பஞ்சாப் காங். முதல்வர் வேட்பாளர் யார்? மாற்றி மாற்றி பேசும் நவ்ஜோத் சிங் சித்து! தொண்டர்கள் குழப்பம்
சண்டிகர்: பஞ்சாப் தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் குறித்து பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி தலைவர் நவ்ஜோத் சிங் சித்து முக்கிய தகவலை தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் பஞ்சாப் மாநிலத்திற்கு பிப். 20இல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த 5 மாநிலங்களில் பஞ்சாபில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சியில் உள்ள நிலையில், அதை எப்படியாவது தக்க வைக்க வேண்டும் என்பதால் பஞ்சாப் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது.
காங். கையைவிட்டு போகும் பஞ்சாப்?கடும் போட்டி தரும் ஆம் ஆத்மி.. அத்தனை சர்வேக்களும் சொல்வது இதைத்தான்
காங்கிரஸ்
இருப்பினும், அங்கும் காங்கிரஸ் கட்சிக்குப் பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. அமரிந்தர் சிங் வெளியேறி புதிய கட்சி தொடங்கியுள்ளார். அவருக்குப் பதில் சரண்ஜித் சிங் சன்னி கொண்டு வரப்பட்டார். பஞ்சாபில் சுமார் 30% தலித்துகள் உள்ளதால் அதே சமூகத்தைச் சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னி முதல்வராக நியமிக்கப்பட்டது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது வாக்குப்பதிவில் எதிரொலிக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி தான்.
உட்கட்சி பூசல்
முதலில் நவ்ஜோத் சிங் சித்துவின் ஆதரவாளராகத் தான் சரண்ஜித் சிங் சன்னி அறியப்பட்டார். இருப்பினும், கடந்த சில வாரங்களாக அவருடனும் நவ்ஜோத் சிங் சித்து மல்லுக்கட்டத் தொடங்கியுள்ளார். இது வெல்ல வேண்டிய இடத்தில் காங்கிரஸ் கட்சியே வலியச் சென்று தோல்வியைப் பெறும் நடவடிக்கை எனப் பலரும் கடுமையாகச் சாடி வருகின்றனர். இது ஆம் ஆத்மி கட்சிக்குச் சாதகமாக மாறுகிறது. இதற்கிடையே காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் யார் என்பதிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
முதல்வர் வேட்பாளர்
இந்நிலையில், இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு நவ்ஜோத் சிங் சித்து அளித்த பேட்டியில், "காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும். ஒரு தலைவரின் பண்புகளை ஆய்வு செய்த பிறகே காங்கிரஸ் முடிவெடுக்கும். கட்சித் தலைமை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இதில் கட்சித் தலைமை இறுதி முடிவெடுக்கும். அவர்கள் என்ன முடிவு எடுக்கலாம் அதை நான் ஏற்றுக்கொள்வேன். அதில் சந்தேகம் வேண்டாம்,
ஆம் ஆத்மி
ஆம் ஆத்மி கட்சியைப் பற்றிப் பேசுகிறீர்கள். ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் அனுமதி பெறாமல் ஒரு பிரஸ் மீட் அல்லது ஒரு அறிக்கையைக் கூட சுயமாக வெளியிட முடியாது. இதில் அவர் எப்படி ஆட்சியைப் பிடிக்க முடியும். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வென்று ஆட்சியைப் பிடிக்கும்" என்றார்.
மாற்றி மாற்றிய பேசும் சித்து
முன்னதாக இதே நவ்ஜோத் சிங் சித்துவிடம் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் வேட்பாளர் குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது அதற்கு அவர், "முதல்வர் யார் என்பதைப் பஞ்சாப் மக்கள் தான் முடிவு செய்வார்கள். முதல்வர் யார் என்பதைக் காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும் என உங்களுக்கு யார் சொன்னது? தவறான கணிப்புகளைக் கொண்டிருக்க வேண்டாம். பஞ்சாப் மக்கள் எல்லாம் ஒன்றுகூடி எம்எல்ஏக்களை தேர்ந்தெடுப்பார்கள், யார் முதல்வர் என்பதை அவர்கள் மட்டுமே முடிவு செய்வார்கள்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி அவர் தொடர்ந்து மாற்றி மாற்றிப் பேசுவது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
பஞ்சாப் சூழல்
பஞ்சாப் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. இதைத் தாண்டி முன்னாள் முதல்வர் அமரிந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரசுடன் இணைந்து பாஜக தேர்தலை எதிர்கொள்கிறது. அதேபோல அகாலி தளம் மற்றும் பகுஜன் சமாஜ் சேர்ந்து தேர்தலை எதிர்கொள்கிறது. இதில் தற்போது வரை வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகளில் ஆம் ஆத்மிக்கு கூடுதல் வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.