பின்னடைவு
கார்த்திகேய ஷர்மாவின் திடீர் வேட்புமனுத் தாக்கல் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் நிர்வாகிகள், அஜய் மக்கானுக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கார்த்திகேய ஷர்மாவுக்கு வாக்களிக்கக் கூடும். இன்றும் பல காங். எம்.எல்.ஏக்கள் கார்த்திகேய ஷர்மா குடும்பத்துடன் நெருங்கிய தொடர்பில்தான் உள்ளனர். இதனால் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் மக்கான் வெற்றி பெறுவது சந்தேகம் என்கின்றனர்.
2016 நிலைமை
கடந்த 2016-ம் ஆண்டு ராஜ்யசபா தேர்தலின் போதும் ஹரியானாவில் இதேபோல ஒரு கூத்து நிகழ்ந்தது. ஜீ ஊடக குழும அதிபர் சுபாஷ் சந்திரா அப்போது சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அவருக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். இதனால் கட்சி மாறி வாக்களித்ததாக 12 காங். எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருந்தனர். இப்போது சுபாஷ் சந்திரா, ராஜஸ்தானில் போட்டியிடுகிறார். ஹரியானாவில் மீண்டும் அதே போன்ற ஒரு நிலைமை உருவாக உள்ளது என்கின்றனர் சீனியர் பத்திரிகையாளர்கள்.