பாஜக எம்எல்ஏவை... அடித்து துவைத்த பஞ்சாப் விவசாயிகள்... அரசியல் கட்சிகள் கண்டனம்.. வைரல் வீடியோ
சண்டிகர்: பஞ்சாபின் முக்த்சர் மாவட்டத்தில் விவசாயிகள் சிலர் பாஜக எம்எல்ஏ ஒருவரின் ஆடைகளைக் கிழித்து, அவர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராகத் தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்தப் போராட்டம் சுமார் நான்கு மாதங்களுக்கு மேலாகத் தொடர்கிறது.
पंजाब में किसानों ने बीजेपी विधायक अरूण नारंग को पीटा और उनके कपड़े फाड़ दिए...
— Aadesh Rawal (@AadeshRawal) March 27, 2021
(हिंसा ग़लत है) pic.twitter.com/kCDbxwZcsG
அரசின் இந்த புதிய சட்டங்களுக்கு எதிராகப் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகள் கடும் கோபத்தில் உள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் பாஜக பிரமுகர்களைப் புறக்கணிக்கப் போவதாக அம்மாநில மக்கள் அறிவித்துள்ளனர்.
பாஜக எம்எல்ஏ
இந்நிலையில், பஞ்சாபின் முக்த்சர் மாவட்டத்தில் உள்ள மாலவுட் என்ற பகுதியில் பாஜக எம்எல்ஏ அருண் நாரங் என்பவர் செய்தியாளர்களைச் சந்திக்க இருந்தார். அங்குக் கூடியிருந்த விவசாயிகள், அவர் வந்தவுடன் திடீரென்று அவரை சூழ்ந்துகொண்டு, அவர் மீதும் அவரது கார் மீதும் கருப்பு மையை ஊற்றினர். அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உடனடியாக அவரை அருகிலிருந்த ஒரு கடைக்குப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
திடீர் வன்முறை
பின்னர், சிறிது நேரம் கழித்து, போலீசார் அவரை வெளியே அழைத்து வந்துள்ளனர். அப்போது அருண் நாரங் மீது விவசாயிகள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. அவரது ஆடைகள் கிழிக்கப்பட்டு, அவர் மீது கறுப்பு மை ஊற்றப்பட்டது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவர் பத்திரமான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்தவர்கள் தன் மீது தாக்குதல் நடத்தி, ஆடைகளைக் கிழித்ததாக அருண் நாரங் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பாஜக குற்றச்சாட்டு
இந்தச் சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன. அமரீ்ந்தர் சிங் அரசு இதுபோன்ற தாக்குதல்களை ஊக்குவிப்பதாகவும் மாநிலத்தில் சட்ட ஒழுங்கு முற்றிலுமாக சீரழிந்துவிட்டதாகவும் பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது. மாநிலத்தில் பாஜக குரலை இதுபோன்ற வன்முறை தாக்குதல் மூலம் பாஜக ஒடுக்க முயல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
விவசாய அமைப்புகள்
இந்த வன்முறைச் சம்பவத்தைத் துரதிருஷ்டவசமானது என்று குறிப்பிட்டுள்ள காங்கிரஸ், இதுபோன்ற வன்முறைகள் விவசாயிகள் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் என்றும் தெரிவித்துள்ளது. இது குறித்து விவசாயச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எம்எல்ஏ மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது வருந்தத்தக்க விஷயம். இதுபோன்ற வன்முறைச் சம்பவங்களை நாங்கள் ஒருபோதும் ஊக்குவிக்க மாட்டோம். விவசாயச் சங்கங்கள் இதைக் கடுமையாகக் கண்டிக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.